தவசப் பொங்கல் சீருமில்லை

தந்தை இறந்து விட்டார். மகளுக்கு மணமாகி அயலூரில் வாழ்கிறாள். பொங்கல்தோறும் அவளுக்கு சீர் வரிசைகள் அனுப்பி வைப்பார். அவளுக்குத் தமையன்மார் உண்டு. ஆனால் தந்தையைப்போல் அன்பாக சீர் அனுப்பி வைப்பார்களா? அவர்கள் மறந்தாலும் மதினிமார் அதனை நினைவூட்டுவார்களா? தாய் சொன்னாலும் காதில் ஏறுமா?தந்தை போய்விட்டால் மகளுக்கு அருமை பெருமை ஏது? இதனை நினைத்து மகள் உருகுகிறாள்.
வடக்கே கரத்தோட்டம்
வாழப்பூப் பூந்தோட்டம்
வளர்த்தவர் இருக்கும் வரை
வரிசைப் பொங்கல் சீருவரும்
வளர்த்தவர் காலம் போக
வாழ மடலிழந்தேன்
வரிசைப் பொங்கல் சீரிழந்தேன்
தெக்கேகரத்தோட்டம்
தென்ன மரம் பூந்தோட்டம்
தேடுனவர் இருக்கும் வரை
தெவசப் பொங்கல் சீருமுண்டு
தேடுனவர் காலம் போக
தென்ன மடலுமில்லை
தெவசம் பொங்கல் சீருமில்லை
குறிப்பு: கொங்கு வேளாளர் சமூகத்தில் மணமான தம்பதிகளை வேறே வைப்பார்கள்.அப்பொழுது வீட்டுக்கு வேண்டிய எல்லா சாமான்களையும் பெண்ணின் தந்தை கொடுக்க வேண்டும். அதன்பின், பொங்கல்தோறும் சீர் வரிசைகள் கொடுப்பார்கள். பெண்ணுக்கு குழந்தை பிறந்து சம்பந்தம் காணும் வரை சீர் கொடுக்க வேண்டும்.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
----------