திருவதிகை

பாடல் 737
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் ...... தனதான
பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல்
பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர்
சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன்
சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா
கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.
பாடல் 738
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
விடமும் வேலன மலரன விழிகளு
மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி
மிகவு மாண்மையு மெழினல முடையவர்
வினையு மாவியு முடனிரு வலையிடை
வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா
இடரு றாதுனை நினைபவர் துணைகொள
இனிமை போலெழு பிறவியெ னுவரியி
னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே
இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
ககன பூபதி யிடர்கெட அருளிய
இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே
படரு மார்பினி லிருபது புயமதொ
டரிய மாமணி முடியொளி ரொருபது
படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய்
பரவை யூடெரி பகழியை விடுபவர்
பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே
அடர வேவரு மசுரர்கள் குருதியை
அரக ராவென அலகைகள் பலியுண
அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா
அமர ராதிய ரிடர்பட அடர்தரு
கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.