படிக்கும் மாப்பிள்ளை

படிக்கிறான் என்று சொல்லிப் பெண்ணைக் கட்டிவைத்தார்கள். படித்து முடிந்ததும் பெண்ணை அனுப்பலாம் என்றிருந்தார்கள்.ஆனால் பல வருஷங்களாகியும், அவன் படிப்பு முடிந்த பாடில்லை. மனைவி அவனுடைய கல்லூரியைப் பார்த்திருக்கிறாள். அங்கேதான் படிக்கிறார், எழுதுகிறார் என்றிருந்தாள். ஆனால் எவ்வளவு நாள் தான் படித்துக் கொண்டேயிருப்பார், என்றுதான் தன்னை அழைத்துச் செல்லுவாரென்று அவள் கவலைப்படுகிறாள். வகுப்பில் அவனடையும் தோல்விகளைப் பற்றி அவளுக்குத் தெரியுமா?
பத்து பவுனழிச்சு
பர்த்தா வுக்கு காப்பி வச்சேன்
பத்தடுக்கு மாடி மேல
படிக்கிறான்னு நாங்க இருந்தோம்
படிச்சு முடிப்பாரா
பயண மெங்கும் வைப்பாரா?
எட்டுப் பவுனழிச்சு
எசமானுக்குக் காப்பி வச்சே
எட்டடுக்கு மாடி மேலே
எழுதறார்ன்னு நாங்க இருந்தோம்
எழுதி முடிப்பாரா
எண்ணங்களைச் சொல்லுவாரா?
உதவியவர் : செல்லம்மாள்; சேகரித்தவர் :கு. சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
-------------