கருத்து வெளியீட்டில் புதுமை

4.1 வினா எதிர் வினா விடை
ஒருவர் மற்றொருவரை நோக்கி, "முனியன் ஏன் குறை வயதிலேயே இறந்து போனான்?" என்று ஒரு வினா எழுப்புகிறார் என வைத்துக் கொள்வோம். அதற்கு மற்றவர் நேரே பதில் சொல்லாமல், "கெட்ட பழக்கம் உடையவர்களுள் யார் நீடித்து வாழ்ந்தார்கள்?" - என்று தாம் ஒரு வினா எழுப்புகிறார். இந்த வினா, "முனியன் கெட்ட பழக்கம் பல கொண்டவன் ஆதலின் விரைவில் இறந்து போனான்" என்னும் விடையைத் தருவதாகும். இதற்குத் தான் "வினா எதிர் வினாவிடை விடுத்தல்" என்பது பெயர். இனி நூலுக்கு வருவோம்.
மாயை கோயிலுக்குச் சென்ற போது அவளுடன் மிகவும் அழகிய மகளிர் பலர் சென்று கொண்டிருந்தனர். இவர்களைக் கண்ட இளைஞர் பலர் ஒருவர்க்கொருவர் இவர்கள் தொடர்பாக உரையாடிக் கொண்டனர். ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, "கூட்டமாக வரும் இப்பெண்களுள் அழகில் மிகவும் சிறந்தவள் யார்?" என வினவினானாம். அவ்வினாவிற்கு விடையாக, "வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் என்னும் முக்கனிகளுள் மிக்க சுவையுடைய கனி எது என்று கூறுவாய்?" என்ற வினா வந்தது. அதாவது, முக்கனிகளுள் எல்லாமே ஒத்த சுவை உடையன. ஆதலின், இன்னதுதான் சுவை மிக்கது என்று சொல்ல முடியாதது போல், இந்தப் பெண்கட்குள்ளும் இன்னாரே மிக்க அழகுடையவர் என்று சுட்டிக் கூறமுடியாது என்பது உரிய பதிலாகும். பாடல்:
“இக்குழு மகளிருள் யார் வனப்பினால்
மிக்கவள் எனத்தமை வினவினா னெதிர்,
முக்கனிகளுள் சுவை முதிர்ச்சி பெற்றுளது
எக்கனி அதனைநீர் இயம்புவீர் என்பார்” (4-35)
இந்தக் காலத்தில், பெண்களைக் கேலி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தித் தாள்களில் படிக்கிறோம். நடுத்தெருவில் செல்லும் பெண்களைப் பற்றித் திறனாய்வு செய்யும் "வல்லுநர்கள்" எந்தக் காலத்திலும் இருப்பார்கள் போலும் ஆண் - பெண் என்ற இரு வேறு இனத்தைப் படைத்த இயற்கையின் விளையாட்டு போலும் இது. கருத்து வெளியீட்டில் இது ஒரு புதுமை யன்றோ?
4.2 ஒன்றை ஒன்றால் கட்டுதல்
விளவல நாட்டு மக்கள், பொறையும் புகழும், இன் சொல்லும் விருந்தோம்பலும், பெரியோரின் அறிவுரையும் மன அடக்கமும், அறச் செய்கையும் செல்வமும் உடையவர் களாம். இதைச் சிவப்பிரகாசர் ஒரு புதுமையான முறையில் விளக்கியுள்ளார்.
பொறை என்ற கயிற்றால் புகழையும், இன்சொல் என்னும் கயிற்றால் விருந்தையும். பெரியோரின் அறிவுரை என்னும் கயிற்றால் அலைந்து திரியும் மனத்தையும், அறத்தால் (பிறர்க்குக் கொடுத்தலால்) செல்வத்தையும் கட்டிப் போட்டு நிலைபெறச் செய்து விட்டார்களாம். என்பது பாடல்.
“பொறைக் கயிற்றின் புகழை, இன்சொல் எனும்
விறல் கயிற்றின் விருந்தைக், குரவர் சொல்
மறைக் கயிற்றின் மனத்தைத், திருவைகல்
அறக் கயிற்றின் அசைப்பவர் எங்குமே” (3-4)
பொறைக் கயிற்றின் புகழை. “பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்” (156) என்பது திருக்குறள். இன்சொல் கயிற்றின் விருந்தை:- “மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக்குழையும் விருந்து” (90) - குறள்.
குரவர் சொல் கயிற்றின் மனத்தை. “மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவாவரும்” -குறள் - 455
அறக்கயிற்றின் திருவை:
“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
கல்விருந்து ஓம்புவான் இல்” (84)
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள” (52)
பொறையால் புகழையும், இன்சொல்லால் விருந்தையும், குரவர் சொல்லால் மனத்தையும் கட்டுப்படுத்தி நிலை நிற்கச் செய்யலாம். ஆனால், அறத்தினால் திருவைக் கட்டுதல் என்பது அவ்வளவு எளிய செயலன்று.
