திருமணக் காட்சி

திருமணத்திற்குக் குறித்த வேளையில், மலையரசன் விரும்பியவாறு, கொற்றவை காவல் செய்ய,இந்திரை அடைப்பை ஏந்த, கங்கை முதலிய நங்கையர் கவரி வீச, காளிகள் குடை பிடிக்க, கலைமகள் பாட்டிசைக்க, திருமகள் கையைப் பற்றிக் கொண்டு உமாதேவி எழுந்தருளித் திருமணச் சாலையை அடைந்தாள்; ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருந்தலைவன் அடிகளில் விழுந்து வணங்கினாள். அரியாசனத்தில் தன் பக்கத்தில் அமருமாறு உமையைப் பணித்தார், ஈசன், இந்திரை முதலிய யாவரும் துதிக்க, உமையவள் இறைவன் மருங்கே அமர்ந்தாள்.
மலையரசன் ஈசனுக்குரிய பூசனை செய்து, புவனம் ஈன்ற உமையவள் கையைப் பாசம் அகன்ற பரமன் கையில் வைத்து, "என் புதல்வியாகிய உமையை உமக்கு அன்புடன் தந்தேன்” என்று மறைமொழி ஒதி,ஈசனை மருமான் எனக் கருதி வாச நன்னீரால் தாரை வார்த்தான்.
அப் பொழுது அரம்பையர் நடனம் செய்தனர்; சித்தரும் கந்தருவரும் கானம் பாடினர், தும்புருவும் நாரதரும் வீணையில் ஏழிசைக் கீதம் இசைத்தனர்; தேவரும் முனிவரும் திருமறை ஒதினர்.
திருமணச் சடங்குகள் முடிந்த பின்னர், தந்தையும் தாயுமாகி உலகமெல்லாம் ஈன்றருளிய ஈசனையும் உமையாளையும் முதலில் பிரமதேவன் வணங்கினான்; பின்னர் மாயவனும், இந்திரனும், முனிவரும்,தேவரும் முறையாக வழிபட்டார்கள். அந் நிலையில், மன்மதனை இழந்து கைம்மை நிலையடைந்து துன்புற்ற ரதியாள் ஈசனுடைய பொன்னடிகளில் விழுந்து வணங்கி, "தீவினையேன் துன்பத்தைத் தீர்த்தருளல் வேண்டும்” என்றாள்.
அப்போது, உயிர்க்குயிராக நின்று வினைப்பயனை உணர்ந்து ஊட்டும் கருணை வள்ளலாகிய பெருமான், "மாதே! வருந்தாதே!” என்றுரைத்து, மன்மதன் வந்து தோன்றும்படி மனத்திலே நினைத்தார். உடனே, முன்னைய வடிவத்தொடு தோன்றிய மன்மதன், உமாதேவியாரோடு வீற்றிருந்த சிவபெருமானது பொன்னார் திருவடியை வணங்கித் துதித்து, "ஐயனே, அடியேன் செய்த பெரும் பிழையைப் பொறுத்தல் வேண்டும்” என்றான். அது கேட்ட பெருமான், "மைந்தா! உன்னிடம் சீற்றம் உற்றாலன்றோ இப்பொழுது சீற்றம் தணிவது; மனம் கலங்காதே. நமது கண் அழலால் எரிந்த நின் உடலம் பொடியாகி அப்பொழுதே போயிற்று. ஆயினும், ரதிதேவி வேண்டுகின்றாளாதலின் அவளுக்கு மட்டும் உருவத்துடன் தீ விளங்குவாயாக! ஏனை வானவர் முதலிய யாவர்க்கும் அநங்கனாய் இருந்து உன் அரசியலை நடத்துக” எனப் பணித்தார்.
பின்பு, மன்னுயிர்க்கு உயிராகிய ஈசன், இடப வாகனத்தில் எழுந்தருளி, உமாதேவியாரைப் பக்கத்திற்கொண்டு முன்போலவே வானவரும் பூத கணங்களும் புடைசூழப் பொன்மயமான இமயத்தை விட்டுக் கயிலாய மலையை அடைந்தார்.
தேவர்கள் துயரம்
இவ்வாறு இருக்கையில், "உலகத்தையெல்லாம் அசுரரிடம் ஒப்புவித்து, நமக்குத் துன்பத்தை விளைத்து, யோகிபோல் இருந்தார், ஈசன், நாம் சென்று வேண்டிக்கொண்ட பொழுது இரக்க முற்றுப் பார்வதிதேவியை மணந்தார்; ஆயினும், ஒரு மைந்தனைத் தந்து நம்மைக் காத்தருளாமல் சும்மா இருப்பது ஏனோ? கயிலாய மலையில் நாமனைவரும் இப்பொழுதே சென்று, நெடுங்காலமாக நாம் அடைந்து வரும் துன்பங்களை முறையிடுதலே நன்று" என்று தேவர் பலரும் எண்ணினர்.
