சங்ககாலத்தில் சைவசமயம் (கி. மு. - கி. பி. 300)

bookmark

சைவத்தின் பழைமை
சிந்து வெளி நாகரிகம் உலகிற்குத் தெரிந்தது முதல் சைவ சமயத்தின் பழைமையும் கால எல்லை கடந்து நிற்கின்றது. இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைப் பொருள்களில் சிவ லிங்கங்கள் குறிப்பிடத்தக்கன. சிறியவும் பெரியவுமான சிவலிங்கங்களைக் கண்ட மேனாட்டு ஆராய்ச்சியாளர் வியப்புற்ற, `சைவ சமயம் கணித்தறிய முடியாத பழைமை உடையது,` என்று கூறியுள்ளனர். இந்த லிங்கங்களைப் பயன்படுத்திய சிந்துவெளி மக்கள் திராவிடரே என்பது ஆராய்ச்சியாளர் பலரது முடிவு.

இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன் இருந்தவர் முண்டர், கோலர் என்ற பண்டை இனத்தவரும் திராவிடருமே ஆவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இவ்விரு இனத்தவருள் லிங்க வழிபாடு எவருக்கு முதலில் உரியதாக இருந்தபோதிலும், சிந்துவெளி நாகரிக காலத்தில் திராவிட மக்களுக்கும் உரிதாக இருந்தது என்று கூறுதல் தவறாகாது என்பதும் அவ்வாராய்ச்சியாளர் கருத்து. இந்த லிங்க வணக்கம் பல நாடுகளில் பரவி இருந்தது என்பதைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் பல சான்றுகளுடன் விளக்கி எழுதியுள்ளனர். அவ்விவரங்களை அறிய, சைவ சமயம் மிக்க பழைமையுடையது என்னும் உண்மை தெரிகின்றது.

தொல்காப்பியத்தில்
பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நிலப்பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். பயனுள்ள விளைச்சல் அற்ற இடம் பாலை எனப்படும். காடும் காடு சூழ்ந்த இடமும் முல்லையாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாகும். ஒவ்வொரு நில மக்களும் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. குறிஞ்சி நிலத் தெய்வமாக முருகன் வழிபடப்பட்டான். பாலநில் தேவைதையாகக் கொற்றவை வழிபடப்பட்டாள். கண்ணன் முல்லை நில மக்களால் வழிபடப்பட்டான். மழைக்கு அதிதேவதையான இந்திரன் மருதநில மக்கள் வணக்கத்துக்கு உரியவனானான். கடலரசானான வருணன் நெய்தல் நில மக்களாளல் வழிபடப்பட்டான். இவ்வாறு ஒவ்வொரு நிலத்திற்கும் அமைந்த தெய்வத்தைத் தவிரக் கடவுள் என்ற ஒரு பொருள் வழிபடப்பட்டு வந்ததாகவும் தொல்காப்பியம் கூறுகின்றது. ஆனால் அப்பொருள் சிவன் என்ற பெயரை உடையதாக இருந்தது என்பதற்குத் தொல்காப்பியத்தில் சான்றில்லை.

தொகை நூல்களில் 
எட்டுத் தொகை நூல்கள் எனப்படும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை என்பற்றிலும், திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாடல்களிலும் சிவனைப்பற்றிய குறிப்புகள் மிகப்பலவாகக் காண்கின்றன. ஆயினும், அவற்றுள் `சிவன்` என்னும் பெயர் காணப்படவில்லை. அக்கடவுள் - `தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன்,` `முக்கட் செல்வன்`, `கறைமிடற்று அண்ணல்,` `நீலமணி மிடற்று அண்ணல்`, `முது முதல்வன்,` `நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்,` `மழை தலை வைத்தவன்,` `புங்கம் ஊர்பவன்,` `முக்கணான்.` `ஆலமர் செல்வன்,` முதலிய பல பெயர்களால் குறிக்கப்படுகிறான். அவன் சடையிலும் மார்பிலும் கொன்றைமாலை அணிந்தவன்; முடிமேல் பிறைச் சந்திரனைச் சூடியவன்; முடிமீது மேகத்தையும் கங்கையையும் தாங்கியவன்; வேதத்தை வாயில் உடையவன்; அதனை அந்தணர்க்குச் சொன்னவன்; எட்டுக் கைகளை உடையவன்; புலித்தோல் ஆடையன்; உமாதேவியைப் பாதியாகக் கொண்டவன்; அரிய தவம் செய்பவன்; உயிர்கட்குப் பாதுகாவலன்; முப்புரங்களை எரித்தவன்; எரித்த அச்சாம்பலைப் பூசிக்கொண்டவன்; அவன் பல வடிவங்களைக் காட்டியும் ஒருக்கியும் எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுபவன். ஊழி இறுதியில் அவன் ஆடும் கூத்து `கொடுகொட்டி` எனப்படும். அவன் முப்புரங்களை அழித்து ஆடும் கூத்துப் `பாண்டரங்கம்` எனப்படும். அவன் புலியைக் கொன்று அதன் தோலை உடுத்துக் கொன்றை மாலை தோளில் அசையப் பிரமன் தலையொன்றை ஏந்தி ஆடும் கூத்து `காபாலம்` எனப்படும். அவன் உமையம்மை யுடன் இமயமலைமீதுள்ளான். இவைபோன்ற குறிப்புக்கள் தொகைநூல்களிற் காணப்படுகின்றன.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்
சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டு காவியங்களிலும் பத்துப்பாட்டுள் ஒன்றான மதுரைக் காஞ்சியிலும் தெய்வங்கள் வரிசையில் சிவபிரான் முதலிடம் பெற்றுள்ளான்.
"நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் 
பதிவாழ் சதுக்கப் பூதமீ றாக"
என்பது மணிமேகலை.
"பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும்..."
என்பது சிலப்பதிகாரம்.

