பாஷையின் சீர்திருத்தம்

பரவை வழக்குள்ள பாஷைகளெல்லாம் சதா இயங்கிக் கொண்டிருப்பதனாலே, தங்களியக்கத்திற்குத் தக்கபடி நாகரிக நிலைக்குரிய புதிய கருத்துக்களை மேற்கொள்ளுமென்பது திண்ணம். புதிய கருத்துக்கள் மேற் கொள்ளப்பட்டால், அவற்றைத் தங்களது குறிக்கவல்ல சொற்களுஞ் சொற்றொடர்களும் பாஷையின்கண் ஏற்படுதல் இன்றியமையாததே.
உட்கருத்தின் வேறுபாடு வெளிச் சொல்லிற் பிரதிபலிக்கும்; ஆதலால் மநோபாவம் விரியுந்தோறும், புதுவிஷயங்கள் கண்டுபிடிக்கப் படுந்தோறும், கலைஞானவுண்மைகள் வெளிப்படுந்தோறும், வேற்றுநாடுகளினின்றும் புதிய பொருள்கள் உட்புகுந்தோறும், பாஷை விரிந்து முதிர்ந்து சீர்திருந்துதல் வழக்காறேயாம்.
உலகத்தின் நாகரிகநிலை முதிர்ச்சிக்குத் தக்கவாறு பாஷையும் ஒத்தியங்கித் திருந்தி முதிர்ச்சி யடைதல் வேண்டும். அங்ஙனம் முதிரும் பாஷையே செழிப்புள்ள பாஷையாம். அதன் கண்ணேயே எக்கருத்துக்குந் தக்கசொல் அகப்படும். மேற்கூறியவாறு திருந்தி முதிராத பாஷை *'பிராணதாரணப் பிரயத்தன'த்தில் நிலைத்து நில்லாது காலக்கிரமத்தில் அழிந்துபடும்.
-----
தமிழ்மொழியின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சிக்குத் தக்கவாறு அமையவில்லை. நாகரிக வளர்ச்சியின் விரைவினும் தமிழ்மொழியின் வளர்ச்சி விரைவு குறைவுபடுதலாலே இவ் விரண்டிற்கு முள்ள தூரம் மிகுந்து கொண்டே போகின்றது. இத்தூரம் இனிமேலும் மிகவொட்டாது தடுத்தல் வேண்டும். இதுகாறும் ஏற்பட்டுள்ள தூரத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்தலும் வேண்டும். இவை செய்யாக்கால் தமிழ்மொழி அருகி அஃகுவதாகும். தம் தாய்மொழியாகிய தமிழ் அத்தன்மையான நிலைமையை யடையாது அதனைப் போற்றுதல் தமிழ் வாணராயினார் யாவர்க்கும் உற்ற கடப்பாடன்றோ?
மன்பதையின் ஆக்கப் பொருளாகிய பாஷையின் கண்ணே, தனித்தனி மக்கள் கருத்துக்களின் போக்குக் கிடைத்தபடியெல்லாம் சொற்கள் அகப்படுமென்றெதிர் பார்த்தல் செவ்விதன்று. அவரவர் கஷ்டப்பட்டுச் சொற்கள் படைத்தல் வேண்டும். அவை மற்றையோர் சுவைக்கும் ஏற்றனவாய்க் காணப்படின் உடனே மேற்கொள்ளப்பட்டுப் பாஷையிலே வழங்குவன வாகும் அல்லாக்கால் அவைதாமே வீழ்ந்துபடும். ஒருமுறை ஒருகருத்து வெளிப்பட்டு விட்டதாயின், அப்புறம் கஷ்டமில்லை. முன்னரேயுள்ள சொற்களை,உருவத்திற் சிறிதளவு திரித்தாதல் சிறிதளவு குறைத்தாதல் புத்துருவம் படைத்தாதல் மாற்றித் தங்கருத்துகளை நாகரிகநிலை முதிர்ந்த மக்கள் வெளிப்படுத்தியே விடுவார்கள்.
தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன; இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டில் நின்றுவிடும்; மற்றுப் பாமரர் தமிழோ தெலுங்குமலையாளங்கள் போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும்.
ஆதலின் தமிழ்மொழி யிவ்வாறு பிரிந்து பிரிந்து வழிமொழிகட்கு இடஞ் செய்துகொண்டு ஒரு நிலைப்பாடெய்திப் பயிற்சிகுன்றி ஆரியம்போற் பரவை வழக்கு அழிந்தொழிந்து போதல் விரும்பாத தமிழ்மக்கள் தமது அருமையான பாஷையை வேண்டியவளவு சீர்திருத்திக்கொள்ள இன்னே புகுதல் வேண்டும். இன்னுங் காலந்தாழ்க்கலாகாது.
