தமிழகத்துக் கோவில்கள்

bookmark

தமிழகத்தில் இன்றுள்ள கோவில்கள் எப்பொழுது தோன்றின? அவற்றிற்கு மூலம் என்ன? கோவிற் கலைஉணர்வு தமிழர்க்கே உரியதா? பண்டைக் காலத்தில் கோவில்கள் எவற்றிற்குப் பயன்பட்டன? நம்து கடமை என்ன? என்பன போன்ற கேள்விகட்கு விடைகாணலே இவ்வாராய்ச்சிக் கட்டுரையின் நோக்கமாகும்.

கோவிலும் கல்வெட்டும்
"செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவை இல்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திர சித்தன் (மகேந்திர பல்லவன்--அப்பர் காலத்தவன்) அமைத்த கோவில் இது" என்னும் கல்வெட்டு மண்டபப்பட்டு என்னும் இடத்துக் கோவிலிற் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 615 630 ஆகும்.

இக்கல்வெட்டால் அறியத்தக்க செய்திகளாவன:--
(1) மகேந்திரன் காலத்திற்கு முன் தமிழகத்தில் கற்கோவில்கள் இல்லை. இருந்த கோவில்கள் செங்கல், சுண்ணாம்பு,மரம் உலோகம் இவற்றால் ஆனவை.
(2) மகேந்திரனுக்கு முன்னரே தமிழர் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர். ஆயின், அவை மண், மரம் முதலியவற்றாலாகிய அழியத்தக்கன.  
(3) இங்ஙனம் அழியத்தக்க பொருள்களால் அமைந்த கோவில்களையே மகேந்திரன் கற்களில் செதுக்கி அமைத்தான்.
--------

தரையும் சுவர்களும் செங்கற்களால் ஆனவை; மேற்கூரை மரத்தால் ஆயது. அங்கங்கு இணைப்புக்காக ஆணிகள் முதலியன பயன்பட்டன. இங்ஙனம் அமைந்த கோவில்களே அவை. இத்தகைய கோவில்களை இன்றும் மலையாள நாட்டிற் காணலாம். இங்ஙனம் கோவில்களை அமைப்பதில் தமிழர் பண்பட்டிராவிடில், திடீரெனக் கி. பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பல கோவில்கள் தமிழ்நாட்டில் தோன்றிவிட்டன எனல் பொருளற்றதாய்விடுமு.

"விமானங்கள் - `தூயது, கலப்பு, பெருங்கலப்பு` என மூவகைப்படும். கல், செங்கல், மரம் முதலியவற்றில் ஒன்றைக் கொண்டே அமைக்கும் விமானம் `தூய விமானம்` எனப்படும்; இரண்டைக் கொண்டு அமைவது `கலப்பு விமானம்` எனப்படும்; பல பொருள்களால் அமைவது `பெருங் கலப்பு விமானம்` ஆகும்;  என்பது கட்டக்கலைநூல் கூற்றாகும். இதனாலும், பண்டைக்காலத்தில் கோவில்கள் இருந்தமையும் விமானங்கள் உண்மையும் அறியலாம்.
------

இனித் தமிழகத்தில் மகேந்திரனுக்கு முன்பே கோவில்கள் இருந்தமைக்குக் கல்வெட்டுகளே சான்றாதல் காண்க. (1) திருக்கழுக்குன்றத்துக் கோவிற் பெருமானுக்குக் கந்த சிஷ்ய பல்லவன் (கி. பி. 436-460) நிலம் விட்டதாகவும், அதனை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்தியதாகவும் ஆதித்த சோழன் கல்வெட்டு கூறுகிறது. (2) `தென்னவனாய் உலகாண்ட` கோச்செங்கணான் (கி. பி. 450-500) திருவக்கரையில் பெருமானுக்கு ஒரு கோவில் கட்டியிருந்தான். (அதிராசேந்திரன் அதனைக் கல்லாற் புதுப்பித்தான்) செம்பியன் மாதேவியார் திருவக்கரைக் கோவிலின் கருவறையைக் கல்லாற் புதுப்பித்தார்;  அவர் திருக்கோடிகாவில் இருந்த செங்கல் விமானத்தையும் கருங்கல் விமானமாக அமைத்தார். 
-----------------

