பிற துறைகள்

bookmark

மருத்துவம், சோதிடம், தருக்கம் முதலிய துறைகளும் பிரபுலிங்க லீலையில் இடம் பெற்றுள்ளன.

10.1 மருத்துவம்
ஆவிற்கு (பகவுக்கு) நோய் வரின், அதன் பாலையே கறந்து அதற்கு ஊட்டினால் நோய் நீங்குமாம். பாடல்:

“ஆவுறு பிணிகெட ஆவின் பால்கறந்து
ஆவினை ஊட்டல் போல்” (16-15)
என்னும் பாடல் பகுதியால் மாட்டு மருத்துவமும் அறிவிக்கப் பட்டுள்ளது.

10.2 கணி (சோதிடம்)
மாயை என்னும் கன்னியின் அத்தத்தில் (கையில்) கடகம் என்னும் அணிகலனைப் புனைந்தாளாம் ஒரு தோழி. பாடல்:

“கன்னி அத்தம் வந்து இனமணிக் கற்கடகத்தின்
மன்னி உற்றது அற்புதம் என வளைபல காக்க
வின்னுதல் கருங்கண் மடமாது கை விளங்கப்
பொன்னின் நற்கடகம் புனைந்தனள் ஒரு பூவை” (4-13)
என்பது பாடல்: மேடம், இடபம், மிதுனம், கடகம் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், என்னும் பன்னிரண்டு இராசிகளுள், இருபத்தேழு விண் மீன்களுள் (நட்சத்திரங்களுள்) ஒன்றான அத்தம் (அஸ்தம்) என்னும் விண்மீன் கன்னி இராசிக்கு உரியது. அது, (கற்) கடக இராசியில் வந்து உற்றது அற்புதம் என்று சொல்லும் படி, கன்னியின் அத்தத்தில் (கையில்) கடகம் அணிந்தது இருந்ததாம். கணிப்பாடல் இன்னும் உண்டு.

10.3 தருக்கம்
தருக்கம் என்பதைத் தமிழில் நெறிமுறை எனலாம். தீ மேல் நோக்கிச் செல்லும் - நீர் கீழ் நோக்கிச் செல்லும் என்பது தருக்க - நெறி முறை.

திருப்பருப்பத மலை உச்சியிலிருந்து அருவி கீழ் நோக்கி ஓடி வருகிறது. ஒரு யானை அருவி நீரை உறிஞ்சி மேல் நோக்கி விண்ணிலே செல்லும்படி உந்தி எறிகிறதாம். வெப்பமான ஞாயிறு இந்த அருவி நீர் படலால் குளிர்ந்த திங்கள் போல் குளிர்கிறதாம்: இது, தீ மேல் நோக்கியும் நீர் கீழ் நோக்கியும் செல்லும் என்னும் தருக்க - நெறிமுறைக்கு மாறாக உள்ளதாம். பாடல்:
“தூங்கிசை அருவிபாயத் தொளைக்கை
வெண்கோட்டு உரல்கால்
ஈர்ங்கவுள் நெடுநல்யானை ஏற்ப
வெந்தழல் அலாமல்
தேங்கு தண்புனல் மேல்நோக்காது
என்பது தீரச் சென்று
பூங்கதிர் பணிவெண் திங்கள்
போன்மெனத் திவலை செய்யும்” (19-16)
என்பது பாடல். ஏற்ப = மேல் நோக்கி எறிய; பூங்கதிர்= ஞாயிறு.

இவ்வாறாகப் பிரபுலிங்கலீலை என்னும் இலக்கிய உலகில் பல துறைக் காட்சிகளைக் கண்டு களிக்கலாம். சிவப்பிரகாச அடிகளாரைக் "கற்பனைக் களஞ்சியம்" என்னும் சிறப்புப் பெயரால் குறிப்பிட இந்நூல் ஒன்றே போதுமே!