ஈசன் உமையைக் காணுதல்

பின்பு, பார்வதியம்மையாருடைய அன்பையும் காதலையும் ஈசன் உமையைக் எல்லோரும் அறியக்காட்டத் திருவுளங் கொண்டார் ஈசன், செக்கச் சிவந்த காவியுடை உடுத்தார்; சிகையை முடித்தார்; வெண்ணீறு அணிந்தார்; கமண்டலத்தைக் கையில் எடுத்தார்; ஒலைக்குடையைப் பிடித்தார்; நெடுங்கழியை ஊன்றினார்; விருத்தர் போன்ற வடிவம் கொண்டு சென்றார். மலையரசன் மகள் தவம் புரியும் சாலையை அவர் அடைந்த பொழுது, அங்கு வாயில் காத்து நின்ற மாதர்கள் அவரைப் பார்த்து, "தளர்ந்த நடையுடைய பெரியவரே! இம் மலையிடை வருதல் எளிதன்றே! இங்கே நீர் வந்த காரணம் யாது?” என்று வினவினர். அது கேட்ட விருத்த வேதியர், "இம் மலையரசன் புதல்வி செய்யும் தவத்தை அறிய விரும்பி இங்கு மனமகிழ்ந்து வந்தோம்” என்றார். அந் நிலையில், அவரைப் பணிப்பெண்கள் தவச்சாலையினுள்ளே போகவிட்டார்கள். அங்கு நின்ற நங்கையை விருப்புடன் பார்த்தார், வேதியர்; "சொல்லுதற்கரிய பேரழகு அழியவும், அங்கமெல்லாம் வற்றி ஒடுங்கவும் நீ அருந்தவம் செய்கின்றாயே! எப்பொருளை விரும்பி இத்தவம் செய்கின்றாய்?" என்று வினவினார்.
"ஐயனே? மன்னுயிர்க்கு உயிராகிய ஈசனை மணாளனாகப் பெற்று, அவர் பாதத்தில் இருக்கக் கருதியே இக் கன்னி மெய்த்தவம் இயற்றுகின்றாள்" என்று மங்கையின் தோழி மறுமொழி கூறினாள். அது கேட்ட முதியவர் நகைத்து, "உலகத்தை யெல்லாம் படைக்கும் பிரமனும், காக்கும் மாயவனும் தேடுதற்கரிய தேவதேவன், இவள் செய்யும் தவத்திற்காக வருவானோ? வந்தாலும் இவளை விரும்பி மணம் புரிவானோ? அறியாமல் உமையவள் தவம் புரிகின்றாள். சங்கரன் எளிதில் அருள்வானோ?” என்றார்.
அம் மொழி கேட்ட உமையவள் சீற்றங்கொண்டு "என்றும் உள்ள எம்பெருமான் என் விருப்பத்தை நிறைவேற்றாவிடினும், நான் தவத்தினை விடுவேனோ? இத் தவம் போதாதாயின் இன்னும் கொடிய நோன்புகளை மேற் கொள்வேன்; உயிரையும் விடுவேன். நீ சால முதுமையுற்றாய்; ஆதலால் மயக்கம் கொண்டாய். அன்றிப் பித்துக் கொண்டு பேசுகின்றாயோ?” என்றாள்.
உமையவள் சீற்றத்தை உணராதவர்போல் முதியவர் மேலும் பேசலுற்றார். "மாதே! அச் சிவபிரான் தன்மையை நீ அறிந்திலை போலும்! அவன் உடுப்பது தோலாடை ஏறுவது வெள்ளேறு: அணிகலன் அரவும், பிறவும்: கையில் எடுப்பது கபாலம்; உண்பது நஞ்சு; நடமாடும் இடம் சுடுகாடு; அவனுக்குத் தாயில்லை; தந்தையில்லை; சுற்றத்தார் யாரும் இல்லை; வடிவம் இல்லை; குணமும் இல்லை; முன்னே சொல்லிய தோலாடை போன்ற பொருள்களே அவனிடம் பலவுண்டு. அவற்றைப் பெற விரும்பித்தான் தவம் செய்து மெலிகின்றாயோ? பழமையும் பெருமையும் வாய்ந்த மலையரசன் திருமகளாய்த் தோன்றிய உனக்கு இது தகுமோ?" என்று பேசினார்.
