தென்சேரிகிரி

பாடல் 614
தந்தான தனதனன தந்தான தனதனன
தந்தான தனதனன ...... தனதான
எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு
இங்கேவ ருனதுமயல் ...... தரியாரென்
றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ
என்றாசை குழையவிழி ...... யிணையாடித்
தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்
சந்தேக மறவெபறி ...... கொளுமானார்
சங்கீத கலவிநல மென்றோது முததிவிட
தண்பாரு முனதருளை ...... யருள்வாயே
சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
சந்தாரும் வெதிருகுழ ...... லதுவூதித்
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
தங்கூறை கொடுமரமி ...... லதுவேறுஞ்
சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
சென்றேயும் அமரருடை ...... சிறைமீளச்
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
தென்சேரி கிரியில்வரு ...... பெருமாளே.
பாடல் 615
தந்தானத் தந்த தனதன
தந்தானத் தந்த தனதன
தந்தானத் தந்த தனதன ...... தனதான
கொண்டாடிக் கொஞ்சு மொழிகோடு
கண்டாரைச் சிந்து விழிகொடு
கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக்
குன்றோடொப் பென்ற முலைகொடு
நின்றோலக் கஞ்செய் நிலைகொடு
கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு ...... பலரோடும்
பண்டாடச் சிங்கி யிடுமவர்
விண்டாலிக் கின்ற மயிலன
பண்பாலிட் டஞ்செல் மருளது ...... விடுமாறு
பண்டேசொற் றந்த பழமறை
கொண்டேதர்க் கங்க ளறவுமை
பங்காளர்க் கன்று பகர்பொருள் ...... அருள்வாயே
வண்டாடத் தென்றல் தடமிசை
தண்டாதப் புண்ட ரிகமலர்
மங்காமற் சென்று மதுவைசெய் ...... வயலூரா
வன்காளக் கொண்டல் வடிவொரு
சங்க்ராமக் கஞ்சன் விழவுதை
மன்றாடிக் கன்பு தருதிரு ...... மருகோனே
திண்டாடச் சிந்து நிசிசரர்
தொண்டாடக் கண்ட வமர்பொரு
செஞ்சேவற் செங்கை யுடையசண் ...... முகதேவே
சிங்காரச் செம்பொன் மதிளத
லங்காரச் சந்த்ர கலைதவழ்
தென்சேரிக் குன்றி லினிதுறை ...... பெருமாளே.