செங்குட்டுவன் நாடும் - வஞ்சி மாநகரமும்

1. நாடு
சேரதேசம் என்பது கருவூர்ப்பிரதேச முட்படக் கோயம்புத்தூர் சேலம் நீலகிரி "ஜில்லா"க்களும்,மைசூர்நாட்டின் தென்பகுதியும் மேற்குத்தொடர்ச்சிமலை நெடுகவுள்ள கடற்கரைப் பக்கங்களுமாம்.இந்நாடு, ஒவ்வொருகாலத்து விரிந்துங் குறைந்து மிருந்தமையால்,இதனெல்லையை வரையறுத்துக் கூறுதல் அரிது. செங்குட்டுவன், அவன் காலத்தே சிறந்துவிளங்கிய பெருவீரனாதலின்,அவன் நாடு,பண்டையினும் விரிவுடையதாகவே இருந்திருத்தல் வேண்டும். இவன் வென்றடிப் படுத்திய நாடுகளில், கொடுகூர் என்பதும் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. இஃது இப்போது மைசூரி ராஜ்யத்துள் ஒரு பகுதியாக அடங்கும்.இதனை இச்சேரன் வென்றான் என்றதற்கேற்பப்,பழைய சாஸனமொன்று,கொடுகூர் நாட்டைச் சேரமானுக்குரிமைகூறிச் செல்கின்றது.* அன்றியும், மைசூரின் பெரும்பகுதி சேரநாடாயிருந்த தென்று வேறு சாஸனங்களாலும் விளங்குதலால், † முற்காலத்தே சேரதேசம் அதிகவிஸ்தீரணம் பெற்றிந்ததாகவே கொள்ளலாம். இத்தேசத்துள்ளே, மேற்குமலைத்தொடர்ச்சிக்கு உள்ளடங்கிய மலைநாட்டில் செங்குட்டுவனுக்கும் உரிமை யுண்டாயினும், அதன் பெரும்பகுதியை அவன் ஞாதியரசர் ஆண்டு வந்தனரென்பது முன்னரே குறிப்பிட்டோம். ஆயினும், நம் சேரனுக்குவழங்கிய செங்குட்டுவன் என்ற பெயர்க்கேற்பக் கொள்ளுமிடத்துக் குட்டநாடு‡ இவனாட்சிக்குட் பட்டதாகச் சொல்லல் பொருந்தும். இதுபற்றிப் போலும், அக்குட்ட நாட்டிற்குள் அடங்கிய பேரியாற்றுக்கு மலைவளங் காண்டல் வேண்டிச் செங்குட்டுவன் சென்றிருந்ததூஉம் என்க. ஆயின், அப் பேரியாறு சங்கமமாகு-மிடத்தமைந்த முசிறி என்னும் கடற்கரைப்பட்டினம் நம் சேரனைச் சேர்ந்ததாதல் வேண்டும். இம்முசிறி அந்நிய தேசங்களுடன் "ஏற்றுமதி" "இறக்குமதி"ச் சம்பந்தம் பெற்றுப் பழையகாலத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்தது.
-------
*இந்நூல் 29ஆம் பக்கத்துக் கீழ்குறிப்புப் பார்க்க.
† Dr Fleet’s History of deccan. P.189
‡ இது, கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று; இன்றும் இப்பெயருடன் வழங்குகின்றது; கோட்டயத்துக்கும் கொல்லத்துக்குமிடையில்,பாலையாற்றாற் பல ஏரிகளும் தீவுகளுமுடையதாகி இப்பிரதேசமிருத்தலால் "குட்டநாடு" என வழங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
-----------------------------------------------------------
2. வஞ்சிமாநகரம்
தமிழ்நாட்டை ஆண்டுவந்த மூவேந்தருள்ளே,சோழ பாண்டியர்க்கு உறையூர் புகார் மதுரைகள் எவ்வாறு பழைய தலைநகரங்களாக விளங்கினவோ,அவ்வாறே, சேரரது தொன்றுதொட்ட இராஜதானி *வஞ்சி மாநகரமாகும். மேல் கடலில் தொண்டி மாந்தை என்னுந் துறைமுக நகரங்களும்,சேரர்க்குச் சிறந்த தலங்களாயினும் வஞ்சிமா நகர்க்கு அவை அடுத்த தரத்தனவேயாம். இவ்வஞ்சிக்குக் கருவூர் என்பதும் ஒரு பழம் பெயர். இந்நகரம் ஆன்பொருநையாற்றங் கரையில் அமைந்து விளங்கியதாம்.
"நெடுந்தேர்க்கோதை--
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீ ருயர்கரைக் குவைஇய
தண்ணான் பொருநை மணலினும் பலவே"
(அகநானூறு.93.)
"தண்பொருநைப் புனற்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சி" (புறம்.11)
"தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்"(சிலப்-29.)
எனக் காண்க.ஆன்பொருநையாற்றின் அலை, வஞ்சிக்கோட்டைமதிலிற் றாக்கும்படி அவ்யாறு நெருங்கிச் செல்வதென்பது, "வஞ்சிப் புறமதி லலைக்குங் கல்லென் பொருநை" என்னும் புறப்பாட்டடியால்(387)விளங்கும்.
-------
*இந்நகரத்தைப் பூவாவஞ்சி(சிலப்.26.50),வாடாவஞ்சி(28-180)பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்(மணி.92.) கோநகர் (சிலப்.27.255) என முன்னூல்கள் அணிந்து கூறும்.
இவ் வான் பொருநை--ஆனி,வானி,ஆன்பொருந்தம்,தண்பொருநை,சூதநதி எனவும் கூறப்படும்.
கருவூராகிய வஞ்சிக்குப் பக்கத்தோடும் ஆன்பொருநையோடு நேர்கிழக்கிற் செல்லும் காவிரியும், குடவனாறும் சங்கமமாகும் கூடலொன்று உண்டு; இதனை--
"செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக்
காவிரி யன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூட லனையை" (பதிற்-50)
எனச் செங்குட்டுவனைப் பரணர் பாடுதலால் அறியலாம். "மூன்றுடன் கூடிய கூடலென்றது,அக்காவிரிதானும் ஆன்பொருநையும்,குடவனாறுமென இம்மூன்றுஞ் சேரக்கூடிய கூட்டம்" என்பது பழையவுரை.இந்நதிகளன்றிக் காஞ்சியென்னும் †ஓர் யாறும் செங்குட்டுவனாட்டிற் பிரபலம்பெற்றது; " தீனம்புன லாய மாடுங்-காஞ்சியம் பெருந்துறை " எனக் காண்க.
