ஞானோதயம்

bookmark

2813
மனசந் தியில்கண்ட மனநன வாகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1
2814
கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2
2815
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 3
2816
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4
2817
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 5
2818
விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே
அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6
2819
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்
ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 7
2820
நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்
நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது
நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8
2821
ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்
ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 9
2822
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 10
2823
காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11
2824
ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்
மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி
ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12