பரசுராமப் படலம் - 1384

bookmark

தன் அம்புக்கு இலக்கு யாது என இராமன் வினாவல்

1384.    

‘பூதலத்து அரசை எல்லாம்
   பொன்றுவித்தனை; என்றாலும்.
வேத வித்து ஆய மேலோன்
   மைந்தன் நீ; விரதம் பூண்டாய்;
ஆதலின் கொல்லல் ஆகாது;
   அம்பு இது பிழைப்பது அன்றால்.
யாது இதற்கு இலக்கம் ஆவது?
   இயம்புதி விரைவின்!’ என்றான்.
 
‘பூதலத்து      அரசையெல்லாம்   -    ‘மண்ணுலகத்தையாண்ட
அரசர்களையெல்லாம்;  பொன்றுவித்தனை  நீ   கொன்றாய்   (ஆகவே
நான் உன்னைக் கொல்லலாம்);என்றாலும் வேதவித்து ஆய மேலோன்
மைந்தன்   நீ  -   ஆனாலும்.   வேதங்களை  அழியாது   காக்கும்
வித்தினைப்  போன்ற  மேலோன்  ஒருவனின்  மகன்   நீ!;   விரதம்
பூண்டாய்   -  (அன்றியும்)  தவவேடமும்  தரித்துள்ளாய்;  ஆதலின்
கொல்லல் ஆகாது- ஆகவே. உன்னைக் கொல்லக்கூடாது; அம்பு இது
பிழைப்பது   அன்று  -  (எனினும்  வில்லில்  நான்  நாண்   ஏற்றித்
தொடுத்துள்ள) இந்த அம்பு தவறுதல் கூடாது; இதற்கு இலக்கு  ஆவது
-  இந்த அம்புக்குக் குறியாகும் பொருள் யாது?; விரைவில்  இயம்புதி’
என்றான் - காலந் தாழ்த்தாமல் கூறுக’ என்றான் இராமன்.

பூதலத்தைக்     காக்கப்  பிறந்த  அரசையெல்லாம்   நீ  அழிக்கப்
பிறந்தாய்  என்பார்.  “பூதலத்து  அரசையெல்லாம்  பொன்றுவித்தனை”
என்றார்.    ஓரிருவர்  கூடத்   தப்பாமல்    கொன்றமை    தோன்ற.
“அரசையெல்லாம்”  என்றார்.  சத்திரியர்களைக்   கொன்ற   உன்னைச்
சத்திரியனாயுள்ள  நான்  கொல்வது  சத்திரிய   தருமமே;   உன்னைக்
கொல்வது   அறமே;   ஆயினும்  கொல்லவில்லை  என்னும்  கருத்தை
“என்றாலும்”    என்பதில்    உள்ள    உம்மை    குறித்து   நின்றது.
கொல்லாமல்  விடுவதற்குக்  காரணங்கள்  இரண்டுள.   வேத  வித்தாய
மேலோன்  மைந்தன் நீ  என்பது  ஒன்று; தவ   வேடம்    பூண்டது
மற்றொன்று   என்கிறான்   பெருமான்.    உனக்காக   உன்னை  நான்
கொல்லாமல்   விடவில்லை;   உன்   தந்தைக்காகவும்  நீ   பூண்டுள்ள
வேடத்துக்காகவுமே  உன்னை  கொல்லாமல்   விடுகிறேன்  என்கிறான்.
வேடம்  கூடப்  போற்றத்தக்கது  என்பதனை.   “மெய்த்தவ   வேடமே
மெய்ப்பொருள்”   (பெரியபு.  மெய்ப். 15)  என்றமெய்ப்பொருள்நாயனார்
வாழ்வு  உணர்த்தும்.  “மால்  அற  நேயமும்   மலிந்தவர்   வேடமும்.
ஆலயந்தானும்  அரன்   எனத் தொழுமே” (சிவஞா. போ. 12)  என்பார்
மெய்கண்ட தேவரும்.

இராம     பாணம் தொடங்கிய செயல் முடிக்காது  மீளாது.  வெறும்
வாயோடு  மீளும் வழக்கம் இல்லாதது எனும்  மரபு பற்றி. “ அம்பு இது
பிழைப்பது   அன்று”   என்றார்.   கொலைத்   தொழிலில்   சிறத்தல்
தவமாதல்   இல்லை  யென்க.  “உற்ற  நோய்  நோன்றல்”   உயிர்க்கு
உறுகண்     செய்யாமை    (திருக்.   261)    இரண்டுமே   தவத்தின்
அடையாளங்கள் என்பது வள்ளுவர் வாய்மொழி.                 36