இவ்வஞ்சிமாநகரின் பழைய அமைப்பு,முன்னூல்களில் அடியில் வருமாறு சிறப்பிக்கப்படுகின்றது.இம்மூதூரின் கோட்டைக்கு வெளியே தேவர் கோட்டங்களும் பொது ஸ்தலங்களும் ஜைநப்பள்ளிகளும் பொழில்களும் பொய்கைகளும் மிகுந்திருந்ததோடு, அவ்விடங்களில் தவமுனிவரும் ஞானிகளும் சாஸ்திரவறிஞரும் எங்கும் நிறைந்திருந்தனர்.
-------------
*பிங்கல நிகண்டு,4.118 பொருநை என்பது தாமிரபர்ணிக்குத் தனித்த பெயராதலால்,அதனின் வேறென்பதைக் குறித்தற்கு ஆன்பொருநை என விஷேடிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.
† குடவனாறு, கருவூர்க்குத் தென்கிழக்கே 12-மைலில், ஆம்பிராவதியுடன் சங்கமாகின்றது. இதனைக் காவிரியுடன் கலப்பதாக உரைகாரர் எழுதியற்குக் காரணந்தெரியவில்லை.
கோட்டையைச் சூழ்ந்துள்ள புறக்குடி அல்லது புறஞ்சேரியில் அரண்காவல்புரியும் படையிருப்புகளும் அந்நியவரசர் தங்குதற்கமைந்த மாளிகைகளும் இருந்தன. கோட்டையை,ஆழ்ந்தகன்ற அகழி சூழ்ந்திருந்தது. அதனிற் பல வகை முதலைச் சாதிகளும் பெருமீன்களும் நிறைந்திருந்தன.வஞ்சிமாநகருள்ளே பெருகியோடுங் கழிநீரெல்லாம் முடிவில் அவ் வகழிக்கண்ணே சென்று சேர்வதாம். இவ்வகழுக்கும் கோட்டைக்கும் இடையிலே காவற்காடொன்று உண்டு.கோட்டைமதில்,பகைவரை அழிக்கத்தக்க எந்திரங்கள் பலவற்றால் மாட்சிமைபெற்றிருந்தது. அதன் வாயிலானது, வேலைப்பாடு மிகுந்து, பல நிலைகொண்ட கோபுரத்தோடுங் கொடிகளோடும்,வெள்ளிமலையொன்று உள்கிழிந்தாற்போல விளங்கியது. இவ்வாயிலைக் கடந்து செல்லின், கோட்டை வாயில் காக்கும் காவலாளர் நெருங்கியுறையும் வீதிகளும் மீன்விலைஞரும் உப்புவாணிகரும் கள்விற்போரும் பிட்டு அப்பங்கள் விற்போரும், வாசனைப்பண்டம் விற்போரும் இறைச்சிவிற்போரும் வசிக்கின்ற வீதிகளும் அமைந்திருந்தன.இவ்வீதிகளையடுத்து - மட்கலஞ்செய்யுங் குயவர்,செம்பு கொட்டிகள், வெண்கலக்கன்னார், பொற்கொல்லர்,தச்சர், நட்பாவைசெய்வோர், தையற்காரர், மாலைகட்டுவோர்,சோதிடர், பாணர்முதலியோர் தெருக்களும், சங்கறுப்போர் இரத்தினப்பணியாளர் வீதிகளும், நாடகக்கணிகையர் வீதியும்,நெல்லுப் புல்லு முதலிய கூலவகை விற்போர் தெருவும்,சூதர் மாகதர் வேதாளிகர், பொதுமகளிர் தெருக்களும்,
ஆடைநெய்து விற்போர்,பொன்வாணிகர்,இரத்தின வியாபாரிகள் வீதிகளும், அந்தணர் அக்கிரகாரமும், இராச வீதியும், மந்திரிகள் வீதியும், பல்வகை அரசாங்க அதிகாரிகள் வாழுந் தெருக்களும் அப்பெருநகரில் முறையே அமைந்திருந்தன. இவையன்றி, யாவரும் வந்து தங்குதற்குரிய மரத்தடிகளும், அம்பலமும்,முச்சந்தி நாற்சந்திகளும், அருவியோடும் அழகிய செய்குன்றுகளும், இளமரக்காக்களும், பொய்கைகளும்,அறச்சாலைகளும், பொன்னம்பலமும், தவப்பள்ளிகளும் விளங்கின. மிகவழகாக அமைக்கப்பட்ட பௌத்த சைத்தியமொன்றும்* அவ்வஞ்சியினுள்ளே திகழ்ந்தது. (மணிமே. காதை.28)
சேரருடைய அரண்மனையானது அம்மூதூரின் மத்தியில்,பொன்மயமானதொரு சிறு மேருப்போலப் பிரகாசித்தது; "நெடுநிலை மேருவிற்,கொடிமதின் மூதூர் நடுநின்
றோங்கிய,தமனிய மாளிகை" என்பர் இளங்கோவடிகள்.† அதனுள் அத்தானி மண்டபமும் (கொலுவிருக்கை), வேத்தியன்மண்டபமும் (மந்திராலோசனைச்சபை), மணியரங்குகளும் (நடனசாலை), பிறவும் மாட்சிமைபெற்று விளங்கின. அரசன் தன் மனைவியுடன் வசந்தகாலத்தைக் கொண்டாடு தற்கென்று அமைந்த "இலவந்திகை வெள்ளிமாடம்" என்னும் மாளிகை யொன்றுண்டு‡ .இஃதன்றி, நகர்ப்புறத்தே,பொய்
கைகளாலும் சோலைகளாலும் சூழப்பட்ட "வேளாவிக் கோமாளிகை" (சிலப்பதி 28: 197-198.)என்னும் ஓர் அழகிய மந்திரமும் அமைந்திருந்தது.
---------
*கோவலனுக்கு ஒன்பதாந்தலைமுறைப் பாட்டனான கோவலனால் வஞ்சிநகரிற் கட்டப்பட்டதாக மணிமேகலையிற் கூறப்படும் பௌத்த சைத்தியம் இதுபோலும். (காதை-28. 123-31)
†சிலப்.28
இது "வேண்மாடம்" எனவும் வழங்கப்படும்.(புறநானூறு 13.) செங்குட்டுவன் மாற்றாந்தாய்ப் பாட்டனும், பொதினிமலைத் தலைவனுமான வேளாவிக்கோமான் பெயர்பெற்றிருத்தலால், இம்மாளிகை அவன் வசித்துவந்தது போலும். இவ்வழகிய மாடம் செங்குட்டுவன்காலத்தே அந்நியவரசர் தங்குதற்கென்று உபயோகப்பட்டது. (சிலப் 28.198.) திருமால் பள்ளிகொண்டருளும் ஆடகமாடம் (சிலப் 26. 62; 30.51.) என்ற ஆலயமொன்றும் வஞ்சிக்குப் பக்கத்திருந்ததாகக் கருதப்படுகின்றது.
