பரசுராமப் படலம் - 1385

பரசுராமன் இராமனைத் துதித்தல் ((1385-1386))
அம்புக்குத் தவத்தை இலக்கு ஆக்குதல்
(வேறு) கலிவிருத்தம்
1385.
‘நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்
ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்!
வேதியா இறுவதே அன்றி. வெண் மதிப்
பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ?
நீதியாய்! - நன்னெறி பூண்டவனே!; முனிந்திடேல் - நீ
வெகுளாதே!; நீ இங்கு யாவர்க்கும் - நீ இவ்வுலகில் உள்ளோர்
யாவர்க்கும்; ஆதி. யான் அறிந்தனென் - முதல்வன் என்பதனை
யான் (கண்கூடாக) அறிந்தேன்; அலங்கல் நேமியாய்; - துழாய்
மாலையணிந்த சக்கரம் ஏந்திய திருமாலே; வேதியா! - வேதியனே!;
வெண்மதிப் பாதியான் - வெள்ளிய மதியின் பகுதியைச் சூடியுள்ள
சிவபெருமான்; பிடித்த வில் - (முன்பு கையில்) பற்றிய வில்லானது;
இறுவதே அன்றி - பிளந்து முறிவதேயல்லாமல்;பற்றப் போதுமோ? -
உனது கையிற் பிடித்தற்கும் போதுமோ? (போதாது) (என்றான்
பரசுராமன்)
திருமாலின் கூறல்லாத எவரும் இவ்வில்லைப் பற்றி எடுக்கவும்
கூடுமோ எனப் புகழ்ந்தான் எனினுமாம். இராம பிரானை வேதியன்
என்று பல இடங்களில் கம்பர் பெருமான் குறிப்பிடுவார். “அரசர்
உருக்கொண்டமைந்த வேதியா!” (கம்ப. 7625) எனவும். “நீ செப்பும்
வேத நாயகன்” (கம்ப. 6994) எனவும். “விராவரும் புவிக்கெலாம்
வேதமே யன இராமன்” (கம்ப. 1453) எனவும் வருவன காண்க. 37