காக்கைபோல் கரவாமல் எல்லாருக்கும் உதவிக் கொண்டு இருந்தால் செல்வம் நிலைக்குமா? ஒரு போதும் நிலைக்காது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன? காக்கை போல் மறைக்காமல் பலருக்கும் உதவுபவரிடமே செல்வம் இருக்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாறாக, பிறர் ஈட்டிய செல்வத்தையோ - தீய வழிகளில் ஈட்டிய செல்வத்தையோ வைத்துக் கொண்டு பிறருக்கு உதவாதவரிடத்தில் செல்வம் இருக்க அரசு உடன்படலாகாது; அச்செல்வத்தை அரசு பறிமுதல் செய்து பலருக்கும் உதவும்படியான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே இதற்கு உரிய சிக்கல் தீர்வாகும். இதைத்தான் திருவள்ளுவர் மறைமுகமாகக் கூறியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள என்பதற்கு, ஆக்கம் அன்ன நீரார்க்கே உளவாதல் வேண்டும் என்பது கருத்து. திருவை அறக்கயிற்றால் கட்டுதலும் இன்னதே.
4.3 காராடும் வெள்ளாடும்
காம வேதனை கொண்ட மகளிர் திங்களை நோவதாகக் கூறுவது இலக்கிய மரபு. இங்கே, அல்லமப் பிரபுமேல் காதல் கொண்ட மாயை என்பவள் திங்களை நொந்து புலம்புதலில் சிவப்பிரகாசர் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அதாவது, அவள் கூறுகிறாள்: திங்களே! உடலுக்குள் செல்லுமாறு நஞ்சை உண்டவனாகிய சிவன், நின்னை அவ்வாறு செய்யாமல்,உடலின் உட்பகுதியோடு தொடர்பு இல்லாத முடிமேல் நின்னை வைத்திருப்பது, நீ நஞ்சினும் கொடிய பொருள் என்பதால்தான். உன்னை அமுத கலை என்று சொல்வது, மக்கள் காராட்டை வெள்ளாடு என்று சொல்வது போலாம்.
“அங்கமதில் நஞ்சிருத்தினோன் அங்கமல்லா
அவிர்சடை மேல்
தங்கநினை வைத்திட்டது நின்கொடுமை
கருதித் தானன்றோ
பொங்கும் அமுதகலை என்ன நின்னைப்
புகறல் வெண்திங்காள்
இங்கு மனிதர் காராட்டை வெள்ளா
டென்பது ஒக்குமால்” (5.59)
செம்மறியாட்டின் உடலை நோக்க, காராட்டின் உடல் தெளிவாக - தூய்மையாக இருப்பதால்,காராட்டை வெள்ளாடு என்றனர் போலும். இந்தியர், ஐரோப்பிய வெள்ளையர் போல் இல்லாவிடினும், ஆப்பிரிக்க அட்டைக் கறுப்பர்களை நோக்க ஒரளவு வெள்ளையராவர். காராட்டை வெள்ளாடு என்பதும் இன்னதே!
4.4 கொள்வோர் இல்லாக் குறை:
வனவசை என்னும் நகரத்தில் எந்தக் குறையும் இல்லையாம். அங்ஙன மிருக்கவும், அங்கேயும் ஒரு குறையிருப்பதாகப் புதிய குறை ஒன்று கண்டு பிடித்துள்ளார் சிவப்பிரகாசர். உடை, உணவு, மலர், அணிகலன், மனை முதலியவற்றால் எந்தக் குறையும் இல்லாத அந்த நகரில், கொடுப்பவருக்கு வாங்குபவர் இல்லாதகுறை ஒன்று உள்ளதாம் பாடல்:
“உடுப்போர்க்கு உடுக்கும் துகில்களால்
உண்போர்க்கு உண்ணும் பொருள்களால்
தொடுப்போர்க்கு எடுக்கும் மலர்களால்
அணிவோர்க்கு அணியும் சுடரிழையால்
அடுப்போர்க்கு அடுக்கும் மனைகளால்
குறைபா டுடைய தன்று அதுதான்
கொடுப்போர்க்கு இரப்பார் இல்லாத
குறை ஒன்றுளது கூறுங்கால்” (3.16)
கொடுப்போர்க்குக் கொள்வோர் இல்லாத குறை இருப்பதாகக் கூறியதன் வாயிலாக, அந்நகரின் மாபெரு வளத்தைப் புதிய முறையில் அறிவித்துள்ளார் அடிகளார்.
இங்கே கம்பரின் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது. கோசல நாட்டில் வறுமையே இன்மையால் கொடுக்கும் வள்ளல் செயலுக்கும், பகைவர் இன்மையால் மறத்திற்கும், பொய் இல்லாமையால் உண்மைக்கும், மக்களிடையே கேள்விச் செல்வம் மிக்கிருத்தலால் அறியாமைக்கும் இடம் இல்லையாம். இவ்விதமாக அந்நாட்டின் பெருமையைக் கூறியுள்ளார் கம்பர். பாடல்:
“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர்செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல்கேள்வி ஓங்கலான் (1-2-53)
சிவப்பிரகாசரும் கம்பரும் இவ்வாறு கூறியிருப்பதில் உள்ள உட்கருத்து என்ன?
வரலாற்றாசிரியன் நடந்ததை மட்டும் கூறுபவன். இலக்கிய ஆசிரியனோ, இருந்ததைக் கொண்டு, மேலும் இருக்க வேண்டியதைக் கூறுபவன்.
இந்த அடிப்படையில், ஒரு நாட்டில் உடை, உணவு, உறையுள், செல்வம் முதலியன குறையின்றி நிறைந்திருக்க வேண்டும் என அடிகளார் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.
இதே அடிப்படையில், ஒரு நாடு என்றால், அதில், வறுமை, பகை, பொய், அறியாமை முதலியவை கூடா எனக் கம்பர் மறைமுகமாக வலியுறுத்தி யுள்ளார். இத்தகைய கருத்து வெளிப்பாடுகள் புதுமையா யுள்ளன வன்றோ?