பரசுராமப் படலம் - 1380

பரசுராமன் தான் வந்த காரணம் கூறுதல் ((1380-1382))
1380.
‘ஊன வில் இறுத்த மொய்ம்பை
நோக்குவது ஊக்கம் அன்றால்;
மானவ! மற்றும் கேளாய்;
வழிப் பகை உடையன் நும்பால்;
ஈனம் இல் எந்தை. “சீற்றம்
நீக்கினான்” என்ன. முன் ஓர்
தானவன் அனைய மன்னன்
கொல்ல. யான் சலித்து மன்னோ.
ஊனவில் இறுத்த - பழுதுபட்ட ஒரு வில்லை முறித்த; மொய்ம்பை
நோக்குவது - வலிமையைப் (பெரிதாகக்) கருதுவது; ஊக்கம் அன்று -
சிறந்த ஆற்றல் ஆகாது; மானவ! - (வைச்சுத) மனுகுலத்து உதித்த
மன்னவனே!; மற்றும் கேளாய் - இன்னும் கேட்பாய்; நும்பால் வழிப்
பகையுடையன் - (அரசர் குல வழிவந்தவர்களாகிய உம்மிடத்துத்
தொடர் பகையுடையவன் (நான்); ஈனம் இல் எந்தை - (ஒரு)
குற்றமுமம் புரியாத என் தந்தை; “சீற்றம் நீக்கினான்” என்ன -
சினத்தை யழித்தவனாகிய முனிவன் ஆதலின். (சினவான் என்று
கருதி); முன் ஓர் தானவன் அனைய - முன்னொரு நாளில்
அரக்கனைப் போன்ற; மன்னன் கொல்ல - ஒரு மன்னன் (என்
தந்தையைக்) கொன்றுவிட; யான் சலித்து - நான் மனங்கலங்கி;
(வேந்தையெல்லாம் வேரறக்களை கட்டு” எனவரும் பாடலில் முடியும்)
ஆல். மன். ஓ - அசைகள். முனிவர் என்பதற்குச் சீற்றத்தை
முனிந்தவர் என்பது பொருளாதலின். “சீற்றம் நீக்கினான்” என.
சமதக்கினி முனிவரைக் குறித்தார். முனியாத முனிவரைச் சினந்து
கொன்றது. மானுட மன்னனை அரக்கன் ஆக்கிற்று ஆதலால்.
“தானவன் அனைய மன்னன்” என்றார். அரக்கத் தன்மை குணத்தால்
வருவது எனக் குறித்தவாறு. 32