கொடுமை செய்யும் அண்ணி

அவள் புகுந்த வீடு செழுமையுள்ளது. அவள் பட்டுடுத்தி நகைகளை யணிந்து கணவன் உயிரோடிருக்கும் காலத்தில் பிறந்த வீடு போனால்,அவளுடைய அண்ணி அவளைப் பார்த்துப் பொறாமைப் படுவாள். அவள் கணவனை பிரிந்த பின்பு அண்ணனிடம் தங்குவதற்குப் போகிறாள். வாழும் காலத்திலேயே அவளைப் பார்த்து வயிற்றெரிச்சல்பட்ட அண்ணி அவள் வெள்ளையுடுத்தும் விதவையான பின்பு சும்மாயிருப் பாளா? உயிர் போன்ற கணவனே போய்விட்ட பிறகு அவளுக்கு அற்ப நகைகள் எதற்கு? பட்டுதான் எதற்கு? கண்ணீர் உகுத்தவாறு அவைகளையும் அண்ணனிடம் கொடுத்து விடுகிறாள்.
பட்டை உடுத்தி கிட்டு
பவுனு காசைப் பூட்டிகிட்டு-நான் பொறந்த
பட்டணத்தெ போனாலே
பட்டணத்தில் பேஞ்ச மழை-என்
பட்டை நனைச்சிடுச்சி
பவுனு காசு உருகிடுச்சி
பெரியண்ணன் பொண்டாட்டி-என்
பட்டை கழட்டு மிண்ணாள்
பவுனு காசை உருவுமிண்ணாள்
பட்டையும் கழட்டி விட்டேன்
பவுனு காசை உருவி விட்டேன்
அண்ணனாண்ட
சிந்திட்ட கண்ணீரை
செண்ணுட்டேன் மாளிகைக்கு
வட்டார வழக்கு: அண்ணனாண்ட-அண்ணனிடம் ; சிந்திட்ட-சிந்தி விட்டேன் ; செண்ணுட்டேன்-சென்று விட்டேன்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
----------------