இங்ஙனம், சேரரது பழைய இராசதானியாகச் சிறப்பிக்கப்பட்ட வஞ்சியென்பது யாதென ஆராயுமிடத்து, அஃது,இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லாவைச் சார்ந்துள்ளதும், கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றுமாகிய கருவூரே(கர்ப்பபுரி என்பர் வடநூலார்.) என்பதற்கு வேண்டிய பிரமாணங்கள் எதிர்ப்படுகின்றன. முன்னூல்களிற் கூறப்பட்டவாறே, இவ்வூர் ஆம்பிராவதி நதிக்கரையில் உள்ளதாம்; ஆம்பிராவதி என்பது, ஆன்பொருநையின் வடமொழிப்பெயர்; "பொற்பு மலியாம் பிரவதியான் பொருநை யெனவும் புகலுவரால்" என்பது கருவூர்ப்புராணம்(இப்புராணம் இற்றைக்கு 290-வருஷங்கட்குமுன் இயற்றப்பட்டதென்பது. அதன் பாயிரச் செய்யுளால் அறியப்படுகின்றது;இனிய வாக்குடையது; நூலாசிரியர் பெயர்முதலிய வரலாறுகள் விளங்கவில்லை.) [ஆம்பிரம்-மாமரம்] சூதநதி என்று பிங்கலநிகண்டு இதற்கொரு பெயர் கூறுவதும் ஆம்பிராவதி என்பதோடு ஒத்த பொருளுடையதேயாகும்; [சூதம் -மா]. இந்நதி வராக மலையில் உற்பத்தியாகி மாமரச்சோலைவழியே செல்லுதலால் இப்பயர்கள் பெற்றதென்பர். "வஞ்சிப் புறமதிலலைக்கும் கல்லென் பொருநை" "தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்" என முன்னோர் கூறியவாறே,இக்
காலத்தும், இவ் வாம்பிராவதி கருவூரையொட்டித் தென்றிசையிலிருந்து கீழ்புறமாகவோடி வடக்கேதிரும்பிக் காவிரியுடன் கலக்கின்றது. இக் கருவூரே, வஞ்சி எனத் தமிழிலும், வஞ்சுளாரணியம் என வடமொழியினும் வழங்கப்படுவதாம்; "வஞ்சுளா ரணியம் வஞ்சி கருவூர்" என்பது கருவூர்ப் புராணம்.இதற்கேற்ப, இந்நகரத்தின் தென்றிசையில் நதிக்கரையிலுள்ள துர்க்காதேவிக்கு வஞ்சியம்மன் என்னும் பெயர் இன்றும் வழங்கிவருதலும், இவ்வூர் அரங்கநாதப் பெருமாள் கோயிற் கர்ப்பக்கிரகத்தின் தென்பக்கத்துக் காணப்படும் சாஸனத்துள்ளே"வஞ்சி...ஸ்ரீவைஷ்ணவரோம்" என்னுந் தொடர் காணப்படுதலும்,ஆம்பிராவதிக்கு வடக்கே கோயில் கொண்ட †சிவபெருமான் வஞ்சுளேச்சுர லிங்கம் என
அழைக்கப்படுதலும் இங்கு அறியத்தக்கன.
கருவூர்க்கு வடகிழக்கே, ஆம்பிராவதி மணிமுத்தாநதி காவேரி மூன்றுங்கூடுந் திருமுக்கூடல் உள்ளது; "வஞ்சுளாடவிக்குத் தரகுணக்காக வாம்பிர வதிநதி மதிபோல், விஞ்சுமா மணிமுத் தாறுகாவேரி மேவுழி மேவு மேவுதலால், எஞ்சலில் திருமுக்கூடலென் றிசைப்ப" என்பது கருவூர்ப் புராணம்.‡ இம் முந்நதியின் கூடலே "காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை" எனப் பரணர் செங்குட்டுவனுக்கு உவமித்ததாம்.
---------
* வஞ்சிமரம் நிறைந்த காடாதலின் இப் பெயர்பெற்றதென்பர்.
† திருவானிலைப் பசுபதீசுவரர் கோயிற்குத் தென்பாலுள்ளது.
‡ ஆம்பிராவதிச்சருக்கம். 45-மணிமுத்தாநதி, காவிரியுடன் கலக்குமிடம் இப்போது மேற்கே வெகுதூரத்துள்ளது. முற்காலத்து இந்நதி ஆன்பொருநையுடன் சேர்ந்து காவிரியிற் சங்கமித்தது போலும்.)
இனிக் காஞ்சி என்னும் யாறும் செங்குட்டுவனாட்டிற் சிறப்புடைய நதிகளுளொன்றென்பது "காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே" என அப்புலவர் நம் சேரனை வாழ்த்துதலாற் றெரியலாம். இவ் ஆறு, நொய்யல், காஞ்சிமாநதி(இந்நதி 108-மைல் நீளமுடையது; ஈரோடு கருவூர்த் தாலூகாக்கள் கூடுமிடத்து நெய்க்குப்பத் தருகில் காவிரியுடன் சங்கமமாகிறது.) என அப் பிரதேசத்தில் இன்றும் வழங்கி வருகின்றது; இந்நதிக்கரையிலுள்ள பேரூர் என்னுந் தலத்தைக் காஞ்சிவாய்ப்பேரூர் எனப் பழையசாஸனமும்(செந்தமிழ், தொகுதி-4, பக்.342; ஏயர்கோன்.88.)பெரிய புராணமும் குறிப்பிடுதலுங் காண்க. இவற்றால், சேரன் செங்குட்டுவனை அவன் தேசத்திலும் நகரத்திலும் ஓடும் நதிகளோடும் உவமித்து முற்கால வழக்குக்கிணங்கச் சிறப்பித்தனர் பரணர் என்பது நன்கறியப்படும்.
இக்கருவூர்க்குக் கிழக்கே ஆம்பிராவதிக் கரையிலுள்ள அரசவனம் என்னும் பிரதேசத்தில் திருமால் பள்ளி கொண்டருளும் ஆலயமொன்றுண்டு என்று கருவூர்ப்புராணங் கூறுகின்றது (ஆம்பிராவதிச்சருக்கம்.) இஃது இப்போது கருவூரில் அரங்கநாதப் பெருமாள் கோயில் என்று வழங்கப்பட்டு, அப்பெருமாள் பள்ளி கொண்டருளுந் தலமாயுள்ளது. ஆடகமாடம் என்ற பெயருடன் திருமால் பள்ளிகொண்டருளுங் கோயிலொன்று,இளங்கோவடிகளாற் குறிக்கப்பட்டிருப்பது, மேற்கூறிய சந்நிதியே யாதல்வேண்டும்.
சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், "ஆடகமாடம்-திருவனந்தபுரம்;இரவிபுரம் என்பாருமுளர்" (பக்.68) என்றெழுதினார். ஆனால், செங்குட்டுவன்,ஒரேயிரவில் சித்தஞ்செய்து, வடநாட்டிற்குப் பிரயாணித்த அவசர தருணத்தில், ஆடகமாடத்துத் திருமாலின்கோயிற் பிரசாதத்துடன் சிலர் வந்து அவனைக்கண்டனர் என்று அடிகள் கூறுவதை(இந்நூல் வேறிடம் காண்க) நோக்குமிடத்து, அக்கோயில்,வஞ்சியாகிய கருவூர்க்குப் பக்கத்திருந்ததாகுமே யல்லது, 300-மைலுக்கப்பாலுள்ள திருவனந்தபுரமாகாதென்பது திண்ணம்; ஆதலால்,மேற்கூறிய அரங்கநாதப்பெருமாள் சந்நிதியே பழைய ஆடகமாடமாகக் கொள்ளுதல் பொருந்துமெனலாம்.(கருவூர்-அரங்கநாதர்சந்நிதியை யாம் நேரிற்சென்று தரிசிக்க நேர்ந்தபோது, அக்கோயில் சிறியதாயினும் பழமையே காணப்பட்டது; கர்ப்பக்கிரகத்துள்ளே அரவணையிற் பள்ளிகொண்டருளும் பெருமாள் சாந்தாகார முடையவரென்று விசாரணையில் தெரிந்தோம். ஆனால், கர்ப்பக்கிரகத்தின் மேற்குவெளிப்பிரகாரத்தை யாம் அடைந்தபோது,ஒரு சிறுபந்தருள்,சேஷசாயியாகத் திருமாலினுருவம் வகுக்கப்பட்ட பெரிய சிலையொன்று அற்புதமாக ஆங்குக் காணப்பட்டது. அம்மூர்த்தியின் வரலாற்றை விசாரித்ததில், மடைப்பள்ளியைத் திருப்பணிக்காகப் பிரித்தபோது,பூமியின்கீழ் அவ்வழகிய சிலை அகப்பட்டுச் சில மாதங்களே ஆயினவென்று தெரியவந்தது. இவற்றை நோக்குமிடத்து அவ்வரவணைக்கிடந்த மூர்த்தியே, செங்குட்டுவன்காலத்து "ஆடக மாடத் தரவணைக் கிடந்தோ"னாக வேண்டுமென்றும், ஏதோ ஒரு காலவிசேடத்தால் அம்மூர்த்தி பூமியில்மறைந்து, அதற்குப் பிரதியாக சாந்தாகாரமூர்த்தி அக்கோயிலுள் எழுந்தருளப்பண்ணப்பட்ட தென்றும் கருதப்படுகின்றன. செங்குட்டுவன் சிவபிரான்பாற் பக்திமிகுதியுடையனென்பதை முன்னமே விளக்கினோம். (இந்நூல்,வேறிடம் காண்க)
இளங்கோவடிகள் வஞ்சியிலிருந்த சிவாலயத்தைப்பற்றி ஒன்றுங் கூறநேராமற் போயினும், "ஆனேறுயர்த்தோன்", "செஞ்சடைவானவன்" "உலகுபொதியுருவத் துயர்ந்தோன்" எனத் தம் தமயனாற் பக்திசெய்யப்பட்ட சிவபெருமானைச் சிறப்பித்தலால், அப் பெருமானுக்கு ஆலயமொன்று அந்நகரில் அமைந்திருந்ததாகக் கொள்ளத் தடையில்லை. ஆயின், அஃது, இப்போதுள்ள பசுபதீசுவரர் கோயிலே ஆதல்வேண்டும். இவ்வாலயம், கருவூர்த் திருவானிலை எனத் தேவாரப்பாடல் பெற்றிருத்தலோடு, சோழர் சாஸனங்கள் பல கொண்டதாகவும் உள்ளது. காமதேனுவாகிய பசுவினாற் செய்யப்பட்ட ஆலயமாதலின் இதற்கு "ஆனிலை" எனப் பெயர்வழங்கியதென்பர்.இதுபற்றியே, இக்கோயிற் சிவபிரான், பசுபதீசுவரர் எனப் பட்டார். இங்ஙனம் கருவூர்க்கு ஆனிலை என்ற பெயரிருத்தல் போலவே, அவ்வூரையடுத்துச் செல்லும் ஆம்பிராவதிக்கு,ஆன்பொருநை ஆன்பொருந்தம் எனப் பெயர்கள் வழங்குதல் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இனி "பங்குனி விழவின் வஞ்சியொடு, உள்ளி விழவி னுறந்தையுஞ் சிறிதே" எனவரும் முன்னோர் கூற்றும், (தொல்-பொருளதி. பக். 320) "மதுரை ஆவணியவிட்டமே,கருவூர்ப் பங்குனியுத்திரமே, உறையூர் உள்ளிவிழாவே" எனவரும் இறையனார் களவியலுரை வாக்கியமும்,(மேற்படி. களவியல். 17-ம் சூத்திரவுரை காண்க.; இதனுள்,"உறையூர்ப் பங்குனியுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே" என மாறிக் காணப்படுகின்றது; ஆயினும் முன் காட்டிய பழையவாக்கிற்கிணங்கக் "கருவூர்ப் பங்குனியுத்திரமே" என்று பாடங்கொள்ளுதலே பொருத்தமாகும்.) கருவூரில் நிகழ்ந்த திருவிழாநாளொன்றைக் குறிப்பிடுதல் காணலாம். இக்குறிப்பின்படி,வஞ்சிப்பங்குனி விழா என்பது, கருவூர்ப் பசுபதீசுவரர்க்கு ஆண்டுதோறும் இக்காலத்தும் நடைபெறும் பங்குனியுத்தரத் திருவிழாவாகவே கருதப்படுகின்றது.