சங்க காலத்துக் கோவில்கள்
பண்டைத் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலேயே வீரர் வணக்கத்திற்குரிய கோவில்கள் இருந்தன. முருகன், திருமால், காடுகிழாள் முதலிய தெய்வங்கட்குக் கோவில்கள் இருந்தன. தொகை நூல்களில் சிவபெருமான், முருகன், திருமால், பலராமன் இவர்கள் சிறப்புடைக் கடவுளராகக் கூறப்படுகின்றனர். "ஆலமர் செல்வற்கு நீலநாகம் நல்கிய கலிங்கத்தை, ஆய்வேள் அளித்தனன்" என்று புறநானூறு புகலல் காண்க. இதனால் அக்காலத்தில் கோவிலும் லிங்கமும் இருந்தமை நன்கறியலாம்.

கி.பி.2-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் 
காணப்படும் கோவில்கள் பல.

மணிமேகலையில்,
"காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்"

எனவரும் அடிகள் - வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார் இவர்க்குக் கோவில்கள் இருந்தமையை வலியுறுத்துகின்றன. சுடுமண் (செங்கல்) கோவில்கள் குன்றுகள்போல உயர்ந்திருந்தன என்பது அறியத்தக்கது.

அற்புத வேலைப்பாடு 
இக்கோவில்களும் அரசர் மாளிகைகளும் மண்டபங்களும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, நோறிகயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது,
"ஒருதிறம் சாரார் அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்து"
எனவரும் நெடுநெல்வாடை அடிகளாலும்,
"அறக்களத் தந்தனர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினக் கோட்டம்"
எனவரும் சிலப்பதிகார அடிகளாலும் நன்குணரக் கிடைத்தல் காண்க.

அரசர் கோவில்களும் தெய்வங்களின் கோவில்களும் சுற்றுமதில் உடையன; உயர்ந்த வாயில்களைப் பெற்றன; அவ்வாயில்கள்மீது உயர்ந்த மண்ணீடுகள் (கோபுரங்கள்) உடையன; அம்மண்ணீடுகளில் வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பது மணிமேகலை  மதுரைக் காஞ்சி  முதலிய நூல்கள் நுவலும் செய்தியாகும்.

இக்கோவில்கள் அனைத்தும் செங்கற்களால் அமைந்தவை. மேலே உலோகத்-தகடுகளும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இங்ஙனமே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன.

"விண்பொர நிவந்த வேயா மாடம்", "சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு"  
"நிரைநிலை மாடத்து அரமியந் தோறும்"  இவ்வாறு அமைந்த பெரிய கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களை யுடைய வாயில்களும், அவ்வாயில்கட்குத் துருப்பிடியாதபடி செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பது நெடுநல்வாடை (வரி 76-88)அடிகள் அறிவிக்கும் அரிய செய்தியாகும். சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் நடனக் கோலத்தைக் காட்டி அருளினன் என்பது புராணச் செய்தி.
------

பதஞ்சலி முனிவர் காலம் கி. மு. 150 என்று ஆராய்ச்சியாளர் அறைவர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர் ஏற்ற சிதம்பரத்தில் உள்ள திருக்கோவில் கி. மு. 150-க்கு முற்பட்டதாதல் அறிக. அங்குள்ள நடராசர் மண்டபம் மரத்தால் கட்டப்பட்டிருத்தலும் அதன் பழைமைக்குச்சான்றாகும். 
--------

கி. பி. 450 முதல் 500-க்குள் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கோட்சோழன் 70 கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். அவர்க்கு முன்னரே அப்பரும் சம்பந்தரும் இதனைத் தம் பதிகங்களிற் குறித்துளர்.

