சிவனும் அறியலையே

bookmark

மாங்கல்ய பாக்கியம் அருளும்படி அவள் தெய்வங்களை எல்லாம் பூசை செய்தாள். ஆனால் அவை கருணை காட்டவில்லை. எமனை எதிர்த்து நிற்கும் வலிமையைக் கொடுக்க தெய்வங்களால் முடியவில்லை. அவள் கணவனை எமன் பிடித்துக் கொண்டு போய் விட்டான். பூசை பலிக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் அவள் அழுகிறாள்.

பழனிக்கு மேல் புறமாய்
பன்னிரெண்டு கோபுரமும்
படிக்கும்படி பூசை செஞ்சேன் !
பாவிபடும் தொந்தரவை
பகவான் அறியலையே !
செஞ்சிக்கு மேல்புறமாய்
செல்வரெண்டு கோபுரமாம்
சிலைக்குச் சிலை பூசை செஞ்ச
சிவனோடு வாதாடி-இந்தச்
செல்விபடும் தொந்தரவை
சிவனும் அறியலையே !

வட்டார வழக்கு : செஞ்ச - செய்தேன் ; சிலைக்குச் சிலை -சிலைகளுக்கெல்லாம்.
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
-----------