இனி, வஞ்சியை மேற்கூறிய கருவூராகக் கொள்ளாது,மலைநாட்டுக் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களம் என்று கருதுவாரும்;,அந்நாட்டு மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துப் பேரியாற்றங்கரையிலுள்ள திருக்கரூர்(திருக்கரூர் (Tiru-karur), கொச்சிக்கு வடகிழக்கே 28-மைலிலும், கோதைமங்கலத்துக்கு 3-ம் மைலிலும் உள்ளதென்றும், அஃது இப்போது பாழூராயிருப்பினும் கிலமான பலபெரிய கட்டிடங்களும் கோயிலும் உடையதென்றும் கூறுவர். (The Tamils 1800-years ago. p. 15).) என்று கருதுவாருமெனச் சரித்திரவறிஞர் பலராயினார். இவற்றுள் முதலிற் கூறியது, அடியார்க்குநல்லார்க்கும் ஒத்த கொள்கையாயிருத்தலே வியப்பைத்தருவதாம்.(சிலப்பதி. பதிகம். 3. உரை.) ஆனால், இவ்விரண்டுபக்ஷங்களும், ஆராயுமிடத்துச்சிறிதும் உறுதிபெற்றனவாகக் காணப்படவில்லை. முதலாவது - திருவஞ்சைக்களம் என்பது கொச்சிக்கு வடக்கே 10-மைல் தூரத்தில் பேரியாறு மேல்கடலிற் சங்கமமாகுமிடத்து உள்ளதாம். மகோகை என்னும் கொடுங்கோளூரையடுத்துள்ள இவ்வூர், பாடல் பெற்ற பழைய சிவதலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தைப் பற்றிச் சுந்தரமூர்த்திநாயனார் பாடிய பதிகத்தில் - "கடலங்கரைமேன் மகோதை யணியார்பொழில் அஞ்சைக்களத் தப்பனே" என்ற தொடரே பாட்டிறுதிதோறும் பயின்றுவருகின்றது. எனவே, அந்நாயனார் காலத்துக்கு முன்பு அத்தலத்துக்கு வழங்கிவந்த பழையபெயர் அஞ்சைக்களம் என்பதே விளக்கமாகும். ஆகவே, அத்தலத்தை வஞ்சியோடும் சம்பந்தமுடையதாகக் கருதற்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க.
இனிப் பழைய சேரர்தலைநகரான வஞ்சிமாநகரம் கடற்கரைக்கண்ணதாயின், அதனைச் சிறப்பிக்கப்புகுந்த சிலப்பதிகார மணிமேகலைமுதலிய முன்னூல்கள், உடனொத்த புகார் கொற்கைமுதலிய பட்டினங்களைப்போலவே வஞ்சியையும்(செங்குட்டுவனது வடயாத்திரையில் அவன்சேனை சென்றதைக் கூறுமிடத்து "வஞ்சிநீங்கித்- தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும், வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத" என இளங்கோவடிகள் கூறியிருப்பது, அச்சேனையின் பரப்புமிகுதியை வருணித்த படியேயன்றிப் பிறிதன்று. வஞ்சி கடற்கரைக்கண்ணதாயின்,தானைகளின் பெருக்கைக் கூறவந்த அவ்விடத்தே, அவை கடற்கரை விளிம்புவரை சென்றனவென்று அடிகள்கூறுவதில் பெருமையும் வியப்புமில்லையென்க. இனி, செங்குட்டுவன் வடநாட்டினின்று திரும்பிவரும்போது, நால்வகை நிலத்தாரும் அடைந்த மகிழ்ச்சிகளை வருணிக்கு முறையில், நெய்தனிலமாக்கள் செய்தியும் கூறப்பட்டதன்றி,கடற்கரைச் சம்பந்தம்பற்றி யன்றென்பதும், அறியத்தக்கது.) அதன் கடல்வளச் சிறப்பால் வருணித்துக் கூறாமற்போகுமா? ஒருகாலுமில்லை. அங்ஙனம் கடற்கரைச்சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃது உள்நாட்டு நகரமென்பதை(தாலமி (Ptolemy) என்னும் பூர்வயவனாசிரியர், கருவூரை நேரிற் கண்டெழுதிய குறிப்பில்,அஃது உள்நாட்டிலிருந்த நகரமாகவே கூறினர் என்பர். (The Tamils 1800 years ago. p.20) விசதமாக்கவல்லது. மேலும், கருவூர் என்ற பெயர் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களத்துக்கு உள்ளதாகப் பிரமாணமொன்றுங் காணப்படாமையும் அறிக.
இனி, ஸ்ரீ: கனகசபைப்பிள்ளையவர்கள் மேற்குத்தொடரையடுத்துப் பேரியாற்றங் கரையிலுள்ள திருக்கரூரே வஞ்சியாதல் வேண்டுமென்றும்,அதற்கேற்ப அங்குள்ள பேரியாறே நூல்களிற் கூறப்பட்டபடி,ஆன்பொருநையாதல் வேண்டுமென்றும் ஒரு புதியகொள்கையை நாட்ட, அதனையே சரித்திரவறிஞர் பலரும் பின்பற்றுவாராயினர். இக் கொள்கைக்கு ஆதாரமாயிருப்பதெல்லாம், கருவூரென்ற பெயரொற்றுமை யொன்றைத்தவிர, வேறு சாதனமில்லை. இங்ஙனம் பெயரொப்பொன்றையே கொண்டு, நாம் ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனம் கூடும்? இனி, வஞ்சியிலிருந்த செங்குட்டுவன் "மஞ்சுசூழ்சோலை மலைகாண்குவம்"என்று, தன் பரிவாரங்களுடன் புறப்பட்டுப் பேரியாற்றை யடைந்தானென்று முன்னமே சொன்னோம். இதனால், மலைவளமில்லாததோர் இடத்தே அவன் தலைநகர் அமைந்திருந்ததாதல் வேண்டுமன்றோ? மேற்குமலைத்தொடரின் அடிவாரத்துள்ள திருக்கரூரே செங்குட்டுவன் தலைநகராயின்,மலைவளங் காண்டல்வேண்டி அவன் பேரியாற்றங்கரை சென்றானென்று சிலப்பதிகாரங் குறிப்பதில் வியப்புத்தான் என்னை? இதனால்,வஞ்சியென்பது, ஆம்பிராவதி அல்லது ஆன்பொருநைப் பக்கத்ததும்,மலைவளமில்லாததுமான கருவூரேயாதல் திண்ணமென்க. இங்ஙனமாயின், இக்கருவூரிலிருந்து செங்குட்டுவன் பிரயாணித்த பேரியாற்றங்கரை உத்தேசம் 300-மைல் தூரமுடைய தாகல்வேண்டும்.(அறுபதின்காத தூரமென்பர், அடியார்க்குநல்லார். (சிலப்.பதிகம்.3.உரை) இவ்விடத்தே ஓர் ஆக்ஷேபத்தைச் சிலர் கூறுகின்றனர்;அஃதாவது - மலைவளங் காணச் சென்ற செங்குட்டுவன் 300-மைல் பிரயாணித்தவனாயின், அந்நெடும் பிரயாணத்தில் அவன் இடையிற்றங்கியே சென்றிருத்தல் வேண்டும்;
