செட்டியார் தாலாட்டு-2

ஆறாம் பெரியேரி
அக்கரையும் பொன்னேரி
பொன்னேரி போய் திரும்ப
பொழுது இல்லா புண்ணியராம்.
நல்ல மாங்கொல்லையிலே
புள்ளி மான் மேயுதடா.
புள்ளி மான் புடிச்சிக் கட்ட
புடி கவறு பொன்னாலே!
காசி யளப்பான் செட்டி மகன்
முத்தாளப்பன் வேவாரி,
வச்சியளக்கச் சொல்லி,
வரிசையிட்டான் தாய்மாமன்,
அஞ்சு கிளி மையெழுதி-உங்க
ஐயனார் பேர் போட்டு,
கொஞ்சுக் கிளி போகுதப்பா!
கோவக் கனி கொண்டுவர.
அன்னக் கிளி போகுதையா-உனக்குத்
தின்னுங்கனி கொண்டுவர,
துங்கற கண்ணுக் கெல்லாம்
துரும்புகிள்ளி மையெழுத
கன்னான் மகனாம் நீ!
காசித் தட்டான் தன் மகனாம்!
செட்டி மகனாம் நீ!
சென்னு செட்டி பேரனாம். நீ!
மானத்து மீனாம் நீ!
மச்சி செட்டி தான் மகனாம்!
தோட்டத்து மீனோ நீ!
தொரைங்க கிளாமணியோ!
வண்டு கொடஞ்ச மரம்!
வாசலுக்கு ஏத்த மரம்!
தும்பி தொளைச்ச மரம்!
தூணாகுமோ தொட்டிலுக்கு?
ஏறாத மலையேறி,
இளவாரை மூங்கைவெட்டி,
எட்டாத தொட்டிலிட்டு
எட்டாத தொட்டிலிலே,
தொட்டாடும் கண்மணியே!
தொட்டிலிட்ட நல்லம்மான்,
பட்டினியாய்ப் போராண்டா,
பட்டினியாய்ப் போன மாமன்-உனக்குப்
பரியங் கொண்டு வருவானோ?
வட்டார வழக்கு: வம்மிசம்-வம்சம்; பெத்த-பெற்ற; வேவாரி-வியாபாரி, கொறம்-குறம்,புடிச்சுக்கட்ட-பிடித்துக்கட்ட; மானத்து மீன்-வானத்துமீன்; தொளைச்ச-துளைத்த;தொரைங்க-துரைகள்; பரியம்-பரிசம். காசி அளப்பான் செட்டிமகன்-காசி பதம் என்ற குறிப்புரையில் காண்க. துரைங்க கிளாமணியோ!-துரைகளது கிளர்மணியோ என்று படிக்கவும்.
குறிப்பு: காசிபதம்-நாட்டுக் கோட்டைச் செட்டியர்களை நகரத்தார் என்று அழைப்பது வழக்கம். பண்டைக் காலத்தில் கூட்டாக வாணிபம் செய்யும் குழுக்களுக்கு நகரம் என்று பெயர் உள்ளன. இதனைச் சோழர் காலத்திய கல்வெட்டுக்களால் அறிகிறோம். வடநாட்டு நகரங்களால் காசியைத் தமிழர் அறிந்திருந்தனர். அவ்வளவு தொலைவிலுள்ள நகரத்திற்குச் சென்று இக் குழந்தை பெரியவனான பின்பு வியாபாரம் செய்வான் என்பது தாயின் கருத்து.
தேர்-அரசனைப் போல இவன் வருங்காலத்தில் தேரில் செல்லுவான். கொறத்தி கொறமாட-குறத்தி குறமாட குறம் குறத்தியர் பாடும் ஒரு கூத்தைக் குறிக்கும். கொறவர்-குரவர், வேதம் பாடுவோர்; பழங்காலப் பண்டிதர்கள் குரவர் என அழைக்கப் பட்டார்கள். அது பேச்சு வழக்காக வந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழி இங்கு பயின்று வந்துள்ளது.
சேகரித்தவர்: S. சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
------------------