சின்னத் தாயே தங்கம்

ஏரிக்கரையிலே அவன்தன் காதலியைப் பார்க்கிறான். ஏரியில் நீர் நிறைந்திருப்பது போல் அவன் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது. அவன் காதல் குறிப்புணர்த்திப் பாடுகிறான். அவனை மறுத்து அவளும் ஒவ்வொரு சொல் சொல்லுகிறாள். அவர்களது உரையாடலைப் பார்ப்போம்.
ஆண்:
வத்தனத்தான் ஏரியிலே
சின்னத் தாயே தங்கம்--ரண்டு
வர்ண பொறா மேயக் கண்டேன்
சின்னத் தாயே தங்கம்
பெண்:
வத்தனாலும் குத்தமில்லை
சின்னத் தாயே தங்கம்
நானுனக்கு பொண்ணு மில்லே
சின்னத் தாயே தங்கம்
ஆண்:
இண்ணடித்தான் ஓரத்திலே
சின்னத் தாயே தங்கம்-ரண்டு
கோயில் பொறா மேயக் கண்டேன்
சின்னத் தாயே தங்கம்
காடாலே ஒரு மயிலு
சின்னத் தாயே தங்கம்-அது
கட்டுப் பட்டு நிக்கு தோடி
சின்னத் தாயே தங்கம்
செடியாலே ஒரு மயிலு
சின்னத் தாயே தங்கம்-அது
சிக்குப்பட்டு நிக்குதோடி
சின்னத் தாயே தங்கம்
பெண்:
ஆலா உளுது போல
சின்னத் தாயே தங்கம்-நான்
அவித்து விட்டேன் தலை மயிரே
சின்னத் தாயே தங்கம்
முணு காசு முட்டாயா
சின்னத் தாயே தங்கம்-இங்கே
முட்டுக் காட்டுக் கச்சேரியா
ஆண்:
முட்டுக் காட்டுக் கச்சேரிக்கு
சின்னத் தாயே தங்கம்
முடிவு சொல்லக் காத்திருந்தேன்
சின்னத் தாயே தங்கம்
வட்டார வழக்கு: பொறா-புறா; உளுது-விழுது.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
---------------