தேவாரகாலத்துக் கோவில்கள்
தேவாரகாலத்தில் தமிழகத்தில் ஏறத்தாழ 500 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் மரம், செங்கல், மண், உலோகம் இவற்றால் ஆனவை. அவை, (1) பெருங்கோவில், (2) இளங்கோவில், (3) மணிக்கோவில், (4) ஆலக்கோவில், (5) தூங்கானை மாடம் முதலிய பலவகைப்படும். இவற்றுள் தம் காலத்தில் பெருங்கோவில்கள் 78 இருந்தன என்று அப்பரே அறைந்துள்ளார். பெரிய கோவில்களைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்துள்ள (பெரியகோவில் திருச் சுற்றில் உள்ள) சிறிய கோவிலே `இளங்கோவில்` எனப்படும். பிறவும் இளங்கோவில் எனவும் பெயர் பெறும். எனவே, தேவார காலத்திற்கு முன்பே பல கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன என்பது தெளிவாகிறதன்றோ? இதனால், அவை முதலிற் கட்டப்பட்ட காலம் மிகப் பண்டையது என்பதும் வெளியாகுமென்றோ?தேவார காலத்தில் விமானம் கொண்ட கோவில்கள் இருந்தன என்பது பெண்ணாகடம் தூங்கானை மாடம் கோவில் அமைப்பைக்கொண்டு நன்கறியலாம். விமானம் `தூங்கும் யானை` வடிவில் அமைந்ததாகும். திரு இன்னம்பர்,திருத்தணிகைக் கோவில் விமானங்கள் இம்முறையில் அமைந்தவை. திருஅதிகைக் கோவில், திருக்கடம்பூர் இவற்றின் உள்ளறைகள் (மூலத்தானம்) தேர் போன்ற அமைப்பு உடையவை; உருளைகளும் குதிரைகளும் பூட்டப்பெற்றவை. திருச்சாய்க்காட்டுக் கோவிலை ஒட்டித் தேர் போன்ற விமானம் ஒன்று உருளைகளுடன் உள்ளது.

பழைய கோவில்கள்
இந்த விமான அமைப்புடைய தேர்போன்ற கோவில்களே பழையவை. இன்று காணப்படும் கோவில்களை அடுத்துள்ள தேர்கள் மிகப்பழைய காலத்தில் மரக்கோவில்களாக இருந்தவை. மனிதன் மரக் கோவில்களைப்போலச் செங்கற்கள் கொண்டு பிற்காலத்தில் கோவில்கள் அமைத்தான். சான்றாக, நகரியில் உள்ள சில கோவில்களைக் காணலாம். அவை கி.மு. 250-இல் ஆக்கப் பட்டவை. அவற்றைச் சுற்றிக் கற்சுவர்கள்  உள்ளன. ஆயின், கோவில்கள் மரத்தால் கட்டப்
பட்டவையே யாகும்.
------

"மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் கோவில்கள் எல்லாம், பல்லவர் காலத்தில் இருந்த தமிழ் நாட்டுக் கோவில்களைப் போன்றவையே என்பதைப் பார்த்தவுடன் கூறிவிடலாம்" என அறிஞர் லாங்ஹர்ஸ்ட் குறித்தல் காண்க.

திராவிடக்கலை
கோவில் கட்டுதல் திராவிடரது பழக்கம் ஆகலாம். அதனைப் பிற்காலத்தில் ஆசிரியர் கைக்கொண்டனர்.  "தூபி, சைத்தியம் என்பன திராவிடருடையன. இவற்றை ஆசிரியர் கடன் பெற்றனர். இவை பிற்காலத்தில் இந்து சமயக் கோவில்களிற் காணப்பட்டன. இவற்றையே பௌத்தர் மேற்கொண்டனர்.  விமான வகைகள் பல, தென் இந்தியாவில் உண்டு. அவை யாவும் கல்லறைகளிலிருந்து தோன்றின என்னல் தவறாகாது. தென் கன்னடக் கோட்டத்தில் உள்ள முதுபித்ரி என்னும் இடத்திற் காணப்படும் குருமார் கல்லறைகளில் மூன்று முதல் ஏழு அடுக்குகள் கொண்ட சதுரக் கல்லறைகள் பல இந்நாட்டில் உண்டு. இவ்வமைப்புகள் நாளடைவில் பெரிய விமானங்களாக மாறிவிட்டன என்பதில் ஐயமில்லை.
------------------

