கும்பகோணம்

bookmark

பாடல் 863
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் 
தந்ததனத் தானதனத் ...... தனதான 

இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட் 
டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு 

எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற் 
றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே 

கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக் 
கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக் 

கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக் 
கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே 

திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் 
டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை 

சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச் 
செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா 

குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக் 
கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே 

கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க் 
கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே. 
பாடல் 864 
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் 
தந்ததனத் தானதனத் ...... தனதான 


தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற் 
றொந்தமெனப் பாயுமுலைக் ...... கனமாதர் 

தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத் 
தொங்கல்மயிற் சாயலெனக் ...... குழல்மேவிச் 

செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச் 
செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே 

சிந்தைதகர்த் தாளுமிதச் சந்தரமுகப் பாவையர்தித் 
திந்திதமனுற் றாடுமவர்க் ...... குழல்வேனோ 

தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச் 
சந்தமயிற் சாய்விலகிச் ...... சிறைபோகச் 

சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத் 
தங்கநிறத் தாள்சிறையைத் ...... தவிர்மாயோன் 

கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக் 
கொண்டுவளைத் தேமகிழச் ...... சுதனீண 

கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க் 
கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே. 
பாடல் 865 
தந்தனா தத்ததன தந்தனா தத்ததன 
தந்தனா தத்ததன ...... தனதான 


கெண்டைநெ ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை 
கெந்தவா சப்புழுகு ...... மணநாறுங் 

கிம்புரீ சக்களப கொங்கையா னைச்சிறிது
கிஞ்சுகா ணப்பெருகி ...... யடியேனும் 

மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி 
வண்டனா கப்புவியி ...... லுழலாமல் 

வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது 
மஞ்சுதா ளைத்தினமு ...... மருள்வாயே 

அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி 
ளைந்துவீ ழப்பொருத ...... கதிர்வேலா 

அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி
னன்புளா ரைச்சிறையி ...... டசுரோரைக் 

கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு 
கொந்தியா டத்தலையை ...... யரிவோனே 

கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு 
கும்பகோ ணத்திலுறை ...... பெருமாளே. 
பாடல் 866 
தந்தனா தத்தத் ...... தனதான 


பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர் 

பங்கமார் தொக்கிற் ...... படியாமற் 

செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன் 

செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ 

பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர் 

பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா 

குஞ்சா£ வெற்புத் ...... தனநேயா 

கும்பகோ ணத்திற் ...... பெருமாளே. 
பாடல் 867 
தானதன தந்த தானதன தந்த 
தானதன தந்த ...... தனதான 


மாலைதனில் வந்து வீதிதனில் நின்று 
வாசமலர் சிந்து ...... குழல்கோதி 

வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க 
மால்பெருகி நின்ற ...... மடவாரைச் 

சாலைவழி வந்து போமவர்க ணின்று 
தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித் 

தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி 
சாலமிக நொந்து ...... தவியாமற் 

காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்தி 
காதலுமை மைந்த ...... எனவோதிக் 

காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள் 
காண அரு ளென்று ...... பெறுவேனோ 

கோலமுட னன்று சூர்படையின் முன்பு 
கோபமுட னின்ற ...... குமரேசா 

கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப 
கோணநகர் வந்த ...... பெருமாளே. 
பாடல் 868 
ராகம் - அஸாவேரி 
தாளம் - ஆதி 
(எடுப்பு - 3/4 இடம்) 

தனத்த தந்தன தனதன தந்தத் 
தனத்த தந்தன தனதன தந்தத் 
தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான 


கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத் 
துருத்த வெண்பலு மடைய விழுந்துட் 
கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் ...... சுருள்நோயாற் 

கலக்க முண்டல மலமுற வெண்டிப் 
பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக் 
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் ...... கொழுமேனி 

அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப் 
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித் 
தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி 

அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப் 
பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட் 
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் ...... றிடுவேனோ 

புறத்த லம்பொடி படமிக வுங்கட் 
டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப் 
புகட்ட ரங்கிய விரக துரங்கத் ...... திறல்வீரா 

பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட் 
டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப் 
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா 

சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச் 
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத் 
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் ...... கிரிமேவிச் 

செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப் 
பரிச்சு மந்திடு குமர கடம்பத் 
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 869 
தனத்த தந்தன தானன தானன 
தனத்த தந்தன தானன தானன 
தனத்த தந்தன தானன தானன ...... தனதான 


செனித்தி டுஞ்சல சாழலு மூழலும் 
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய 
செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலூடே 

தெளித்தி டும்பல சாதியும் வாதியும் 
இரைத்தி டுங்குல மேசில கால்படர் 
சினத்தி டும்பவ நோயென வேயிதை ...... யனைவோருங் 

கனைத்தி டுங்கலி காலமி தோவென 
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென 
கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ...... முடல்பேணிக் 

கடுக்க னுஞ்சில பூடண மாடைகள் 
இருக்கி டுங்கலை யேபல வாசைகள் 
கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே 

தனத்த னந்தன தானன தானன 
திமித்தி திந்திமி தீதக தோதக 
தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி 

சமர்த்த மொன்றிய தானவர் சேனையை 
வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக 
சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே 

தினைப்பு னந்தனி லேமய லாலொரு 
மயிற்ப தந்தனி லேசர ணானென 
திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே 

சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய 
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர 
திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.