எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை

2527
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்
நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. 1
2528
ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்
மருங்கிய மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. 2
2529
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்
பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே. 3
2530
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுபொருள் தானே. 4
2531
திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்
வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. 5
2532
ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்
வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வது வான தனித்தன்மை தானே. 6
2533
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்
செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே 7
2534
புரியும் உலகினிற் பூண்டவெட் டானை
திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்
எரியு மழையும் இயங்கும் வெளியும்
பரியுமா காசத்திற் பற்றது தானே. 8
2535
ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. 9
2536
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவடை யோரே. 10