சேரன் செங்குட்டுவன் சிவனருளால் பிறந்தவன், சிவபூசை செய்தவன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. அவனது அவையில் சேரநாட்டுச் சாக்கையான் ஒருவன் சிவபிரான் ஆடிய கொடுகொட்டிக் கூத்தை ஆடிக்காட்டினான்.

இந்த நூல்களிலும் `சிவம்` என்னும் சொல் இல்லை. ஆயின், சைவம் என்னும் சொல்
மணிமேகலையில் காணப்படுகிறது.

சைவவாதி 
மணிமேகலை ஒவ்வொரு மதவாதியிடமும் சென்று அவர்தம் மதக்கொள்கையையும் கடவுள் தன்மையையும் கேட்டறிந்தாள். அவள் சைவவாதியிடம் சென்று, "உன் கடவுள் எத்தைகையவர்?" என்று கேட்டாள். அதற்குச் சைவவாதி, "என் இறைவன் இருசுடன் இயமானன் ஐம்பூதம் என்ற எட்டினையும் உயிராகவும் உடம்பாகவும் உடையவன்; கலைகளை உருவாக உடையவன்; உலகங்களையும் உயிர்களையும் படைத்து விளையாடுபவன்;அவற்றை அழித்து உயிர்களின் களைப்பைப் போக்குபவன்; தன்னைத் தவிரப் பெரியோன் ஒருவனைப் பெற்றிராதவன். அவன் ஈசானன்," என்று பதில் கூறினான்.

முருக வழிபாடு
குறிஞ்சி நிலத்துக்கே உரிய முருகன் வடவர் கூட்டுறவால் சுப்பிரமணியன் என்றும் கார்த்திகேயன் என்றும் சிவகுமாரன் என்றும் பெயர்பெற்றான். அவன் கார்த்திகைப் பெண்கள் அறுவர்க்கும் பிறந்தவன் என்று பரிபாடல் கூறுகிறது.
-------

அவன் கொற்றவை மகன், உமையின் மகன் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இப்பாடலில் திருப்பங்குன்றம்,திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருஏரகம், பழமுதிர்ச்சோலை, மலைகள் என்னும் ஆறிடங்கள் முருகனுக்குகந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன. முருக வழிபாட்டைப் பற்றிய பழந்தமிழ்ச் செய்திகளும் நாற்பத்தெட்டு வயதுவரை பிரமசரிய விரதம் காக்கும் அந்தணரது வழிபாட்டுச் செய்திகளும் திருமுருகாற்றுப் படையுள் கூறப்பட்டுள்ள*ன.