அப்படியானால் தமிழ்மொழி யுடனே மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் யாவை? பண்டிதராயினார் திரிசொற்கள் பலவழங்கியும், அருகிய சொல்லுருவங்களை யுபயோகித்தும், செய்யுட்களிலும் அருகிவரும் அள பெடைகளைத் தொடுத்தும், விரிக்கவேண்டிய வேற்றுமை யுருபுகளைத்; தொகுத்தும், சாமானிய ஜனங்கள் மருண்டு ஒதுங்கிச் செல்லத்தக்கவாறு எழுதும் வழக்கத்தை நிறுத்திவிடல் வேண்டும்.
ஒருவரும் ஒன்றை யெழுதி அதனைத் தாமே படிக்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளமாட்டார். எழுதுவோரும் படிப்போரும் ஒருவரா யிருத்தலரிது. ஆதலின் ஒருவர் ஒன்றெழுதினால் அதனைப் பிறரெல்லாம் படித்தறிந்து கொள்ளவேண்டு மென்ற நோக்கத்தோடே எழுதுகின்றா ராதல் வேண்டும். அந்நோக்கமே அவர்க்குப் புகழும் பொருளும் தரவல்லது. ஆகவே பிறரெல்லாம் படித்துணர்ந்து கொள்ளத்தக்க தெளிவான நடையிலெழுதுவதே யாவரும் மேற்கொள்ளத் தக்கது. அத்தன்மையான தெளிவு நடைக்குத் திரி சொற்கள் வேண்டாம்; இயற் சொற்களே போதும். தப்பித்தவறி யிரண்டொன்று வழங்கிவிட்டாலும் பாதகமில்லை. இதுபோலவே பூர்வாசிரியர்களுடைய நூல்களிற் காணப்பட்டு இக்காலத்தில் அருகிப்போன சொல்லுருவங்களைக் கிளப்பிக் கொணர்ந்து வழங்குதலும் நேரிதன்று. இவற்றாற் பொருள் மயக்கம் உண்டாகின்றதேயன்றி வேறில்லை. பிறரை மயங்க வைக்க வேண்டுமென்பது ஒருவருக்கும் நோக்கமா யிருக்கலாகாது. அது நோக்கமாயிருந்தாற் பொருளில் தெளிவு எப்படி யேற்படும்? ஏற்படவே படாது. உதாரணமாக, 'அவன் இங்கே தங்கியிருந்து மறுநாட் போனான்' என்ற வாக்கியத்தை' அன்னோன் ஈண்டை இறுத் திருக்குபு பிற்றை ஞான்றை யேகினன்' என்றெழுதினாற் சாமானிய ஜனங்கள் அறிந்து கொள்ளுவார்களா? ஒருநாளும் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஒருவேளை செய்யுளெழுதுவதா யிருந்தால் யாப்பு நேர்மைகருதி இரண்டோர் அருகிய சொல்லுருவங்களை வழங்கினாலும் அஃது இழுக்கில்லை.
இவை போலவேயாம் வீணாக அளபெடைகளை வழங்குதலும். அளபெடைகள் யாப்பு நேர்மைக்காகவே வகுக்கப்பட்டன. வசன நடையில் யாப்பு நேர்மையேது? இல்லை. ஆனால் பண்டிதரெழுதும் வசனநடை செய்யுணடையை யொட்டியே நடத்தலால் அவர் ஓசை யின்பங் கருதி வழங்கபவா-ராயினர். இவ்வளபெடை வழக்கும் நீங்க வேண்டும், பொருளின் தெளிவு கருதினால்.
இவ்வாறே, வேற்றுமை யுருபுகளும் பிறவும் வாக்கியங்களில் விரிந்திரா விட்டால், அவ்வாக்கியங்கள் நெருங்கிச் செறிந்து கருதிய பொருளை ஆழ்த்தி விடுகின்றது. இத்தன்மையான நூல்களைப் படித்துப் பொருள் காண வந்தவர், அவற்றின் கண்ணே நுழைந்து மூழ்கிப் பொருள் காண்பரென்பதென்ன நிச்சயம்? சாதாரணமாகச் சனங்கள் மேலேமுதல் நோக்கத்திலேயே பொருள் தெரியா விட்டால் அதற்காகக் கஷ்டப்படுகிறதில்லை.