அங்ஙனஞ் சென்ற செய்தியை அடிகள் குறிக்கவில்லை-யாதலால்,அரசன் சென்றுவந்த பேரியாற்றங்கரை அவன் தலைநகர்க்கு அணித்தாதல் வேண்டும்--என்பதாம்; "அரசனும் உரிமையும் மலைகாண்குவம் என்று வந்து கண்டவன்றே வஞ்சி புகுந்தமையானும்" என அடியார்க்குநல்லாரும் இக்கருத்தேபட எழுதினார். ஆனால், செங்குட்டுவனது நீண்ட யாத்திரையைக் கூறுமிடமெங்கும்
அவன் இடையிற்றங்கிய விவரத்தையும் இளங்கோவடிகள் கூறிச்செல்லு மியல்புடையரோ எனின், இல்லை. இதற்கு நீலகிரியினின்று செங்குட்டுவன் கங்கைக்கப்பால்வரை சென்று வந்த நெடும்பிரயாணத்தை அடிகள் மிகச் சுருக்கிக் கூறிச்செல்வதே, தக்க சான்றாகும். அன்றியும், வஞ்சியாகிய கருவூருக்கும் பேரியாற்றங்கரைக்கும் நெடுந்தூர முண்டென்பதற்குச் சிலப்பதிகாரத்தே மற்றொரு சிறந்த சான்றுமுண்டு; இளங்கோவடிகள் தம் தமயனது வடயாத்திரையை வருணிக்குமிடத்து "ஒரு நூற்றுநாற்பது யோசனைதூரம், இந்திரன் யானைகளைப் பரப்பிச் செல்வதுபோலச் சென்றான்" என்கிறார்.* ஈண்டு "ஒருநூற்றுநாற்பது" என்னுந்தொடர் இந்திரனது யானைப்பரப்பின் தூரத்தைக் குறிப்பதென்பதினும் செங்குட்டுவனது பிரயாணதூரத்தைக் குறிப்பதென்பதே பொருத்தமாகும். இன்றேல், நூற்று நாற்பதென்ற எண்ணை அடிகள் குறிப்பிடுவதற்குத் தக்ககாரணம் வேண்டுமன்றோ? இந்திரனுக்கே அத்தொடர் விசேடிக்கப்பட்டதாயினும், அத்தொ
கையினளவு தூரத்தை, அடிகள் சேரன் பிரயாணத்துக்கு உவமித்திருப்பது, அவன் சென்றுவந்த பேரியாற்றங்கரை வஞ்சிமாநகர்க்குச் சமீபித்ததன்று என்பதை வெளியாக்கும் என்பதில் ஐயமில்லை.**
---------
* "விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்-ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த-பெருமால் களிற்றுப் பெயர்வோன் போ ன்று" என்பது மூலம் (சிலப்.25-11,15,16.))
** யோசனையினளவு பலபடியாக வழங்கிவருகின்றது (சீவகசிந்தாமணி. இரண்டாம் பதிப்பு. வீசேடக்குறிப்பு. பக். 84 பார்க்க.) மலைநாட்டு வழக்கப்படி, யோசனை-யொன்றுக்கு 4 நாழிகை அல்லது 6 மைலாகக் கொண்டால், 140-யோசனைக்கு 840-மைலாகும். கருவூருக்கும் பேரியாற்றங்கரைக்கும் உத்தேசம் 300-மைலேயாதலின், இது மிகவும் அதிகமேயாம். இதனால், இளங்கோவடிகள் காலத்து ஒருயோசனையினளவு 2 1/2 மைலுக்குட்பட்டதாக இருந்ததுபோலும்.
மேற்கூறியவாறு, கருவூரையடுத்து ஆம்பிராவதியும் காவிரியுங்கலக்கும் கூடலையும், நொய்யல் அல்லது காஞ்சிமாநதியையும் பரணர் செங்குட்டுவனுக்கு உவமையாகக் கூறியிருத்தலும், ஆன்பொருநைக் கரையில் வஞ்சியுள்ளதாகச் சொல்லப்படுதலும், கருவூர்க்கும் பேரியாற்றுக்கும் பெருந்தூரமுண்டென்பதை இளங்கோவடிகள் குறிப்பிப்பதும்-சேரரது பழைய தலைநகரம் அந்நதிகள் பாயுமிடங்களுக்குப் பக்கத்தது என்பதற்குத் தக்கசான்றாதல் காணலாம். கொச்சிராஜ்யத்துள்ள கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களமாயின், அம் மலைநாட்டு நதியொன்றையும் பரணர் செங்குட்டுவனுக்கு உவமிக்காமல், மேற்காட்டிய ஆறுகளையே† கூறிச்செல்வதற்குத் தக்க காரணம் வேண்டுமன்றோ?
-----------
† இந்நதிகளன்றி, அயிரை என்ற நதியும் (சிலப். 28. 145) அப்பெயரேகொண்ட மலையும் (பதிற்றுப். 21) சேரநாட்டில் உள்ளனவாகச் சொல்லப்படுகின்றன. இவற்றுள், அயிரையாறு,சேரர்க்குரிய கொல்லிமலையில் (அகநா. 33. 281) உற்பத்தியாகிக் காவிரியுடன் மேலணையிற் சங்கமிக்கும் அய்யாறு என்ற நதியாகக் கருதப்படுகிறது. இனி, அயிரிமலை என்பது, குழித்தலைக்கு மேற்கே 4 1/2-மைலில் உள்ள இரத்தினகிரி போலும்; இதற்கு அய்யர்மலை என்னும் பெயரும் அப்பக்கத்து வழங்குதல் காண்க. கருவூர்க்குக் கீழ்பாலுள்ள செங்குத்தான இவ்வழகிய குன்றினுச்சியில் மிகப்பழைய சிவாலயமொன்று உண்டு. பதிற்றுப்பத்துக் கூறுமாறு, சேரர்களது குலதெய்வமாக விளங்கிய கொ1ற்றவைக்கடவுட்கு இக்குன்று முற்காலத்துச் சிறந்த தலமாயிருந்தது போலும். இனி, முசிரி என்ற பெயர்கொண்ட ஊரொன்று இப்பக்கத்துள்ளதை நோக்குமிடத்து,சேரர்க்குச் சிறந்த துறைமுகமாய் மேல்கடற்பக்கத்தமைந்த முசிரியை ஞாபகப்படுத்தற்கு உண்ணாட்டில் அவ்வரசர் அதன் பெயரிட்டதுபோலத்;தோற்றுகிறது.இப்பக்கத்துத் தோட்டியமுதலியவிடங்களில் மதுரைக்காளியம்மன் என்ற பெயராலும் பிறவகையாலும் பிடாரிவழிபாடு பெரிதும் நிகழ்ந்து வருவதானது, பூர்வத்திற் பத்தினிவணக்கமாயிருந்ததே காலாந்தரத்தில் அங்ஙனம் மாறியதோ என்று கருதவும் இடந்தருகின்றது.