அந் நிலையில் "சிவ சிவ" என்று செவிகளைப் பொத்திக்கொண்டு, "கிழவா! கேள். அந்தமில்லாத எம்பிரானிடத்து உனக்கு அன்பு இறையளவும் இல்லை. காட்டிலுள்ள புதரிலே மறைந்து நின்று பறவை பிடிக்கும் வேட்டுவனைப் போல் நீ சிவ வேடம் கொண்டாய். உன்னைப் போல் நேசமின்றி ஈசனை இகழ்ந்து பேசிய தக்கன் பட்ட பாட்டை நீ அறியாயோ? என் முன்னே நின்று அப்பெருமானை ஏளனம் செய்தாய். இத்தனை வயது சென்றும், இன்னும் மாசற்ற மறைகளில் ஒன்றும் நீ அறிந்திலை போலும்! இங்கே நீ நிற்றல் ஆகாது” என்று சீற்றமுற்றாள், உமையம்மை.
அறப்பெருஞ் செல்வி இங்ஙனம் பேசியபோது, "அணங்கே! உன்னிடம் ஆசையுற்று இங்கு வந்தடைந்தேன். நான் வந்த காரியத்தைக் கேளாமல் "வெளியே போ" என்று உரைக்கலாமோ? அது பொருந்துமோ? இங்கே நான் வந்தது உன்னை வேதமுறையில் மணம் செய்வதற்கே ஆகும்" என்றார்,முதியவர்.
வஞ்சகத்தில் முதன்மை பெற்ற கிழவர் பேசிய ஓவாசகத்தைக் கேட்டபொழுது, உமையவுள் இருசெவிகளையும் இறுகப் பொத்தினாள். பொறுக்க முடியாத வருத்தமுற்றாள்; அங்கமெல்லாம் நடுங்கி விம்மினாள்; "போ என்றாலும் இக் கிழவன் போக மாட்டான் போலும்! நானே இவ்விடத்தை விட்டு அகல்வேன்" என்று பஞ்சு போன்ற திருவடிகள் சிவக்க நடந்து சென்றாள்.
மலைமகளின் தவக் கோலத்தை நோக்கினார், சிவ பெருமான்; அளவிறந்த கருணை கொண்டார்; முதுமைக் கோலத்தை விட்டார்; சிவகணங்கள் சூழ்ந்து போற்றச் சிறந்த மழவிடையின் மேல் எழுந்தருளிக் காட்சியளித்தார். மெய்ப் பொருளாகிய நாயகனைக் கண்டாள், மலைமகள்; நாணத்தால் மேனி நடுங்கினாள்; கீழே விழுந்து வணங்கினாள்; கையெடுத்துப் போற்றினாள்; "அறிவினால் அறிய வொண்ணா ஆதி பகவனே! நின் மாயா விலாசம் அறியாது மதியிலேன் பேசிய சிறு மொழிகளைப் பொறுத்தருளல் வேண்டும்” என்றாள்.
"நற்றவம் புரிந்த மாதே! கேள்! நம்பால் வைத்த அன்பினால், நீ முன் பேசிய மொழிகளை யெல்லாம், இப்பொழுது உரைத்த துதிமொழி போலவே ஏற்றுக் கொண்டோம். குற்றமிருந்தால் அன்றோ பொறுத்தல் வேண்டும்? கொடிய தவத்தைச் செய்து இன்னும் வருந்தாதே. நாளையே நின்னை மணம் புரிய வருவோம்" என்று அருளினார், ஈசன்.
மணம் பேசுதல்
இங்ஙனம் இமயமலையிற் பூங்கொடி போன்ற உமையவள் தவத்தினைக் கண்டு திருவருள் புரிந்த ஈசன்,கயிலையங்கிரியை அடைந்து, சப்த ரிஷிகள் எனப்படும் எழுவகை முனிவரையும் மனத்திலே நினைத்தார். அம் முனிவர்கள் விரைந்து கயிலை மலையை அடைந்து, "எம் தந்தையாகிய ஆண்டவனே! நும் கருணையால் எம்மை நினைக்க, இங்கு வரப்பெற்றோம். ஆதலால், அடியேங்கள் பிழைத்தோம்; கொடிய தீவினையும் தீர்ந்தோம்; இனி, எமக்கு ஒரு தீங்கும் உண்டோ?” என்று தொழுது நின்றார்கள். ஈசன் அவரை நோக்கி, "இமயமலை யரசனிடம் நீங்கள் சென்று, இன்றே உமையவளை எமக்குத் தாரை வார்த்துத் தரும்படி கேட்டு, விரைவில் இங்கு வரல் வேண்டும்” என்றார். அப் பணி தலைமேற்கொண்ட சப்த முனிவரும் மலையரசன் மாளிகைக்குச் சென்றார்கள். அவர்களைக் கண்ட அரசன் மனமகிழ்ந்து, "ஐயரே! உம்முடைய திருவடிகள் தோயப்பெற்ற இமயமலை, மாமேரு மலையினும் புனிதமாய் முதன்மை யுற்றது. பல நாள் நான் செய்த பாவமும் இன்றே நீங்கிற்று. நீங்கள் அடியேன்பால் வந்த காரியம் யாது? சொல்ல வேண்டும்” என்றான். அது கேட்ட அருந்தவ முனிவர், "உலக மாதாவாகிய உமாதேவியைத் திருமணம் புரியக் கருதி, மன்னுயிர்க்கெல்லாம் உயிராக விளங்கும் சிவபெருமான், எம்மை உன்னிடம் அனுப்பினார். இதுவே யாங்கள் வந்த காரியம்” என்று உரைத்தார்கள், மன்னனும் மனமிசைந்து, "எல்லா உயிர்களையும், உலகங்களையும் ஈன்ற உமையாளை ஈசனார்க்கு மணம் செய்து கொடுத்து, என்னையும் அடிமையாகத் தருவேன்” என்றான்.