ஆதலால், யாம் மேற்கூறியவாறு, காலத்தினருமை கருதியும், யாவருக்கும் பொருள் விளங்கவேண்டு மென்பது கருதியும் தமிழ்ப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும், நாவலர்களும் முதலிய யாவரும், தெளிவான தமிழ் நடையைக் கைப்பற்றி, அந்நடையிலேயே நூல்கள் எழுதுவார்களாக. பண்டிதர்கள் தமது நடைத் தெளிவானாற் பெரிதும் சாமானிய சனங்களைத் திருத்தி நல்வழிப்படுத்தலாம். சாமானிய சனங்களும் அதிக கஷ்டமில்லாமல் எளிதில் திருந்துவர். இருவர்க்கும் உள்ள வொற்றுமை யேற்படும். இருவரும் ஒத்தியங்குவர். பண்டிதர் நூல்கள் சாமானிய மக்களால் ஆதரிக்கப்படும். அவ்வாறு ஆதரிக்கப்படுமேற் பண்டிதர்கட்கு குறைவேயில்லை. இவ்விஷயத்தில் ஆங்கிலவாணரைப் பார்த்து நாம் பொறாமைப் படுதல் வேண்டும்.
"தம்மினுங்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெலாம்
எற்ற யிவர்க்குநா மென்று"
என்றபடி ஆங்கில நூல்வாணரைப் பார்த்தாவது தமிழ் வாணரும் சாமானிய சனங்களை யொட்டிச் சென்று அவர்களைக் கைவிடாது பற்றிக்கொண்டு திருத்தி, அவர்களையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்வார்களாக.
"தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்"
என்ற திருவள்ளுவர் வாக்கு ஒருபொழுதும் மறக்கற் பாலதன்று.
இனித் தமிழ்ப் புலவர்கள் தாம் எழுதும் நூல்களிற் சந்தி சேர்த்தே எழுதுகின்றனர். சந்திசேர்த்தெழுதலே தமிழிலக்கண மரபாயினும் வசன நடையிலும் அவ்வாறு எழுதுதல் வேண்டுமென்ற நியமமில்லை. முற்காலத்தே ஏற்பட்ட உரை நூல்களிலும், முற்றும் சந்திசேர்த்தெழுதியிருக்கக்காணோம் இக்காலத்திலும் பண்டிதர் பலர் சிலவிடங்களில் சந்திசேர்த்தும் சில விடங்களில் சந்தி சேராமலும் எழுதி வருகின்றனர். ஆதலின் கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. பொருள் மயக்கமாவது, பொருள் வேறு பாடாவது உண்டாக்க வல்ல சந்திகளைச் சேராமல் பிரித்தே எழுதுக. சந்தி சேராமையாற் பொருள் கெடுவதாயிருந்தால் அவ்விட்திற் சந்திசேர்த் தெழுதுக. எளிய சந்திகளைச் சேர்க்கினும் சேராவிடினும் ஒன்றுதான். எளிய சந்திகளைச் சேர்ப்பதனாற் சாமானிய சனங்களுக்குப் படிப்பதிற் கஷ்டப்பட வேண்டிய-தொன்றுமில்லை. நன்று, இவ்விதிகளெல்லாம் வசன நடையில் அநுசரிக்கத் தருவனவாகும்; மற்றுந் தமிழ்ச் செய்யுணடையிலும் இவை தழுவத் தக்கனவோ? இது சிறிது வாதம் விளைக்கத் தக்கதோர் விஷயம். செய்யுளின்கண் இவை மேற்கொள்ளப்படுமேல், செய்யுளை ஓசையூட்டி இசையறுத்துப்
படிக்கும்போது இடர்ப்பாடு காணப்படும். ஆதலால் சந்திசேர்த்து இசை நலங்கெடாமல் ஒரு பாடந்தந்த பின்னர் சந்திபிரித்துப் பிறிதொரு பாடம் அதனடியில் தருதல் வேண்டும்.
ஆகவே சந்திபிரித் தெழுதும் விஷயத்தில் எவ்வளவு மட்டில் இடர்ப் பாடின்றி மேற் கொள்ளலாமோ அவ்வளவையும் மேற்கொள்ளவே வேண்டும். இதன் கண்ணே தமிழ்வாணர் காலம் போக்கற்க.
