அம்பாப் பாட்டு - 2

1
ஏலோ இலோ ஈலோடு வாங்கு
வாங்குடா தோழா
வாழைத்தார் தருவேன்
தேங்காயும் மிளகும் தெரிவிட்ட பாக்கும்
மஞ்சள் இஞ்சி மணமுள்ள செண்பகம்
செண்பக வடிவேல் திருமுடிக் கழகு
வருகுது பெருநாள் தேரோட்டம் பார்க்க
தேரான தேரு செல்லப் பெண்டாட்டி
மாலை மசக்கி மையிடுங் கண்ணாள்
கண்ணுக்குச் செத்த மையிட வேணும்
பொய்யும் பிறக்குமோ பொய்க் கொடியாளே
நானிட்ட வாளை நல்ல சமத்தன்
கோழைப் பயலே கோமுட்டி வயிறா
உனக்கா எனக்கா பல்லாக்கு தனக்கா
வில்லே சரணம் வேந்தன் பாராய்
குறிப்பு: செண்பக வடிவேல்-வேலனைக் குறிக்கும். வில்லே சரணம், வேந்தன் பாராய்-இது இந்திரனையும், அவனது வில்லையும் குறிக்கும். இப்பாடல் பரதவர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவுமுன் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இப்பொழுதும் பாடப்படுகிறது.
------------
2
நாலு தண்டாம் பலவனாக்கு
நடுவ ஒரு பாய் மரமாம்
பாயிழுத்துக் கோசு ஊணி
பருமலுடன் சலுத்தணைந்து
சல் சல்லடம் சடுக்காப்பையா
நீயும் போடா கொய்யாக் கள்ளா
கொய்யாப் பழத்தின் ருசியும்
கொண்டு வந்தாலே தெரியும்
பாரக் கலவா பாப்பர மூஞ்சான்
சேரப்படுக்கும் செல்ல விலை மீன்
பாரக் குழலோ மேக வெளியாய்
ரஞ்சித நடையாள் கெஞ்சுது பாராய்
பண்ணி கிடந்து உறுமுது பாரு
பண்ணியடா ஒரு காட்டுப் பண்ணி
இன்னொரு பண்ணி வீட்டுப்பண்ணி
குறிப்பு: இப்பாட்டில் படகைக் கடலில் இறக்கிச் செலுத்தும் வரையுள்ள வேலைகள் வரிசையாகக் கூறப்படுகின்றன. மீன்களது பெயர்களும் ஒன்றிரண்டு கூறப்படுகிறது. அராபிய முஸ்லீம்களோடு செய்து சண்டையால் ஏற்பட்ட வெறுப்பு அவர்களைக் கேலி செய்யும் முறையில் `பண்ணி` என்ற வார்த்தையில் வெளிப்படுகிறது. `பன்றி` என்பது மக்களுக்குப் பிடிக்காது.
-----------
3
மணப்பாட்டுத் திருநாள் வருகுதடி
மதினியை ஒரு சத்தம் போடாதடி
கோட்டாத்துத் திருநாள் வருகுதடி
கொழுந்தியை ஒரு சத்தம் போடாதடி
வாடை முந்தும் கோடை முந்தும்
மாசி மாதம் கொண்டல் முந்தும்
காத்தடிச்சிக் கடல் கலங்கும்
கல்லு போட்டாத் தலை உடையும்
ஓடும் கடல் தனக்கு
உடையவளே எந்தனுக்கு
உல்லன் தட்டிப் பாயுதடி
ஓடப் படிகரை மடியை
உண்ணாமல் திண்ணாமல்
ஊர்ப்பயணம் போகாதடி
ஆளை எண்ணிப்படி போடம்மா
ஆரோக்கிய மாதாவே
--------
4
அல்லாவோட காவலுல
ஆபத் தொன்றும் வாராம
பெரிய உந்தன் காவலுல
பேதகங்கள் வாராம
மரியே உன் காவலுல
மனதிரக்கம் வைப்பாயே
காப்பாத்த வேணுமம்மா
கன்னிமரித்தாயே நீ
பாவிக்கிரங்கும் பரிசுத்த மாதாவே
மாதாவே என்றால் மலையும் இளகுமம்மா
கர்த்தரே என்றால் கல்லும் இளகுமம்மா