அப்பொழுது அருகே நின்ற அவன் மனையாள், சிறிது வாடிய முகத்தோடு, "ஐயன்மீர்! பிரமதேவனுடைய புதல்வனாகிய தக்கன், தன் ஒப்பற்ற திருமகளை ஈசனுக்கு மணம் செய்து கொடுத்தான் என்றும், அங்ஙனம், கொடுத்த தக்கன் தலையை, அப் பெருமான் தகர்த்தெறிந்தார் என்றும் சொல்கின்றார்களே! அந் நிகழ்ச்சியை நினைத்தால் என் நெஞ்சம் அஞ்சுகின்றதே! எமது குலமகளை அவர்க்குக் கொடுப்பது எப்படி?” என்று கூறினாள். இவ்வாறு அஞ்சி வினவிய மலையரசியின் மனத்தைத் தெளிவிக்கக் கருதிய முனிவர்கள், "மாதே, நீ சிறிதும் வருந்தவேண்டா. தன்னிகரில்லாத் தலைவன் செய்கையை நீ நன்றாக உணரவில்லை. தக்கன் தவறு செய்தான். அவன் ஆக்கிய வேள்வியில் ஆதி முதல்வனாகிய ஈசனுக்கு அவிர்ப்பாகம் கொடுக்க மறுத்தான்; அப் பெருமானை இகழ்ந்தும் பேசினான். அதனால், ஈசன் அவன் தலையை அறுத்திட்டார்” என்று கூறிய பொழுது, அரசியும் கவலை தீர்ந்து திருமணம் செய்து கொடுக்க இசைந்தாள்.
மலையரசன் திருமணத்திற்கு இசைந்த செய்தியை முனிவர்கள் ஈசனிடம் போந்து விண்ணப்பம் செய்தார்கள். பெருமான், எழுவர்க்கும் திருவருள் புரிந்து விடை கொடுத்தார். ஈசனாரது சேவடி தொழுது அன்னார் தம் இருப்பிடம் சேர்ந்தார்கள்.
மலையரசன் உடனே தேவ தச்சனை அழைத்து, "என்னை யாளுடைய சிவபெருமானுக்கு, யான் பெற்ற உலக மாதாவாகிய உமையவளைத் திருமணம் செய்து கொடுக்கப் போகின்றேன். ஆதலால், இம் மாநகர் முழுவதும் பொன்னுலகம் போன்று அழகுற இலங்கும் வண்ணம் அலங்கரிப்பாயாக" எனப் பணித்தான்; பின்னர் திருமால் பிரமன் முதலிய தேவர்களும், மாதவ முனிவர்களும், அவர்தம் பன்னியரும் அன்புடன் உமையவள் திருமணத்திற்கு எழுந்தருளும் வண்ணம் எங்கும் தூதரை அனுப்பினான்.
செந்தாமரையில் வாழும் திருமகள் முதலிய மாதர்கள், நெடுங்காலம் நோன்பியற்றி அங்கமெல்லாம் நொந்த உமையம்மையைத் தொழுது, மங்கலமாகிய மணக்கோலம் செய்தார்கள்; இறைவனை வழிபடும் அன்பர் போல ஆர்வத்தோடு உமையம்மையின் தவக் கோலத்தைக் களைந்தார்கள்; அழகெலாம் ஒருங்கே வாய்ந்த மங்கையின் மேனியைக் குறையற்ற முறையில் கோலம் செய்தார்கள்.