பரிபாடலில் முருகனைப்பற்றி எட்டு பாடல்கள் இருக்கின்றன. முருகன் சூரபத்மனை வென்றவன்; ஆறு தலைகளும் பன்னிரண்டு கைகளையும் உடையவன்; தேவசேனாபதி; மும்மூர்த்திகட்கு முதல்வன்; வள்ளி தெய்வானையர்க்குக் கணவன்; திருப்பரங்குன்றம் மலை மீது முருகன் கோவில் இருக்கின்றது. அக்கோவிலில் இருந்த மண்டபச் சுவர்களிலும், மேற்கூரையிலும் பல நிகழ்ச்சிகளைக் குறிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றுள் இரதி,மன்மதன், பூனை உருவாகக் கொண்ட இந்திரன், அகலிகை, கௌதமன் முதலியோரைக் குறிக்கும் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. பாண்டி யன் முதல் சாதாரண மக்கள் வரை எல்லோரும் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டனர். கோவில் களில் ஆடல், பாடல்கள் நிகழ்ந்தன. பண் அமைத்த பாடல்களைப் பாடி மக்கள் முருகனை வழி பட்டனர். இவை போன்ற செய்திகள் பரிபாடலில் காணப்படுகின்றன.

கொற்றவை வணக்கம்
தமிழ் நாட்டுப் பாலை நிலத்துத் தேவதையாகிய கொற்றவை வடவர் கூட்டுறவால் துர்க்கை எனப் பெயர் பெற்றாள்;  அதனால் கௌரி, சமரி, முதலிய புதிய பெயர்களைப் பெற்றாள்; அவள் வேடர்களுக்கு அதி தேவதை. அவள் நஞ்சுண்டும் சாகாதவள்- பேய்க்கணங்களை உடையவள்; முதலில் பாலைநிலத் தேவதையாக இருந்து வேடர் தொழுகைக்கு உரிய வளாக இருந்த கொற்றவை, பிறதிணைக்குரிய தெய் வங்கள் நகரங்களிற் குடியேறினாற்போலவே, நகரங் களிற் கோவில் கொண்டாள். மதுரை நகர மேற்கு வாயிலில் கொற்றவைக்குக் கோவில் இருந்தது.
----

கண்ணகி கணவனை இழந்து நகரை விட்டுப் போகை யில், கொற்றவை கோவில் வாசலில் தன் வளையல் களை உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் குறிக் கின்றது. பிரிந்தவர் மீண்டும் வந்து சேர்ந்தால், பின்பு பிரியாது உறைதல்வேண்டும் என்று மக்கள் கொற்றவையை வரம் வேண்டல் மரபு; கையில் காப்பு நூல் கட்டி நோன்பிருத்தல் வழக்கம். இக் கொற்றவை வணக்கமே நாளடைவில் சக்தி வணக்க மாக மாறியது; சக்தியையே முழுமுதற் கடவுளாகக் கொண்ட ஒரு பிரிவு `சாக்தேயம்` அல்லது `வாமம்` என்று பெயர் பெற்றது; சைவசமயப் பிரிவுகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது.

சைவமும் வைணவமும்
சிவனுக்கும் முருகனுக்கும் கோவில்கள் அமைந்தவாறே, திருமாலுக்கும் தமிழகத்தில் கோவில்கள் இருந்தன. முல்லை நிலக் கடவுளான திருமால் நாளடைவில் நகரங்களிலும் கோவில் கொண்டான்; கண்ணன் அண்ணனான பலராம வணக்கம் தமிழகத்தில் இருந்தது. சங்க காலத்தில் இந்நால்வர் (திருமால், பலராமன், சிவன், முருகன்) வணக்கமும் சிறப்புற்றிருந்தன. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை நக் கீரர் பாடிய ஒரு செய்யுளில் அவனை இந்நால்வரு டனும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்; "நீ சினத்தில் சிவனையும், வலிமையில் பலராமனையும், பகைவரை அழிப்பதில் மாயோனையும், கருதியதை முடிப்பதில் முருகனையும் ஒப்பாவாய்". `வெள்ளை`, `காரி` `குரால்`, `சேய்` என்று நிறம் பற்றி எருது களுக்கு இவ்வாறு பெயர் கூறி, அவற்றுக்கு முறையே பலராமன், மாயோன், முக்கண்ணன்,முருகன் என்னும் கடவுளரையும் அவர்தம் நிறம், மாலை, உடை முதலியவற்றையும் பொருந்த வைத்துக் கலித்தொகையில் உவமை கூறப்பட்டுள்ளது.