தென்னாட்டுக் கட்டடக்கலை
தமிழகத்துக்கே உரியது. இன்றுள்ள வானளாவிய கோபுரங்கள், விமானங்கள் இவற்றிற் காணப்படும் வேலைப்பாடுகள் அனைத்தும் இந்நாட்டுப் பழைய வேலைப்பாடுகளிலிருந்து வளர்ச்சியுற்றனவே ஆகும். இந்த வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக உண்டானவை. மனிதக் குரங்கின் மண்டை ஓட்டிலிருந்து இன்றைய மனிதனது மண்டை ஓடு வளர்ச்சியுற்றாற் போலவே தமிழகக் கட்டடக் கலையும் வளர்ச்சிபெற்று வந்ததாகும். இதன் உண்மையை மாமல்லபுரத்துத் தேர்களைக் கொண்டும், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனார் கோவில் வேலைப்பாட்டைக் கொண்டும் செவ்விதின் அறியலாம். 
---- 

கோவில்கள் பயன்பட்ட வகை
1. சங்க காலத்துக் கோவில்கள் அழியக்கூடிய பொருள்களால் ஆனவை. ஆதலால் நமக்குக் கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. பின்வந்த பல்லவர்கள் கற்கோவில்களை அமைத்தனர். ஆதலின் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவர்க்குப் பின் வந்த சோழர் பழைய கோவில்களைக் கற்கோவில்களாக மாற்றினர். ஆதலின் அழியா நிலையுடைய கல்வெட்டுக்கள் தோன்றின. அவை கோவில் அறப்பணிகளைக் குறிக்க எழுந்தன ஆயினும், அரசர், மரபு, போர்கள்,அரிய செயல்கள் இன்ன பிறவும் முதலிற் பொறிக்கப்பெற்றிருந்தன. அக் குறிப்புக்களே இன்று தமிழக வரலாறு கட்ட அடிப்படையாக இருந்து உதவுகின்றன.

2. கோவிலை அடுத்துச் சமய வளர்ச்சிக்குரிய மடங்கள் இருந்தன. அவை சமயக் கல்வியைப் புகட்டின; விழாக்களைக் காணவந்த அடியார்கட்கு உண்டியும் உறையுளும் உதவின. அம்மடங்கட்குப் பலர் தானம் அளித்துப் பாதுகாத்து வந்தனர்.

3. கோவிலை அடுத்து மருத்துவச்சாலை இருந்தது. இதனை எண்ணாயிரம், தஞ்சாவூர்ப் பெரிய கோவிற் கல்வெட்டுக்களால் அறியலாம்.

4. நடனம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் கோவிலில் வளர்க்கப்பெற்றன. இவற்றிற் பண்பட்ட பெண்மணிகள் இருந்தனர். அவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர், உருத்திர கணிகையர் எனப்பட்டனர். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் 400 பேர் இருந்தனர்; காஞ்சி-முத்தீச்சுவரர் கோவிலின் 42 அடிகள்மார் இருந்தனர். பெருங்கோவில்களில் எல்லாம் நடன அரங்கு, இசை அரங்கு, நாடக அரங்குகள் இருந்தன.

5. கோவிலில் `தருக்க மண்டபம், `பிரசங்க மண்டபம்` என்பனவும் இருந்தன என்பது திருவொற்றியூர்க் கோவிற் கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம். பாரதம், ஆகமம் போன்ற நூல்களைப் பொதுமக்கட்குப் படித்துக்காட்டக் கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

6. கோவில் திருச்சுற்று மாளிகையில் நூல் நிலையம் இருந்தது. அது `சரசுவதி பண்டாரம்` எனப் பெயர் பெற்றது.

7. கோவிலில் ஊரவையார் கூடி ஊராட்சி பற்றிய செயல்களை ஆராய்ந்தனர்; ஊர் வழக்குகளைத் தீர்த்தனர்.

