குன்றுதோறாடல்

bookmark

பாடல் 303
ராகம் - பூர்வி கல்யாணி ; தாளம் - அங்கதாளம் (8) 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தனனந் தனன தந்த ...... தனதான 


அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன் 
அபயம் புகுவ தென்று ...... நிலைகாண 

இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி 
இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே 

எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும் 
இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா 

பதியங் கிலுமி ருந்து ...... விளையாடிப் 
பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 304 
ராகம் - பேகடா ; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2 

தனதன தனன தனதன தனன 
தனதன தனன ...... தனதான 


எழுதிகழ் புவன நொடியள வதனி 
லியல்பெற மயிலில் ...... வருவோனே 

இமையவர் பரவி யடிதொழ அவுணர் 
மடிவுற விடுவ ...... தொருவேலா 

வழுதியர் தமிழி னொருபொரு ளதனை 
வழிபட மொழியு ...... முருகேசா 

மலரடி பணியு மடமகள் பசலை 
மயல்கொடு தளர்வ ...... தழகோதான் 

முழுகிய புனலி லினமணி தரள 
முறுகிடு பவள ...... மிகவாரி 

முறையொடு குறவர் மடமகள் சொரியு 
முதுமலை யழக ...... குருநாதா 

பழகிய வினைகள் பொடிபட அருளில் 
படிபவ ரிதய ...... முறுகோவே 

பருவரை துணிய வொருகணை தெரிவ 
பலமலை யுடைய ...... பெருமாளே. 
பாடல் 305 
ராகம் - ஆரபி; தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன தந்ததான 


தறையின் மானுட ராசையி னால்மட 
லெழுது மாலருள் மாதர்கள் தோதக 
சரசர் மாமல ரோதியி னாலிரு ...... கொங்கையாலுந் 

தளர்மி னேரிடை யாலுடை யால்நடை 
யழகி னால்மொழி யால்விழி யால்மருள் 
சவலை நாயடி யேன்மிக வாடிம ...... யங்கலாமோ 

பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக 
ளணுகொ ணாவகை நீடுமி ராசிய 
பவன பூரக வேகிக மாகிய ...... விந்துநாதம் 

பகரொ ணாதது சேரவொ ணாதது 
நினையொ ணாதது வானத யாபர 
பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய் 

சிறைவி டாதநி சாசரர் சேனைகள் 
மடிய நீலக லாபம தேறிய 
திறல்வி நோதச மேளத யாபர ...... அம்புராசித் 

திரைகள் போலலை மோதிய சீதள 
குடக காவிரி நீளலை சூடிய 
திரிசி ராமலை மேலுறை வீரகு ...... றிஞ்சிவாழும் 

மறவர் நாயக ஆதிவி நாயக 
ரிளைய நாயக காவிரி நாயக 
வடிவி னாயக ஆனைத னாயக ......எங்கள்மானின் 

மகிழு நாயக தேவர்கள் நாயக 
கவுரி நாயக னார்குரு நாயக 
வடிவ தாமலை யாவையு மேவிய ...... தம்பிரானே. 
பாடல் 306 
ராகம் - தோடி; தாளம் - அங்கதாளம் (5) (திஸ்ர ரூபகம்) 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தந்தன தான தான தந்தன தான தான 
தந்தன தான தான ...... தனதான 


வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி 
மஞ்சரி கோவை தூது ...... பலபாவின் 

வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி 
வந்தியர் போல வீணி ...... லழியாதே 

செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை 
திண்டிறல் வேல்ம யூர ...... முகமாறும் 

செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு 
செங்கனி வாயி லோர்சொ ...... லருள்வாயே 

பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு 
பஞ்சற வாது கூறு ...... சமண்மூகர் 

பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது 
பண்டித ஞான நீறு ...... தருவோனே 

குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு 
குன்றவர் சாதி கூடி ...... வெறியாடிக் 

கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு 
குன்றுதோ றாடல் மேவு ...... பெருமாளே.