---
இதற்கேற்ப, வஞ்சி வஞ்சுளாரணியம் என்றபெயர்கள் முன்குறித்தபடி,ஆம்பிராவதிக் கருவூர்க்கு இன்றும் வழங்கிவருதல் அறியத்தக்கது. இவையன்றி, பழைய ரோம சக்கரவர்த்திகளாகிய அகஸ்டஸ் (Augustus) டைபீரியஸ் (Tiberius), கிளாடியஸ் (Claudius) முதலியோர் நாணயங்கள் இக்கருவூர்ப்பக்கத்தே 1806-ம் வருஷத்துக் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருவதும்,(Gazetteer of Trichinopoly. p. 260) இதன் பழைமை பெருமைகளை நன்கு விளக்குவதாம். கருவூர்க் கோட்டை இப்பொழுது அழிபட்ட நிலையிற் காணப்படுகின்றது.
இங்ஙனம் ஆம்பிராவதி அல்லது ஆன்பொருநைக் கரையிலுள்ள கருவூரே, சேரரது பழமை பெருமை வாய்ந்த தலைமைநகராயிருப்பவும்,அச்செய்தியைச் சங்க காலத்துக்குப் பிற்பட்ட தமிழ்மக்கள் முற்றும் மறந்துவிட்டனரென்றே தோற்றுகிறது. இவ்வூர்த் திருவானிலைக் (திருவானிலை என்பது, கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலே.) கோயிலைப்பற்றிய தேவாரப் பதிகங்களிலேனும் அக்கோயிலிற் கண்ட சாஸனங்களிலேனும் (இப்பசுபதீசுவரர் ஆலயத்தில், வீரராஜேந்திரன் 1, இராஜேந்திரன் 1, குலோத்துங்கன் 3, வீரசோழன் என்ற சோழவரசர் சாஸனங்களாகக் கண்டவற்றை, சாஸனபரிசோதகர் வெளிப்படுத்தியிருக்கின்றனர். (South Indian Inscriptions. Vol. III. No. 20-26).
வஞ்சியின் பழஞ்செய்தி சிறிதுங் குறிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இக்கருவூரின் ஸ்தானத்தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராஜதானியாகப் பின்னூல்களிற் கூறப்படுதல் காணலாம்; "சேரர்குலக் கோவீற்றிருந்து முறைபுரியுங் குலக்கோமூதூர் கொடுங்கோளூர்" என்றார் சேக்கிழாரும். (சேரமான் பெருமாணாயனார் புராணம். 1.) இங்ஙனம் சேரர் தலைநகரமானது பிற்காலத்து முற்றும் மறக்கப்பட்டதற்கும் அதற்குப் பிரதியாக வேறு தலைநகரம் மலைநாட்டில் உண்டானதற்கும் தக்க காரணங்களும் உள்ளன. கருவூர்,சோணாடு பாண்டிநாடுகளின் எல்லையில் அமைந்தமையால், (கருவூர்க்குக் கீழ்பால் 8-மைலில், காவிரிக்கரையிலுள்ள மதுக்கரையைச் சேர- சோழ -பாண்டிய நாடுகளின் எல்லையாக இக்காலத்தாரும் கூறுவர். சோணாட்டின் மேற்கெல்லை கருவூர் என்பர், யாப்பருங்கலக்காரிகை உரைகாரர். (ஒழிபி. 7.உரை). சேரருடன் விவாதம் நேரிட்டபோதெல்லாம் தமிழ்வேந்தர்க்குள் போர்நிகழ்வதற்கு அஃது உரியகளமாயிற்று. இச்செய்தி புறநானூறு முதலிய சங்கச்செய்யுள்களால் நன்கறியப்படும். பிற்காலத்திற் சோழரது ஆதிக்கம் பெருகியபோது, கருவூர் சோணாட்டின் முக்கியநகரங்களுள் ஒன்றானசெய்தி சாஸனங்களாலும்$$ (கி.பி. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கருவூர் சோணாட்டைச் சார்ந்ததென்பர்.
சாஸனபரிசோதகர் (Government Epigraphist report. 1891.)) நூல்களாலும் தெரிகின்றது; "அநபாயன் சீர்மரபின் மாநகரமாகுந் தொன்னெடுங் கருவூர்" (எரிபத்த.2) "தங்கள் குல மரபின்முதற் றனிநகராங் கருவூரில்" (புகழ்ச்சோழ. 12) எனச் சேக்கிழாரும் இச்செய்தி கூறுதல் காண்க. ஏறக்குறைய 900-வருஷங்கட்குமுன் சோழ சக்கரவர்த்திகளாகப் பிரபலம் பெற்றிருந்த இராஜராஜன் 1. அவன்மகன் இராஜேந்திரன் 1 காலங்களில், இக்கருவூரைச் சூழ்ந்த வெங்காலநாட்டிற்குக் கேரளாந்தகவளநாடு என்றும், இவர்களை அடுத்த குலோத்துங்கசோழன் காலத்தில் சோழகேரளமண்டலம் என்றும் பெயர்கள் வழங்கிவந்தன என்பது(S.I.I Vol. III No. 30, 31.) கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலுள்ள சாஸனங்களால் வெளியாகின்றது. இப்பெயர்களால், சோழராதிக்கத்துக்கு முன்பு கருவூர்ப்பிரதேசம் சேரர்க்குச் சிறந்தபூமியாகக் கருதப்பட்டிருந்தமை பெறப்படும். சோழர்க்குமுன் இம்மண்டலம் கொங்கு தேச ராஜாக்கள் ஆட்சிக்குட்-பட்டிருந்ததென்றும், (கருவூர், கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகக் கூறப்படுதல் காண்க. ஆனால், சங்கநாளிலே, கொங்குதேசம் குடகுநாடாயிருந்தமை "குடகக்கொங்கரும்" என்னும் அடிகள் வாக்கால் அறியலாம்.(சிலப். 30. 159)) அவர்க்கும் முற்பட்ட சங்ககாலத்தேதான்,அது சேரரது சிறந்த தேசமாகி வஞ்சி எனப்பட்ட இக்கருவூரை தலைமை நகரமாகக்கொண்டு விளங்கியதென்றும் அறியத்தக்கன. சங்ககாலத்துக்குப் பின்னர்ச் சோழராற்றற்கு அஞ்சிய சேரர்,வஞ்சியைவிட்டுநீங்கித் தங்கட்குரிய மலை நாட்டிற் கடற்கரையிலுள்ள கொடுங்-கோளூரைத் தலைமை நகரமாகக் கொள்ளலாயினர். பிற்பட்ட சேரராஜதானியாகத் தெரிகின்ற இவ்வூரைப் பழையவஞ்சி அல்லது கருவூரென்று கொள்வதற்குச் சங்கநூற்பிரமாணம் ஒன்றுமே கிடையாதாயினும் அடியார்க்குநல்லாருள்படப் பலரும் இதனையே மாறிக்கருதுவாராயினர்.