8. கோவில்கள் போர்க்காலத்தில் கோட்டைகளாக விளங்கின. அதனாற்றான் தஞ்சைப் பெரிய கோவில், திருப்பாசூர்க் கோவில், திருப்புகலூர்க் கோவில், பந்தணை நல்லூர்க் கோவில் முதலியவற்றைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் காணப்படுகின்றன.

9. இவை அனைத்திற்கும் மேலாகக் கோவில்கள் ஓவிய சிற்பக் கலைகட்குத் தாயகமாக விளங்கின. இன்று நமது பழம் பெருமையை உலகிற்குக் காட்டி நிற்பன இந்த இரண்டே அல்லவா? இவற்றைத் தம் அகத்தே கொண்டுள்ள கோவில்களே இன்று நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்துள்ளன என்னல் மிமையாமோ?

இன்றைய நிலை
இங்ஙனம் இவ்வுலக வாழ்வில் பேரின்பம் துய்த்தற்குரிய ஒப்பற்ற இடமாகக் கோவில்கள் விளங்கின. இவ்வுயரிய நோக்கம் கொண்டே அவை கட்டப்பட்டன. ஆயின், நாளடைவில் அறிவற்ற-பக்தியற்ற-பழம்பெருமையும் வரலாறும் உணராத பலர் கைகளில் கோவில் ஆட்சி சென்றமையாலும், பூசை முதலியன உணர்ச்சியற்ற முறையில் நடைபெற்றமையாலும், பெறலாலும் கோவில்கள் தம்பொலிவிழந்து விட்டன. அவற்றைப் பண்டைச் சிறப்பில் பாதியளவிலேனும் கொண்டு நிறுத்தல் தமிழறிஞர்-சமயப் பிரியர் நீங்காக் கடமையாகும்.

செய்யவேண்டுவன
1. சைவர் கோவில்களில் தேவாரப் பாடசாலைகள் தேவை; பெருமாள் கோவில்களில் நாலாயிரப் பிரபந்த பாடசாலைகள் தேவை; வழிபாடு தமிழிலேயே நடைபெறல் வேண்டும்.

2. குருக்கள் தகுதி வரையறை செய்யப்படல் வேண்டும். பத்தாம் வகுப்புத் தேறியவர்க்குப் பல்கலைக் கழகத்துச் சார்பில் 4 ஆண்டுகள் வரலாறு - சமயம் -ஓவியம்-சிற்பம்-நடனம் -இசை- கட்டடக் கலைகளில், ஓரளவு பயிற்சி அளித்துத் தேர்வு வைத்துப் பட்டம் தரல் வேண்டும். அப்பட்டதாரிகளே குருக்களாக அமையவேண்டும். அந்நிலையிற்றான் கோவில்கள் சாத்திரீய முறையில் விளங்கும்; யாவும் தூய்மையாக இருக்கும். இஃது அறிஞர் உடனே செய்யத்தக்கதாகும்.

3. கோவில் இயக்கநராக (Executive Officers) வருபவர் பல கலைகளில் புலமை உடையவராக இருத்தல் வேண்டும்.

4. இவை அனைத்திற்கும் மேலாக `நம் நாடு, நம் நாட்டுக் கோவில்கள், நம் நாட்டுச் சமயங்கள், நம் நாட்டுக் கலைகள் - இவற்றைப் பாதுகாத்தலும் போற்றுதலும் வளர்த்தலும் நமது கடமை` என்பதை உளமார உணர்ந்து பாடுபடும் ஒருமைப்பாடு குருக்களிடமும் பிற (கோவில்) அலுவலரிடமும் இருத்தல் வேண்டும்.

இங்ஙனம் யாவும் அமையுமாயின், பண்டை வரலாற்றை இன்று கண்டு பேரின்பமும் பெருவாழ்வும் பெற வழியுண்டு, இம்முயற்சிக்குத் தமிழர் ஒன்றுபட்ட மனமே வேண்டற்பாலது. இஃது எப்பொழுது கைகூடும்?