ஈசன் திருமணத்திற்கு எழுந்தருளல்
இவ் வண்ணம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் மலையரசன், நெருங்கிய சுற்றத்தோடும், நிறைந்த அன்போடும் திருக்கயிலாய மலையை அடைந்தான்: நந்தி தேவரது ஆணை பெற்று, உயிருக்குயிராகிய சிவபெருமான் சேவடியை வணங்கி நின்று, "எம்பெருமானே! ஆதியில் அகில உலகமும் ஈன்றருளிய அன்னையைக் காதலோடு மணம்புரியத் திருவுளம் கொண்டீர்! சோதிட நூலோர் குறித்த நன் முழுத்தம் பங்குனி உத்தரமாகும். அந் நாளே இந் நாள் ஆதலால், இமயமலைக்கு எழுந்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தான். ஈசன் அதற்கு இசைந்தருளினார். மலையரசன் விடை பெற்றுச் சென்றான்.
உடனே ஈசன், நந்தி தேவரைக் கருணையோடு அழைத்தார்; "நம் திருமணத்தைக் காண்பதற்குச் சிறந்த உருத்திர கணங்கள், திருமால் முதலாயினோர், இந்திராதியர்கள் எல்லோரையும் வரவழைப்பாயாக” எனப் பணித்தார். ஆணைப்படியே எல்லோரையும் நந்திதேவர் வரவழைத்து, உருத்திரர்கள், சிவகணங்கள், தேவர்கள் - இவர்களைத் தனித் தனியாக வகுத்துத் தம் கை விரலாற் சுட்டி, ஈசனிடம் காட்டிப் பிரம்பேந்தி நின்றார். அப்பொழுது பிரமதேவன், பலவகை நகைகளைப் பொற்பீடத்தின்மீது வைத்து எடுத்துக்கொண்டு வந்து, ஈசன் முன்னே வைத்து, வணங்கி, "ஐயனே! உமக்கு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. அடியேம் உய்யும் வண்ணம் மணம் புரியத் திருவுளம் கொண்டீர். ஆதலால், திருமேனியில் அணிந்துள்ள அரவப் பணியெல்லாம் களைந்து, இச் செவ்விய அணிகளை அணிந்துகொள்ள வேண்டும்” என்றான். அப்பொழுது பெருமான் புன்னகை கொண்டு, "அன்புடன் நீ தந்த இந் நகைகளை நாம் அணிந்துகொண்டாற் போலவே மகிழ்வுற்றோம்!” என்று தம் திருக்கரத்தால் அவற்றைத் தொட்டு அருளினார். பின்பு, தம் திருமேனியில் அமைந்த அரவங்களே
ஆபரணமாக விளங்கும்படி ஈசன் தம் திருவுள்ளத்திலே கருதினார். அவை அவ் வண்ணமே ஆயின. உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளாகிய ஈசனுக்கு இச் செயல் அரிதாகுமோ? அதனைக் கண்டு யாவரும் கை கூப்பித் தொழுது நின்றார்.
முன்னொருகால் திருமாலும் அயனும் தேடிக் காணாத தேவதேவன், உமாதேவியாரிடம் செல்லத் திருவுளம் பற்றினார்: அக் கருத்தை அங்கேயிருந்த தலைவர்க்குக் குறிப்பினால் உணர்த்தினார்;இமயமாமலைக்கு எழுந்தருளினார்.
ஈசனார் மணக்கோலங்கொண்டு இமய மாமலையிலே எழுந்தருளியபோது, மங்கையர், அப்பெருமானது அற்புதத் திருவுருவைக் கண்டு வணங்கிக் கங்கு கரையற்ற காதல் வெள்ளத்திலே மூழ்கினர்; "எம்பெருமான் அணிந்துள்ள நகைகளும், தரித்துள்ள பொன்னாடையும், பூசியுள்ள கலவைச் சந்தனமும், புனைந்துள்ள புதுமலர் மாலைகளும் அவருடைய இயற்கையான பேரழகை மறைத்தனவே,” என்று மனந் தளர்ந்தர், சிலர். முறுக்கமைந்த நெடுஞ்சடை முடியுடைய செம்மேனி எம்மானை நோக்கி நின்று மனம் உருகினார், சிலர்; காதலுற்று வெதும்பிக் கருகினார், சிலர்; தோழியரோடு பெருகும் காதலைப் பேசினார், சிலர். "பல பல பேசுதலால் வரும் பயன் என்னை? பெற்றம் ஊர்ந்த பெருமானை மணந்திட மலைமகள் பெருந்தவம் புரிந்தாள். நாம் அவ்வாறு செய்தோமில்லை” என்று பெருமூச்சு எறிந்தார், சிலர்.
