உறங்கிட்டியே சண்டாளி!

இரவில் சந்திப்பதென காதலர் இருவர் முடிவு செய்திருந்தனர். காதலி மெதுவாக வந்து திண்ணையில் இருந்தாள். வீடு பூட்டியே இருந்தது. எதிர் வீட்டில் இருந்த காதலன் குறித்த நேரத்துக்கு மேடை மீது வந்து பார்த்தான். எதிர் வீட்டுக் கதவு பூட்டியிருந்தது; வெகு நேரம் நின்று பார்த்தான். கதவு திறக்கவில்லை. ஆத்திரத்தில் ஒரு கல்லை விட்டெறிந்தான். கலகலப்பு ஏற்பட்டது. வீட்டில் உள்ளோர் விழித்திருக்க வேண்டும். அவள் வீட்டினுள் நுழைந்து கொண்டாள். காலையில் தனியாக அவளைக் கண்ட காதலன் "உறக்கம் பெரிதென்று உறங்கி விட்டாயா?" என்று கேட்கிறான். அவளோ, திண்ணையில் நானிருக்க கல்லை விட்டெறிந்தது உன் உடல் கொழுப்பா?" என்று சுடச்சுடப் பதிலுக்கு கேட்கிறாள்.
காதலன்:
கார வீட்டு மேலிருந்து
கல்லை விட்டு நானெறிய
உறக்கம் பெருசின்னு
உறங்கிட்டியே சண்டாளி!
காதலி:
செங்கட்டித் திண்ணையிலே
தங்கக்கட்டி நானிருக்க
கரியோட மூர்க்கமில்லை
கல்ல விட்டு நீ எறிஞ்சே
வட்டார வழக்கு: கரியோட மூர்க்கம்-உடல் கொழுப்பு;
கல்ல-கல்லை; எறிஞ்சே-எறிந்தாய்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி
----------------