கிடைக்குமுண்ணு எண்ணாதீங்க

காதலன் ஆடம்பரக்காரன். அவனை மணந்து அவள் சுகம் பெறப் போவதில்லையென்று வேண்டியவர்கள் சொல்லுகிறார்களாம். காதலி அவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.
அவள்: அரைக்கீரை சிறு பாத்தி
காலரையும் தூக்கிவிட்டு
நிக்காங்க எங்க மச்சான்
இன்பமாய் தலைப்பாக்கட்டி
பொட்டிடுமோ உங்க நேர்த்தி
பொருந்திடுமோ என் சதுரம்
விட்டுவிடு என்று சொல்லி
வேணவர்கள் சொல்லுதாங்க
அவன்: வெட்டுறாங்க குத்துறாங்க
வேணவர்கள் சொன்னால் என்ன
கம்படி விழுந்தாலும்
கனியை விடப் போறதில்லை
அவள்: கொண்டையிலே பூவிருக்க
குளத்துத் தண்ணீர் நிலம்பாய
கங்கையிலே விழுந்த பூவை
கிடைக்குமின்னு எண்ணாதீங்க
வட்டாரவழக்கு: வேணவர்கள்-வேண்டியவர்கள்.
குறிப்பு: கங்கையில் விழுந்த பூ-`எனக்கு மணம் பேசி முடிக்கு முன் என்னை மணம் செய்து கொள் என்ற பொருள் தோன்றப் பேசுகிறாள்.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம்.
-----------