திருச்செந்தூர் பாலம்

காதல் உறவில் ஊடலும் கூடலும் நிகழும். அவைதான் உறவை இறுக்கமாகப் பிணிக்கும். காதலனும் காதலியும் பிணங்கிப் பின் கூடுவதை இவ்வுரையாடல் காட்டுகிறது.
பெண்: திருச்செந்தூர் ஓரத்திலே
விரிச்சதலைப் பாலத்திலே
விரும்பிச் சொன்ன சத்தியங்கள்
வீணாகப் போனதய்யா
அஞ்சு மணி நேரத்திலே
ஆறு கண்ணுப் பாலத்திலே
குளுந்த மணலுல நாம்
கூடுறது எந்த விதம்?
முக்கட்டுக் கல்லுலயே
மூணு விதப் பச்சக் கல்லு
நானெடுத்த பச்சக் கல்லு
யாரெடுத்துக் கொஞ்சினாக?
ஆண்: அஞ்சுகிளி ரஞ்சிதமே
அனேககிளி சினேகிதமே
கொஞ்சும் கிளி ரத்தினத்தை-நான்
குத்தப்பட என்ன சொன்னேன்?
இடை வழிக் கெட்டி
ஏழுகுளம் தலைமுழுகி
கொண்டாடி தலை முடியை
கொடங்கையில் போட்டுறங்க.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம் விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
------------