கல்லும் மலையும் கரம்பக் கயிறாமோ
வில்லோ சரணமம்மா வேந்தன் மகனார்க்கு
---------
5
வாளா வலை முடிந்து வங்கடைக்கு மால் முடிந்து
கோலா வலை முடித்து குறுக்கட்டாமல் முடித்து
காஞ்சி வனமடியே கள்ளரோட காடடியே
இருளடைந்த சோலையிலே இணைபிரிந்த மான் போல
மானோடா ஓடுறது மறியடா நல்ல தம்பி
மானோடும் தூரமெல்லாம் தானோட வல்லவியோ
வள்ளம் வித்தேன் வலையும் வித்தேன்
வாளா வலை புனையும் வித்தேன்
கொம்பை வித்தேன் குழலை வித்தேன்
குடிக்க இருந்த செம்பை வித்தேன்
எல்லாம் வித்துக் கள் குடித்தேன்
ஏங்குனாப்பில தூங்கிவிட்டேன்
தூங்கி முழிச்சபய தோணி கட்டி வாழ்ந்தபய
வாராயோ காத்த நீயே வளம் பெரிய சோழகமே
சோலையிலே அவ கிடந்து
சுட்ட நண்டுக்கால் பெறக்கி
கால் வழியே ஓடுதம்மா கடிக்கு தம்மா கட்டெறும்பு
கட்டச்சியோ நெட்டச்சியோ
காயலான் தங்கச்சியோ
தங்கச்சியோ பட்டணத்தாள்
தனியே நல்ல முரசு விட்டாள்
போடு லக்கை போடு லக்கை
கைமாத்திப் போடுலக்கை
கள்ளன் வந்தான் திருடன் வந்தான்
கட்டாமைக் காரன் வந்தான்
------------
6
சிலுவை வரைந்து கொண்டேன்
திருப்பாதம் தெண்டனிட்டேன்
கன்னி மேரி மாதாவே
கர்த்தா வே காத்தருளும்
காணிக்கை நேர்ந்தனம்மா நான் ஒரு
கைக் குழந்தை வேணுமின்னு
தெற்கே திருப்பதியாம்
தேவ மாதா சன்னதியாம்
மறப் பதில்லை திருப்பதியை
மனப் பாட்டு முனைக் குருசை
குருசே உனைத் தொழுவேன்
கும்புடுவேன் ஆதரிப்பாய்
வேளையிது வேளையம்மா
வேளாங்கண்ணி மாதாவே
மாதாவே உன்னுதவி-உன்
மகனுதவி வேணுமம்மா
தாயே உனதடிமை
தற்காக்க வேணுமம்மா
நண்டு படும் தொண்டியடா
நகர படும் நம்புதாளை
நம்பிக்கை உண்டுமம்மா
நமக்குதவி நாயனுண்டு
நாயன் அருளாலே
நான் பாடவே துணிந்தேன்
நமக்குப் படைகளுண்டு
நாத சுரக் காரருண்டு
பிச்சிச் சரமோ-நீ
பின்னி விட்ட பூச்சரமோ
பூவைச் சொரிந்தவள் நீ
போன வழி வாராளடா
பச்சை மணக்குதடி
பாதகத்தி உன் மேலே
எல்லை கடந்தாளடி
இலங்கை வனம் கடந்தாள்
தில்லை வனம் கடந்தாள்
திருவணையும் குற்றாலம்
பாராமல் போராளடி
படமெடுத்த நாகம் போல
வட்டார வழக்கு: பலவனுக்கு-பலவை நாக்கு ; கோசு-முன் வாயில் கட்டும் கயிறு ; பருமல்-பாயுடன் சேர்ந்த கம்பு ; சலுத்து-பருமலும் பாய்மரமும் சேர்த்துக்கட்டும் கயிறு ; பாரக் கலவா, பாப்பரமூஞ்சன்-மீன்களின் பெயர்கள் ; வாளா, வங்கடை, கோலா, குருக் கட்டா- மீன்களின் பெயர்கள் ; இவற்றைப் பிடிக்கத் தனித்தனி வலைகள் உண்டு.
குறிப்பு : இவை போன்ற பாடல்கள் பலவற்றை ஆ.சிவசுப்பிரமணியன் சேகரித்துள்ளார்.
சேகரித்தவர் :பீட்டர் முறாயீஸ்; அனுப்பியவர்: S.S. போத்தையா
இடம் : தூத்துக்குடி