அப்படியே அவர்கள் கயிலையங்கிரியை அடைந்து உமையொருபாகத் திறைவன் முன்னே போந்து, செம்மை வாய்ந்த திருவடிகளைத் தலையால் வணங்கி எழுந்து, மெய்யன்போடு துதித்தனர்; "உலகங்களையெல்லாம் படைத்தருளிய ஆண்டவனே! அருமையான வேதங்களும் நின் செய்கையை அறியும் தன்மை யுடையனவோ? உருவம், தொழில், பெயர் ஒன்றும் இன்றியே எங்கும் நிறைந்துள்ள நீ, அம் மூன்றையும் தாங்கி நிற்பது மன்னுயிர்க்கெல்லாம் முத்தி பளித்திடும் கருணையினால் அன்றோ? பழமைக் கெல்லாம் பழமையான பொருள் நீயே என்றால், புதுமைக்கும் புதுமையான பொருளாக உள்ளாய் பழமையும் புதுமையும் நீயே என்றால் மற்றவைகள் அல்லையோ? உன்னை யாதென்று துதிப்போம்? எங்களை முன்னமே படைத்தாய்; ஆட்சி செய்யும்படி எங்களுக்கு அருள் செய்தாய்;எங்களுள் ஒருவனாகவும் உள்ளாய். உன் செயல் எங்களால் அறிய ஒண்ணாது” என்று போற்றினர்.
அப்போது, நீலகண்டனாகிய ஈசன் அவர் முகம் நோக்கி, "நீர் வருந்தி மனம் தளர்ந்தீர் ! உமக்கு என்ன வரம் வேண்டும் என்றாலும் இப்பொழுதே தருவோம்! வேண்டுவதைச் சொல்லுங்கள்” என்றார். அது கேட்ட வானவர் அகமகிழ்ந்து, "ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத ஐயனே! அருவமும் உருவமும் இல்லாத ஆண்டவனே! தனக்குவமையில்லாத் தலைவனே! காரணங்களெல்லாம் கடந்து நின்ற கர்த்தனே! போக்கும் வரவும் இல்லாத புண்ணியனே! இன்பமும் துன்பமும் இல்லானே வேதமும் கடந்து நின்ற விமலனே! உமக்கு நிகரான ஒரு குமரனைத் தந்தருளல் வேண்டும்” என்று பிரார்த்தித்தனர்.
அறுமுகவேள் உற்பத்தி
இங்ஙனம் பிரம்மன் முதலிய வானவர் செய்த விண்ணப்பத்தைச் செவியில் ஏற்ற செம்மேனி எம்மான், "நீர் விரும்பியவாறே ஒரு புதல்வனைத் தருவோம்” என்று திருவாய் மலர்ந்து, ஐந்து முகத்தோடு அதோ முகம் கொண்டு, மெய்யிறிஞர் தியானிக்கும் ஆறுமுகங்களோடு தோன்றினார். வானவர் அனைவரும் நெஞ்சம் திடுக்கிட்டு வியப்புற்று, திருவருள் முறைமையை எண்ணித் துதித்து நிற்கையில்,அம்முகங்களில் அமைந்த நெற்றிக்கண் ஒவ் வொன்றிலும் ஒவ்வொரு நெருப்புப் பொறியைத் தோற்றுவித்தார், ஈசன், அப் பொறிகள், உயிர்களுக்கு அருள் புரிந்திடத் தோன்றின ஆதலால்,ஒருயிரையும் அழிக்கவில்லை; ஆயினும், எல்லாரையும் எல்லாவற்றையும் நடுங்கச்செய்தன. அவற்றின் வெம்மையால் உமையம்மை வியர்த்து, மனக் கலக்க முற்று எழுந்து, பொன்னடிச் சிலம்புகள் புலம்ப, தன் இருக்கையை நோக்கி ஓடினாள்.
தீப்பொறிகள் எங்கும் பரந்து செறிந்தபோது செம்பொற் கோவிலில் அங்குமிங்கும் சிதறிய வானவர்கள் பெருமூச்செறிந்து மீண்டும் எம்பெருமான் பக்கத்தில், வருந்திய மனத்தினராய் வந்தடைந்தார்கள்; "எம் ஐயனே கொடிய அசுரரைக் கொன்று ஒழித்தற்கு ஒரு மைந்தனை நின்பால் வேண்டினோம்; அதற்கு அளவற்ற நெருப்பை நீ அளித்தாய். யாங்கள் இனி எவ்வாறு உய்வோம்? ஆண்டவனே! வெங்கனல் எங்கும் மேலிடுகின்றது; அதன் வெப்பத்திற்கு ஆற்றாது அஞ்சி ஓடிய நாங்கள் உன் திருவடியே சரணம் என்று அடைந்தோம். எம்மைத் தஞ்சம் அளித்துத் தாங்க வல்லார் வேறு யாருளார்?" என்று பணிந்தார்கள்.
அப்போது ஈசன், புதியவாகத் தோன்றிய ஐந்து திருமுகங்களையும் மறைத்து, முன்போல ஒரு முகத்தோடு விளங்கினார்; திருவருள் நெற்றியில் ஆறு முகங்களினின்றும் பிறந்த தீப்பொறிகள் - மண்ணிலும் விண்ணிலும் சென்றன-வெல்லாம் . தம் முன்னே வரும்படி சிந்தித்தார். அப்பொழுதே எங்கும் நிறைந்த நெருப்பு, முன்போல் ஆறு பொறிகளில் அடங்கி, அவர் முன்னே சென்று அடைந்தது. அப்பொறிகளை ஈசன் அமர்ந்து நோக்கினார்.