பரசுராமப் படலம் - 1383

இராமன் வில்லை வளைத்தது
வில்லை வளைத்த இராமன் அம்புக்கு இலக்கு என் எனல்
1383.
என்றனன் என்ன. நின்ற
இராமனும் முறுவல் எய்தி.
நன்று ஒளிர் முகத்தன் ஆகி.
‘நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக!’ என்ன.
கொடுத்தனன்; வீரன் கொண்டு. அத்
துன்று இருஞ் சடையோன் அஞ்ச.
தோளுற வாங்கி. சொல்லும்:
என்றனன் - (பரசுராமன்) இவ்வாறு கூறினான்; என்ன - (அவன்)
இவ்வாறு கூற; நின்ற இராமனும் - (இவற்றைக் கேட்டு) நின்ற
இராமனும்; முறுவல் எய்தி - புன்னகை பூத்து; நன்று ஒளிர் முகத்தன்
ஆகி - (மகிழ்வால்) நன்றாக விளக்கம் பெற்ற முகத்தினனாகி;
நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக என்ன -
திருமால் வலிமையினால் எடுத்துப் பயின்ற வெற்றி வில்லைத் தருக
என்று கூற; கொடுத்தனன் - (பரசுராமன் உடனே வில்லைக்)
கொடுத்திட்டான்; வீரன் கொண்டு - வில்லை (இராமன்) வாங்கிக்
கொண்டவனாய்; துன்று இருஞ்சடையோன் அஞ்ச - நெருங்கிப்
பெருத்த சடையுடையோனாகிய பரசுராமன் அஞ்சுமாறு; தோளுற
வாங்கிச் சொல்லும் - அவ்வில்லைத் தன் தோள்வரையில் வருமாறு
வளைத்துக் கொண்டு கூறுவான்.
இராமன் திருமுகம் அழகியது. அது புன்னகை பூக்குங்கால் மேலும்
பேரழகு பெறும் என்பார். “முறுவல் எய்தி நன்றுஒளிர் முகத்தன்
ஆகி” என்றார். உள்ளிருந்த வீரம் முகத்தில் பொங்கியதால் நன்று
ஒளிர்ந்தது முகம். நகை எள்ளல் அடியாகப் பிறந்தது. திருமால்
கையாண்ட வில் தனக்கு வரவேண்டியதே தருக என்பார். “நாரணன்
வலியின் ஆண்ட வென்றிவில்” என்றார். வென்றி வில் - என்றும்
தோலாத வெற்றியையே யுடைய வில். 35