உப்பளப் பாடல்

காரப்பாடு அளத்திலேயும்
கழுத்து அளவு தண்ணிலே
நீந்தத் தெரியாம
நிற்கிறாளே என் தோழி
கங்காணி கோவத்துக் கோ
கடல் தண்ணி ஏத்தத்துக்கோ
நம்மளோட கோபத்துக்கோ
நடந்திட்டாலும் குத்தமில்லே
சம்பங்கி எண்ணெய் தேய்த்து
சாட்டைபோல முடிவளர்த்து
பந்துபோல கொண்டைபோட்டு
பாத்திக்காடு வாரதெப்போ
கருவலம்பூ கட்டை வெட்டி
கைக்கிரண்டு பலகை சேர்த்து
இன்பமான பாத்திக்குள்ளே
தங்க நின்னு வாரேனே
சாப்பிட்டுக்கை கழுவி
சமுக்கத் துண்டு கையிலெடுத்து
வாராங்க எங்க மச்சான்
வரளி மணி உப்பளக்க
இரும்பு இரும்பு திராசிகளாம்
இந்திர மணி தொட்டிகளாம்
சரிபார்த்து திராசி விடும்
தங்க குணம் எங்கமச்சான்
கண்ணாடி கால் ரூவா
காவக் கூலி முக்கால்ரூவா
தூப்புக் கூலி ஒத்தரூவா
துலங்குதையா மச்சாது அளம்
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லிகைப்பூ லாடம்கட்டி
அடிக்கிறாரையா கங்காணம்
அளத்து மண்ணு தூள் பறக்க
வேலை செய்யும் பாத்திக்காடு
விளையாடும் தட்டு மேடு
கூலி வாங்கும் கிட்டங்கிகளாம்
கூட்டம் போடும் சாயாக் கடைக
காலுலே மிதியடியாம்
கனத்த தொரு கங்காணி
நாவிலொரு சொல்லு வந்தா
நாலாயிரம் பெண் வருவோம்
வட்டார வழக்கு: மச்சாது-உப்பளச் சொந்தக்காரர் Machado.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம்: மீளவிட்டான்,தூத்துக்குடி, நெல்லை மாவட்டம்.
------------