கூலிப்படி

bookmark

கணவன் இறந்து போனான். குடும்ப நிருவாகம் அவளுடைய மைத்துனர்கள் கைக்கு மாறிவிடும். அதன் பிறகு அக்குடும்பத்தில் உரிமை யிழந்தவளாய், மைத்துனர்கள் கையால் படி வாங்கித் தின்னும் நிலை அவளுக்கு ஏற்படும். மேலும் வேலைக்காரியைப் போல வேலை செய்தால்தான் அக்குடும்பத்தில் அவளுக்குச் சோறு கிடைக்கும். வீட்டின் தலைவி சொத்துரிமையின்மையால், தன் கணவனது மறைவிற்கு பின் அவள் அவ்வீட்டிலேயே கூலிக்காரியாகிறாள். இந்நிலையை எண்ணி அவள் பாடுகிறாள்.

மச்சு மச்சா நெல் விளையும்
மகுடஞ்சம்பா போரேறும்
மச்சாண்டார் கையாலே
மாசப்படி வாங்கித்தி்ங்க
மாபாவி ஆனேனப்பா
குச்சு குச்சா நெல் விளையும்
குமுடஞ்சம்பா போரேறும்
கொழுந்தனார் கையாலே
கூலிப்படி வாங்கித்திங்க
கொடும்பாவி ஆனேனப்பா

வட்டார வழக்கு : மகுடஞ்சம்பா, குமுடஞ்சம்பா-ஒரு வகை நெல்.

குறிப்பு : மைத்துனர் கொடுக்கும் மாதப்படி காணாமல் அவள் கூலிவேலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. கணவனுக்கு சொந்தமான நிலமிருந்தும் தனக்கு குழந்தையில்லாததால் சொத்தில் உரிமையில்லாமல், பிறருக்கு வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமையை எண்ணி விதவை வருந்துகிறாள்.

உதவியவர் : நல்லம்மாள் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
---------