இனி ஆங்கிலம் முதலிய பிற பாஷைகளிலே மிகவும் பிரயோசன முள்ளதாகக் காணப்படுகின்ற 'குறியீட்டி லக்கணம்' தமிழின் கண் முழுவதுந் தழுவிக்கொள்ளப்படல் வேண்டும். அதனாற் பொருட்டெளிவும் விரைவுணர்ச்சி உண்டாகின்றன. இவை காரணமாகப் படித்தானுக்குப் படித்த நூலின் கண் ஆர்வமுண்டாகின்றது. இக்குறியீட் டிலக்கணமெல்லாந் தமிழ் வசன நடை கைவந்த வல்லாளராகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலவர்களானே முன்னே மேற்கொண்டு வழங்கப்பட்டுள. இதனை வசன நடையின்கண் ஆக்ஷேபிப்பா ரெவருமில்லை. செய்யுணடையிலேதான் உள்ள வம்பெல்லாம். இதனைச் செய்யுணடையில் ஒருவாறு மேற்கொள்ளலா மென்று துணிந்து புகுந்தாலும், குற்றியலுகரம்போல்வன வருமிடத்து இடர்ப்பாடு காண வேண்டியதாகின்றது. அதனையும் ஒருவகைத் தலைக்குறியாற் கனம்பொருந்திய ஜி.யூ. போப்பையர் அவர்களும், உடுக்குறியாற் காலஞ்சென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும் விலக்கிக் கொண்டனர்.
இனி, உள்ளவாறே உற்றுநோக்குமிடத்துக் குறியீட் டிலக்கணத்தைப் பற்றி ஆக்ஷேபித்தற்குத் தக்க நியாயங்களுமில்லை. ஆக்ஷேபிக்கு மியல்புடையாரும் ஆக்ஷேபிக்க வில்லை. ஆதலின் அது விரைவில் மேற்கொள்ளப்பட்டு முற்றிலும் பயிலப்படும் என்பதிற் சந்தேகமில்லை. அதனால் தமிழிற்கு விசேஷ நன்மைகள் விளையுமென்பதிலுந் தடையில்லை.
தமிழ்மக்கள் ஆங்கிலரோடு நாடொறும் ஊடாடுபவராயினர். ஆங்கிலர் ஆள்வோரும தமிழர் ஆளப்படுவோருமா யிருக்கின்றனர்.
"அரைசருங் குடிகளு மம்ம வேறலர்
உரைசெயி லுயிருல்லா முடல மாவரால்"
என்று யாம் பிறிதோரிடத்தில் கூறியாங்கு இருவரும் ஒத்தே இயங்குதல் வேண்டும். இவ்வாறு இருவரும் ஒத்தியங்கு மிடத்துத் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலபாஷையில் புகுதலும், ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப்பாஷையிற் புகுதலும் இயற்கையே. இதனைத் தடுக்கமுடியாது; தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்; அவ்வாறு தடுக்கப் புகினும் அது வீண்முயற்சியாய் முடியுமேயன்றி வேறில்லை.
ஏறக்குறைய ஆங்கில அரசாட்சி வந்து ஐம்பதறுபது வருஷமாகிறதற்குட் கணக்கற்ற ஆங்கிலச் சொற்கள் பரவைவழக்குத் தமிழிலே புகுந்துவிட்டன. கிராமவாசிகளும் பிறர் தம்மை நாகரிகமக்களாகக் கருதல்வேண்டி ஆங்கிலச் சொற்களைத் தம் பேச்சிலே ஆவலோடு வழங்குகின்றனர். இவ்வாறு பேச்சுத் தமிழ் அளவிறந்த ஆங்கிலச் சொற்களை மேற்கொண்டும், ஏட்டுத்தமிழ் அவற்றை ஏற்றுக்கொள்ளப் பின்னிடுகின்றது. எனினும் 'சுதேசமித்திரன்' போன்ற பத்திரிகைகள் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றைத் தமிழின் கண் ஏற்றப் புகுந்தன. 'மதுரைப் புதுத்தமிழ்ச் சங்க'த்தாரும் சிற்சில ஆங்கிலச் சொற்களை மேற்கோடல் இன்றியமையாதெனக் கண்டனர்; காண்டலும் மேற்கொண்டனர். அவர் செயல் மிகவும் நேரிதே.
