சின்னத் தாயே தங்கம்

bookmark

ஏரிக்கரையிலே அவன்தன் காதலியைப் பார்க்கிறான். ஏரியில் நீர் நிறைந்திருப்பது போல் அவன் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது. அவன் காதல் குறிப்புணர்த்திப் பாடுகிறான். அவனை மறுத்து அவளும் ஒவ்வொரு சொல் சொல்லுகிறாள். அவர்களது உரையாடலைப் பார்ப்போம்.

ஆண்: 
வத்தனத்தான் ஏரியிலே
சின்னத் தாயே தங்கம்--ரண்டு 
வர்ண பொறா மேயக் கண்டேன் 
சின்னத் தாயே தங்கம்

பெண்: 
வத்தனாலும் குத்தமில்லை
சின்னத் தாயே தங்கம் 
நானுனக்கு பொண்ணு மில்லே 
சின்னத் தாயே தங்கம்

ஆண்:
இண்ணடித்தான் ஓரத்திலே
சின்னத் தாயே தங்கம்-ரண்டு 
கோயில் பொறா மேயக் கண்டேன் 
சின்னத் தாயே தங்கம் 
காடாலே ஒரு மயிலு 
சின்னத் தாயே தங்கம்-அது 
கட்டுப் பட்டு நிக்கு தோடி 
சின்னத் தாயே தங்கம் 
செடியாலே ஒரு மயிலு 
சின்னத் தாயே தங்கம்-அது 
சிக்குப்பட்டு நிக்குதோடி 
சின்னத் தாயே தங்கம்

பெண்: 
ஆலா உளுது போல
சின்னத் தாயே தங்கம்-நான் 
அவித்து விட்டேன் தலை மயிரே 
சின்னத் தாயே தங்கம் 
முணு காசு முட்டாயா 
சின்னத் தாயே தங்கம்-இங்கே 
முட்டுக் காட்டுக் கச்சேரியா

ஆண்: 
முட்டுக் காட்டுக் கச்சேரிக்கு
சின்னத் தாயே தங்கம் 
முடிவு சொல்லக் காத்திருந்தேன் 
சின்னத் தாயே தங்கம்

வட்டார வழக்கு: பொறா-புறா; உளுது-விழுது.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன் 
இடம்: சேலம் மாவட்டம்.
---------------