பரிபாடலில் திருமாலைப் பாடிய கடுவன் இள எயினனார் என்ற புலவரே முருகனையும் வாயார வாழ்த்தியுள்ளார். கேசவன், அச்சுதன் என்ற வைணவப் பெயர்களைக் கொண்ட புலவர் இருவர் முருகனைப் பாடியுள்ளனர். பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர் அகநானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு என்ற மூன்றிலும் கடவுள் வாழ்த்தாகச் சிவனையும், குறுந்தொகையில் முருகனையும், நற்றிணையில் திருமாலையும் பாடியுள்ளார். சேரன் செங்குட்டுவன் வட நாட்டு யாத்திரைக்குப் புறப்படும் முன் சிவபூசை செய்து சிவப்பிரசாதத்தைத் தன் முடியில் தாங்கியிருந்தான்; பின்னர் வந்த திருமால் பிரசாதத்தைத் தன் தோளில் தாங்கினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதே நூலில் சிவனுக்குரிய ஐந்தெழுத்தும் திருமாலுக்குரிய எட்டெழுத்தும் சம நிலையில் மதிக்கும்படி அடியவர்க்குக் கூறப்பட்டுள்ளது.

கோவில்கள்
சிவன், முருகன், திருமால், பலராமன், கொற்றவை முதலிய தெய்வங்கட்குக் காவிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி போன்ற பெரிய நகரங்களில் கோவில்கள் இருந்தன. நீல நாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமரத்தடியில் இருந்த சிவனுக்கு ஆய்வேள் அளித்தான் என்று புறநானூறு கூறுவதால், ஆய் நாட்டில் (பொதிகை மலைப் பகுதியில்) சிவன் கோவில் இருந்தமை தெளிவு. "தொண்டை நாட்டுக் குளங்கள் சிலவற்றில் தாமரை மலர்கள் பூத்திருக்கும். அவை தெய்வங்கட்கு உரியவை," எனவரும் பெரும்பாணாற்றுப் படைக் குறிப்பினால், அக்குளங்களை அடுத்த ஊர்களில் கோவில்கள் இருந்தமையும், கடவுளர் உருவங்கள் இருந்தமையும் பெறப்படும். வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள செங்கம், சங்க காலத்தில் செங்கண்மா எனப்பட்டது. அதனை ஆண்ட நன்னனது நவிரம் என்ற மலையில் காரியுண்டிக் கடவுள் எனப்பட்ட சிவபிரான் கோவில் இருந்தது. பண்டைக்காலக் கோவில்கள் - கோவில், நியமம், நகரம், கோட்டம் எனப் பெயர் பெற்றன. சமணர் பௌத்தர் கோவில்கள் `பள்ளி` என்று வழங்கப்பட்டன.

கோவில் அமைப்பு
கோவில் என்னும் சொல் சங்க காலத்தில் தெய்வங்கள் உறையும் கட்டடத்தையும் அரசன் அரண்மனையையும் குறித்தது. இதனல் அரசன் வாழ்ந்த அரண்மனையும் கோவிலும் பல பகுதிகளில் ஒத்திருந்தன என்று என்று கொள்ளுதல் பொருந்தும். இரண்டும் சுற்று மதில்களை உடையவை; உயர்ந்த வாயில்களை உடையவை; வாயில்கள் மீது உயர்ந்த கோபுரங்களைப் பெற்றவை; வாயில்களுக்குத் துருப்பிடாயாமல் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன; சாந்து பூசப்பெற்ற மாடங்கள் உயரமாக்க் கட்டப்பட்டிருந்தன; மேற்கூரை சாந்து வேயப்பட்டிருந்தது. சில கோவில்களில் உலோகங்களாலான கூரைகளும் இருந்தன. மதுரைச் சிவன் கோவிலில் வெள்ளி வேயப்பட்ட கூரை இருந்தது. அப்பகுதி `வெள்ளியம்பலம்` என்று பெயர்பெற்றது.

லிங்க வழிபாடு
லிங்க வழிபாடு வேதகாலத்துக்கு முற்பட்ட சிந்துவெளி மக்களிடமிருந்தது என்பது முன்னரே கூறப்பட்டது. வேத காலத்தில் இந்தியப் பழங்குடி மக்களிடத்தில் அவ்வழிபாடு இருந்தது; இதிகாச காலத்தில் எல்லோரிடமும் பரவியது. லிங்கம் சிவபெருமானான மகாதேவனைக் குறிக்கும் மூர்த்தமாகக் கருதப்பட்டது. குடிமல்லம், களத்தூர், குடுமியான் மலை என்னும் இடங்களிலுள்ள லிங்கங்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டின என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். கல் லிங்கத்தைப் போலப் பலர்கூடும் பொதுவிடங்களில் (அம்பலங்களில்) மரத்தூண்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை `கந்து` எனப்பட்டன. அவற்றில் தெய்வ உருவங்கள் எழுதப்பட்டிருந்தன. மக்கள் அவற்றின்மீது மலர்களைச் சூடினர்; அவற்றின் அருகில் அவியா விளக்கு ஏற்றி வைத்தனர். அவை பீடமற்ற (ஆவுடையாரில்லாத) லிங்கங்கள் போன்றவை. இத்தகைய லிங்கல்கள் பல கோவில்களில் இருப்பதை இன்றும் காணலாம். * [* இத்தகைய தூண்களை வழிபடும் வழக்கம் கிரிட் தீவில் பண்டைக் காலத்திற் சிறப்புற்றிருந்தது. சிவபிரான் `ஆலமர் செல்வன்` என்று பழைய நூல்களிற் குறிக்கப்படலால், `தென்முகக் கடவுள்` வடிவம் சங்க காலத்திலேயே இருந்திருத்தல் வேண்டும் என்று கூறலாம்.