ஆங்கில வாணர் சகல சாஸ்திரங்களிலும் வல்லுநராய், யாங்குச் சென்ற போதிலும் ஆங்குள்ள அரிய விஷயங்களை மதித்து மேற்கொளவதனொடு நில்லாமல், ஆங்குள்ளார் பயிலும் பாஷைச் சொற்களையும் மேற்கொள்கின்றனர். ஆதலானன்றே அவர்கள் லௌகிகஞானம் விரிந்து, வாழ்க்கை நியமங்களை நன்குணர்ந்து, ஊக்கங் குன்றாது பல நாடுகளை வென்று நாகரிக நிலையில் யாவரிலும் மிகவும் உயர்ந்தோரென மதிக்கப்படுகின்றனர்.
ஆங்கிலரைப்போலத் தமிழ்மக்களும் நாகரிக நிலையில் உயரவேண்டின் ஆங்கிலம் கற்று அவர்களது சாஸ்திர ரகசியங்களை அறிந்துகொள்ளவேண்டும். அங்ஙனங் கற்றுக்கொண்டோரிற் சிலர் அவ்வரிய உண்மைகளைத் தம்முடைய தாய்மொழியாகிய தமிழ் மொழியில் வெளியிடுதற்குரிய ஆற்றலிலராய்த் தம்மவர்க்குப் பயன்படாது வாணாள் வீணாள் கழிக்கினறனர். இப்பொழுதுதான் சிலர் தமிழ் மொழியைக் கண்விழித்துப் பார்ப்பாராயினர். அநேகர் ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கப் புகுந்தனர். இவ்வாறு மொழிபெயர்ப்பு வகையால் ஆங்கிலக் கருத்துகள் தமிழின்கண் எவ்வளவு புகினும்நலமே. இம் மொழிபெயர்ப்புவகை ஒன்று போதாது; இன்னும் வேறுவகைகளும் வேண்டும். தமிழ்ப் பகுதிகளினின்று புதுச்சொற்கள் படைத்துக் கருத்தை வெளிப் படுத்தலாம். உள்ள சொற்களைத் திரித்தும் சில புதுக்கருத்திற்கு இடஞ்செய்யலாம். சிலர் ஆஞ்கிலக் கருத்துகளுக்கு ஏற்றசொற்கள் தமிழ் மொழியிற்காண்டல் அரிதாயின் வடசொற்களின் மூலமாக அவற்றைத் தமிழில் வெளியிடுகின்றனர், இவ்வளவு தூரஞ் சுற்றுவானேன்? தலை சுற்றித்தான் மூக்கைத் தொடல் வேண்டுமோ? நேரே மூக்கைத் தொடல்கூடாதோ? ஆங்கிலச் சொற்களையும் 'திசைச்சொற்'களாக மேற்கொண்டாலென்னை? மேற்கும் ஒரு திசையன்றோ?
"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினுந்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப."
என்ற சூத்திர விதியின்கண் ஆங்கிலநாடு அடங்கவில்லையே யென்று வாதித்தலும் ஒக்குமோ? ஆங்கிலமொழி திசைச்சொற்குரிய நிலங்களினும் வட சொற்குரிய நிலங்களினும் பயிலப்படுவதேயன்றிச் செந்தமிழ்க்குரிய நிலத்தினும் பயிலப்பட்டு வருதலால், ஆங்கிலச் சொற்களைத் திசைச்சொற்களென மேற்கொள்ளுவதிலே யாது தடையோ? இவ்வாறு செய்தலே அறிவுடையோர் செயலாம். இதனைப் பேரறிவாளராயினர் பிற பரவை வழக்குள்ள பாஷைகளின் சரித்திரங்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் செவ்வனே யாராய்ந்து உண்மை யெனக் கண்டு காலந் தாழ்த்தலின்றி யுடனே மேற்கொண்டு தமிழ்ப் பாஷை முதிர்ந்து நாகரிக நிலையிலுயர்ந்து முன்னுக்கு வருமாறு செய்வாராக.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே."
என்ற பவணந்திமுனிவர் கூற்று அறிவுடையோர் அனைவருஞ்; சிந்திக்கற் பாலது. இவ்வளவு சுவாதீனமுள்ள தமிழ்ப் பாஷைக்கு மேற்கூறியாங்கு செய்வதற்குத் தடையென்ன? ஒருதடையுமில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலுமாகிய இவ்விரண்டும் பாஷை யியக்கத்திற்குரிய இரண்டு கால்களென மதிக்கப்படு-கின்றன. இவ்வுண்மையை யுய்த்துணர்ந்து தமிழ்ப் பாஷையின்கட் செய்யவேண்டிய சீர்திருத்தங்களையுடனே மேற்கொள்ளுதல் தமிழ் மக்கள் கடனாம்.
பாஷையின் சீர்திருத்தம் முற்றிற்று