கோவில் மாடு!

கோவில் மாட்டுக்கு இருக்கும் மரியாதை உழைக்கும் மனிதனுக்கு இருக்கிறதா? என்று உழைப்பாளி கேட்கிறான்.
ஓர் உழவனின் தோப்பில் சண்பக மர நிழலில் கோவில் மாடு படுத்திருக்கிறது. தோப்பில் வேலை செய்து விட்டு இரு தோட்டக்காரர்கள் ஓய்வுகொள்ள வருகிறார்கள். மனிதன் படுக்க வேண்டிய புல் தரையில் மாடு படுத்திருக்கிறது. ஒருவன் அதனைக் கோலால் தட்டி எழுப்பப் போகிறான். அவனது தோழன் அவனைத் தடுத்து நிறுத்திப் பின்வருமாறு சொல்லுகிறான்.
குளுகுளுண்ணு காத்தடிக்குது
குங்குமத் தோப்பிலே
கோயில் பசுமாடு படுத்து
குறட்டை விடுகுது
கோலடிச்சுக் கூப்பிடாதே
குத்தம் வந்து சேரும்
சலசலண்ணு காத்தடிக்குது
சந்தனத்தோப்பிலே
சாமி பசுமாடு வந்து
சாஞ்சு படுத்திருக்குது
தட்டி எழுப்பாதே
தாங்கல் வந்து சேரும்
வட்டார வழக்கு: குத்தம்-குற்றம்; சாஞ்சு-சாய்ந்து;தாங்கல்-மன வருத்தம்.
உதவியவர்: பெ. இராமநாதன்; சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி
இடம்: போத்தனூர்,கோவை.
--------