இங்ஙனம் இறைவன் பவனி வரும் பொழுது, திருமண விழாவினைக் காணும்பொருட்டு எல்லாப் புவனத்தில் உள்ளவர்களும் வந்து சேர்ந்தமையால் இமயமலை வருந்தி நடுக்கமுற்றது. பூவுலகத்தின் வடதலை தாழ்ந்தது; தென்தலை உயர்ந்தது. வானவரெல்லாம் ஏக்கமுற்றார். "தீங்கு நேர்ந்ததோ" என்று நிலவுலகத்தார் மயக்கம் உற்றார். பெருமானருகே இருந்த பெரிய முனிவரும் வருத்தமுற்றார். எல்லோரும் "சிவனே! சிவனே! என்று ஒலமிட்டுச் சிந்தை தளர்ந்தார்.
அது கண்ட ஈசன் புன்னகை புரிந்து, அடியார் துயரம் தீர்க்குமாறு, நந்திதேவரை நோக்கி, "கடலைக் கையகத் தடக்கிய அகத்திய முனிவரை இங்கு அழைத்து வருக” என்றார், முனிவரும் வந்து இறைவன் திருவடியிற் பணிந்தார். அந் நிலையில், ஈசன் "குறுமுனியே! இவ்விமய மலைக்கு யாவரும் வந்தமையால் வடதிசை தாழ்ந்தது; தென் திசை உயர்ந்தது; ஆயினும், முனிவா! ஒப்பற்ற நீ இம் மலையினின்றும் நீங்கி வளமார்ந்த தென்னாட்டிற் போந்து, பொதியமலையில் அமர்வாயாயின்,உலகமெல்லாம் முன்போலவே சமநிலை யடைந்து விளங்கும்” என்றார்.
பிறை யணிந்த பெருமான் இங்ஙனம் பணித்தபோது இனிய மொழியுடைய தமிழ் முனிவன் அச்சம் எய்தி, "ஐயனே! அடியேன் செய்த குற்றம் ஏதேனும் உண்டோ? திருமணம் காண ஆசையுற்று வந்த தீவினையேனாகிய என்னை இங்கே இருக்கப் பணியாமல் நெடுந்தூரம் செல்லப் பணித்தீரே!” என்று வருந்தினான்.
அப்பொழுது எம்பெருமான் முனிவரை அமர்ந்து நோக்கி, "உன்னைப் போன்ற முனிவர்கள் உலகத்தில் உண்டோ? அன்னவாகனம் உடைய பிரமனும் உனக்கு நிகரல்லன், ஆதலால், நீ கருதிய எல்லாம் தவறாமல் முடிப்பாய். வேறுள்ள முனிவராலும் தேவராலும் இக் காரியம் ஆகுமோ? யாவரினும் சிறந்த பேறு பெற்ற உன்னாலேயே முடியும். ஆதலால், இப்பொழுதே புறப்படு” என்று அருளிச்செய்தார்.
அவ்வுரை கேட்ட முனிவர், "எம்பெருமானே! இப் பணியை எனக்கு அருள்கூர்ந்து அளித்தீர்! ஆயினும் இங்கு நிகழவிருக்கும் தெய்வத் திருமணக் காட்சியைக் கண்டு வணங்காமல் போவதற்கு இயலவில்லையே! நெஞ்சம் வருந்துகின்றதே!” என்று விண்ணப்பம் செய்தார். அம் மொழி கேட்ட கயிலைநாதன், "முனிவா! மனம் வருந்தாதே பொதிய மலைக்குச் செல். அங்கே வந்து நாம் திருமணக்காட்சி தருவோம். மனமகிழ்ந்து காண்பாயாக. எம்மை நினைத்து அம் மலையிற் சில காலம் இருந்து, பின்னர் முன்போலவே எம்மிடம் வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
தமிழ் முனிவன் மனமகிழ்ந்து, சிவபெருமான் சேவடியைப் பன்முறை வணங்கிக் கை கூப்பித் தொழுது, பெருமூச் செறிந்து, பிரியா விடை பெற்றுத் தென்திசை நோக்கிச் சென்றான். பொதியம் என்னும் பேர் பெற்ற மலையில் முனிவன் போய் அமர்ந்தபோது வடதலையும் தென்தலையும் துலாக்கோல் போல் சமனாகி நின்றன. உயிர்கள் எல்லாம் துயரம் ஒழிந்து, ஈசனைத் துதித்து மகிழ்ச்சியுற்றிருந்தன.