கலியாண மாதத்தில் கவலை

மருதியின் அத்தை மகன் மருதன். இருவரையும் கணவன் மனைவியென்று,ஐந்து வயதிலேயே விளையாட்டாகப் பெற்றோர்கள் கேலி செய்வார்கள். இருவரும் பெரியவர்களாயினர். ஊரில் கொஞ்சம் பணம் படைத்த குடும்பத்தில் பல ஆண்டுகள் மணமாகாத ஒரு பெண்ணிருந்தாள். அவளை, மருதனுக்கு மணம் பேசி திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். பெரியவனான பிறகு மருதியோடு பேசிப் பழக மருதனுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், மணச்செய்தி கிடைத்ததும் மருதி அவனை நாடி ஓடிவந்தாள். அவனிடம் வாதாடிப் பார்க்கிறாள். பணத்தைவிட பழைய நினைவு பெரிதென்று மருதன் எண்ணுவானா? அவர்கள் பேச்சிலேயே இக்கேள்விக்கு விடை கண்டு கொள்ளுங்கள்.
மருதன்:
ஆத்துக்குள்ள ஆத்தாள்
அவளும் நானும் கவிபாட
வாதாடி வாதாடி
வலுவைக் குறைச்ச பொண்ணை
மருதி:
சாமைக்கருது போல
செவத்த புள்ள நானிருக்க
பாழாய்போன அத்தை மகன்
கிழவி மேல் கையைப் போட்டான்
மருதன்:
சிரிச்ச முகத்தோட
சீதேவி போல வந்து
அழுத முகத்தோட
ஆரத்தேடி நிக்கே பொண்ணே?
மருதி:
அஞ்சு வயதிலேயே
அறியாப் பருவத்திலே
கொஞ்சு வயசுலேயே
கூடினது மோசந்தானே
மருதன்:
வாக்கப்பட நல்லாசை
வளவி போடப் பேராசை
கலியாண மாத்தையிலே
கவலை வந்து நோந்ததென்ன?
வட்டார வழக்கு: சாமைகருது-சாமைக்கதிர்; நிக்கே-நிற்கிறாய்;மாத்தையிலே-மாதத்தில்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
---------------