காதம் போய் நில்லச் சொன்னாள்

bookmark

அவள் தாய் தந்தையரை இழந்து விட்டாள். அவளது தாய் தந்தையர் அவளைச் செல்லாக வளர்த்தது, இப்பொழுது அவளது அண்ணன், அண்ணி இருக்கும் பெரிய மெத்தை வீட்டில்தான். ஆனால் அவர்களது மரணத்திற்குத் தான் தன் துக்கம் தீர அழவேண்டுமென்றால் கூட அண்ணி “இந்த வீட்டில் அழக்கூடாது ; வேறு எங்காவது போய் அழு,” என்று கூறியதும், தனக்கு முன்னம் சொந்தமாக இருந்த நிலையையும் தற்போது இருக்கும் நிலையையும் எண்ணி அழுகிறாள்.

காஞ்சியிலே எங்கப்பன் வீடு
கடலைக்காய் மெத்தை வீடு
காசி ராஜன் பெத்த பொண்ணு
கடையோரம் நிண்ணழுதால்
கடைக்குச் சொந்தக்காரி-என்னை
காதம் போய் நில்லச் சொன்னாள்
தூரத்திலே எங்கப்பன் வீடு
துவரைக்காய் மெத்தை வீடு
துளசி ராஜன் பெத்த பொண்ணு
தூணோரம் நிண்ணழுதால்
தூணுக்குச் சொந்தக்காரி-என்னை
தூரம் போய் நில்லச் சொன்னாள்

வட்டார வழக்கு: நில்ல-நிற்க.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
------------