விழாக்கள்
1. கார்த்திகை விழா - கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளன்று இரவில் தெருக்களில் விளக்குகள் வைத்து அவற்றுக்கு மாலைகள் இட்டு மக்கள் விழாக் கொண்டாடினர் என்பது அக நானூற்றுப் பாடல்களால் தெரிகின்றது.

2. திருஆதிரை விழா -- இது மார்கழி விழா என்றும் பெயர்பெறும். சிவபெருமான் `ஆதிரை முதல்வன்` எனப்பட்டான். இவ்விழாச் சிவத் தொடர்பானது.

3. தைவிழா--தைந்நீராடல்; தத்தம் விருப்பக் கடவுளரை வணங்குதல். இதுவே பிற்கால மார்கழி நோன்பு என்று அறிஞர் கூறுவர்.

4. முருக விழா -- முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்ட பெருவிழா.

இவைபோன்ற பல செய்திகளைக் காண்பதால், சங்ககாலக் கோவில்களில் விழாக்கள் நடைபெற்றன என்பதும், திருமேனிகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன என்பதும் அறியலாம். காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா இருபத் தொருநாள் சிறப்பாக நடைபெற்றது. எல்லாக் கோவில்களிலும் பூசைகள் நடைபெற்றன. ஆடல் பாடல்கள் நிகழ்ந்தன, பல சமயப் பெரியோர்கள் தத்தம் மடங்களில் அற உபதேசம் செய்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.

சமய அணிகள்
பழந்தமிழ்ப் பிள்ளைகளுக்கு காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்னும் ஐந்தின் வடிவமாக அமைத்து அணிவிக்கும் அணி ஐம்படைத்தாலி எனப்பட்டது. இது போலவே சிவபிரானுடைய மழு, வாள்,இடபம் இவற்றை போலப் பொன்னால் செய்து மக்கள் அணிந்திருந்தனர் என்று கலித்தொகை கூறுகிறது.

சிவனார் பெயர்கள்
சங்க கால மக்கள் இறையனார். உருத்திரன், சத்திநாதன், பெருந்தேவன், வெண்பூதி, பேரெயில் முறுவலார் முதலிய சிவனைக் குறிக்கும் பெயர்களைப் பிள்ளைகளுக்கு இட்டு வழங்கினர். பெருந்தேவன் என்பது மகாதேவன் என்னும் பெயர்ப்பொருளை உடையது. பேரெயில் முறுவலார் என்பது சிவன் முறுவலால் திரிபுரங்களை எரித்ததைக் குறிக்கும் பெயராகும். வெண்பூதி என்பது திருநீற்றை அணிந்தவர் என்பதைக் குறிக்கும்.

முடிவுரை
இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளால், சங்க காலத்தில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் முதலிய பல்வேறு சமயங்கள் இருந்தன என்பதும், ஆயினும், இந்நாட்டுக்கே உரியவை சைவமும் மாயோன் வணக்கமும் என்பதும், கோவில்கள் இருந்தன என்பதும், அவற்றில் விழாக்கள் நடை பெற்றன என்பதும், கடவுளர் வரிசையில் சிவபெருமான் முதலிடம் பெற்றிருந்தான் என்பதும், வடவர் கூட்டுறவால் முருக வணக்கமும், திருமால் வணக்கமும், கொற்றவை வணக்கமும், சிவ வணக்கமும், தமிழ் வணக்கமும் ஆரிய வணக்கமும் கலந்த புதிய நிலையினை அடைந்தன என்பதும் அறிய முடிதல் காண்க. வரலாற்றுப் பேராசிரியரான T. R. சேஷ அய்யங்கார் எழுதியுள்ள, "பண்டைத் திராவிடம்" என்னும் ஆங்கில நூலில் இவை பற்றிய விவரங்களை நன்கு காணலாம்.