பரமனார் பக்கமில்லை

பல கோயில்களுக்கு நேர்த்திக் கடன் கழித்துப் பெற்ற மகன் தவறிவிட்டான். அவன் பிறக்கும்போது தன் மீது கருணை காட்டிய சிவன், சிறிது நாளில் கொடுத்த செல்வத்தைப் பறித்துக் கொண்டார். அவன் இல்லாமலேயே இருந்துவிட்டால் வருத்தம் அவ்வளவு தோன்றாது. கிடைத்து, சிறது காலம் அனுபவித்த பிறகு இழப்பதென்றால் தாய்க்குத் தாங்க முடியாத வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?
படி ஏறிப் பூப்பறிச்சு
பந்தறிய மாலை கட்டி
பரமனார் கோயிலுக்கு
பாலு படி கொண்டு போனேன்
பாலு படி தவறாச்சு-என்
பக்கம் மனுவுமில்லை
பரமனார் பக்கமில்லை
செடியேறிப் பூப்பறிச்சு
செண்டறிய மாலை கட்டி
சிவனார் கோவிலுக்கு
சிவபடியும் கொண்டு போனேன்
சிவபடியும் தவறாச்சு
சேர்த்த மனுவுமில்லை
சிவனார் பக்கமில்லை
சேகரித்தவர் : S.S.போத்தையர்
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
-----