திருமணம்

திருமணத்திற்கு முன் தாலி செய்து கொண்டு மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு வருவார்கள். அவன் வரும்போது மணப் பெண் வீட்டில் கூடியிருக்கும் பெண்கள், பெண்ணை அலங்காரம் செய்து கொண்டே மணமகனது வரவை,அவளுக்கு எடுத்துக் கூறுவார்கள்.
வாராண்டி, வாராண்டி
வரிசை கொண்டு வாராண்டி
பாக்கு எடுத்துக்கிட்டு
பரியங் கொண்டு வாராண்டி
புத்தம் புதுச் சேலை
பொன்னான சவிரி செஞ்சி
தங்கத்தாலே தாலிபண்ணி
தடம் புடிச்சி வாராண்டி
சந்தனப் பொட்டழகன்
சாஞ்ச நடையழகன்
கூறை சீலை கொண்டுகிட்டு
குதிரை ஏறிவாராண்டி
இத்தனை நாளாக
எதுக்காகக் காத்திருந்தான்
இண்ணக்கிச் சமைஞ்சவளை
எடுத்துப் போக வாராண்டி
அம்மி மிதிச்சு
அரசாணி சாட்சி வச்சி
சந்திர சூரியனை
சத்தியம் பண்ணிப் போட்டு
தாய் மாமன் மகளுக்குத்
தாலி கட்ட வாராண்டி.
சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி
இடம் : பரமத்தி, சேலம் மாவட்டம்.
-----------