கொடுங்கோளூர் என்ற பெயரோ பழைய நூல்களுக்குச் சிறிதுந் தெரியாத தொன்றாகும். இதனையடுத்துள்ள திருவஞ்சைக் களத்துக்கும் வஞ்சிக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லாமையால், சரித்திரவறிஞர் அவ்விரண்டனையும் பொருத்தி யெழுதுவனவெல்லாம் முன்னைவழக்கோடு முரணுவதேயென்க. இனிச் சிலர், சிலப்பதிகார மணிமேகலைகளில், இக்காலத்துவழங்கும் மலைநாட்டுச் சொற்களும் வழக்குகளும் காணப்படுவது கொண்டு, செங்குட்டுவனது தலைமை நகரும் அம்மலை நாட்டிருந்ததாகக் கருதுவர். மலைநாட்டு வழக்கென்று அவர்கள் காட்டுவனவெல்லாம் பொதுவாகப் பழைய தமிழ்வழக்குகளேயன்றி வேறில்லை. அதனால், நம் காலத்து வேறுபட்டதுபோலவே, செங்குட்டுவன் காலத்தும் அவ்வழக்குகள் வேறுபட்டிருந்தன என்று கருதுதல் பொருந்தாதென உணர்க. ஒருகால், சிற்சில வழக்குகள் மலைநாட்டுக்கே சிறப்புடையவாயினும் நம் சேரனுக்கு அம்மலைநாட்டினும் உரிமையுந் தலைமையுமுண்டாதலால்,அதுபற்றி அவனைப்பற்றிய பாடல்களில் அவ்வழக்குகள் பயின்றன என்று கருதுதலும் இழுக்காது. இதுவரை யாம் கூறிவந்த பிரபல பிரமாணங்களால் சேரராஜதானியாகிய வஞ்சியென்பது, ஆம்பிராவதிக் கரையிலுள்ள கருவூரேயன்றிக் கொடுங்கோளூரேனும் திருவஞ்சைக்களமேனும் ஆகாவென்பதும், கனகசபையவர்கள் கருத்துப்படி, பேரியாற்றங்கரைத் திருக்கருவூரைப் பழைய வஞ்சியாகவும், அப்பேரியாற்றையே பொருநையாகவும் கொள்வதற்குப் பொருத்தமும் பிரமாணமும் இல்லையென்பதும் நன்கு விளங்கத்தக்கன.
இனி, செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரைக்குச் சமீபித்ததும்,கண்ணகி விண்ணாடு சென்றதுமான செங்குன்று(கண்ணகி சுவர்க்கம்புக்க மலை, செங்கோடு என்பது, அரும்பதவுரையாசிரியர் கருத்து (சிலப். அரும்பத. பக். 74); அடியார்க்கு நல்லார், அவரெழுதிய செங்கோடென்பது இப்போது சேலம் ஜில்லாவைச்சேர்ந்த திருச்செங்கோடாகக் கருதி, அவ்வூர் கண்ணகி விண்ணாடு சென்ற இடமாகாதென்றும், செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரையை அடுத்த செங்குன்றே அவ்விடமாதல் வேண்டும் என்றும் எழுதினர். (சிலப். பதிகம். 3. உரை).) என்னும் மலையே, அச்சேரன் பத்தினிதேவிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த இடமாகும். கண்ணகியின் உற்றார் அவள்கோயிலை அடைந்ததையும், அவரை நோக்கி அப்பத்தினிக்கடவுள் கூறிய வார்த்தையையும் இளங்கோவடிகள் எழுதுமிடத்து:-
"வையையொரு வழிக்கொண்டு,
மாமலைமீ மிசையேறிக் கோமகடன் கோயில்புக்கு"
(சிலப். 29. உரைப்பாட்டுமடை)
"வென்வேலான் குன்றில் விளையாட்டி யானகலேன்
என்னோடுந் தோழிமீ ரெல்லாரும் வம்மெல்லாம்"
(சிலப். 29. உரைப்பாட்டுமடை)
என முறையே கூறுதலால், பத்தினிக்கோயில் கருவூர்க்கு வெகுதூரத்தில் மலைமேலமைந்திருந்தமை புலப்படும். அன்றியும், பத்தினிப் பிரதிஷடைக்குரிய முற்காரியங்களைச் செங்குட்டுவன் வஞ்சியிலிருந்தே செய்துவந்தவனென்பது:-
"சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
கடவுண் மங்கலஞ் செய்கென ஏவினன்" (சிலப். 28-223, 225, 233)
என்னும் அடிகளது வாக்கின்போக்கால் அறியப்படுகிறது.மணிபல்லவத்தினின்று புறப்பட்ட மணிமேகலையும் முதலில் இச்செங்குன்றையடைந்து, தன் தாயாகிய அப் பத்தினியை ஆங்குத் தரிசித்தபின்பே வஞ்சிநோக்கிச் சென்றனளென உணர்க.(மணிமேகலை 25-ம் காதை முடிவும், 26-ம் காதை முதலுங் காண்க.) இச்செங்குன்று இப்போது செங்குன்றூர் என்னும் பெயருடன் மலைநாட்டில்(செங்குன்றூர், மலைநாட்டில் அகலப்புழைக்குத் தென்கிழக்கிலும் கோட்டயத்துக்குத் தெற்கிலும், உத்தேசம் 20-மைல் தூரத்துள்ளது.) உள்ளது. இவ்வூரிலுள்ள குன்றின்மேல் மிகப்பிரபலம் பெற்ற பகவதிகோயிலொன்று உண்டு. இத்தேவிக்குத் திருவிழா முதலியவை பெருஞ் சிறப்புடன் நடைபெறுகின்றன. இப்பகவதியை மதுரை மீனாக்ஷியம்மனாக அப்பக்கத்தார் இன்றும் வழங்கிவருவதாகத் தெரிதல் ஆராயத்தக்கதேயாம்.