புண்ணாக்கு சித்தர் பாடல்கள்

bookmark

தேவி மனோன்மணியாள் திருப் பாதம்  காண எண்ணி 
தவித்திருந்தேனே - ஞானம்மா 
சரணம் சரணம் என்றே 
 
அஞ்சானமும் கடந்து அறிவை மிக செலுத்தி 
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால்  - ஞானம்மா 
விலையில்லா ரத்தினமடி 
 
முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே  -   ஞானம்மா 
தானுயிர் நிற்பதடி 
 
விட்ட குறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேறாமல் 
தொட்ட குறை ஆனதனால் -  ஞானம்மா 
தோன்றுமெய்ஞ் ஞானமடி 
 
தம்முளம் அறியாமல் சரக்கை தெரியாமல் 
சம்ஹாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகாரத்திலே உழல்வார் 
 
இஷ்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் 
துஷ்டர்க்கு உபதேசம்  - ஞானம்மா
சொன்னால் வருமோசம் 
 
முக்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு  -  ஞானம்மா 
நினைவோடு இருக்கணுமே 
 
நினைவை கனவாகவே நீஎண்ணியே பார்க்கில் 
சினமாய்வரும் எமனும் -  ஞானம்மா
தெண்டனிட்டு போவானே 
 
யோகவிளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் -  ஞானம்மா 
மூழ் கியே போவார்கள்
 
சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி 
ஆஸ்தி தேட நினைத்து -  ஞானம்மா
அலைவர் வெகு கோடி 
 
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கிடம்தானே  -  ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி 
 
கலத்தை அலங்கரித்து பெண்கள் தலைவிரித்து 
கணக்கை தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி 
 
மேளங்கள் போடுவதும் வெகு பேர்கள் கூடுவதும்
நாளை எண்ணமல்லலோ  - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி 
 
கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் 
தேவ மாதா இரவல் - ஞானம்மா
தெரியாது அலைவாரே 
 
செத்தவரை மயானம் சேர்க்கும் வரையில் ஞானம்
உத்தமர் போல பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி 
 
காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும்
காட்டும் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிய ஆகாதே 
 
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது 
இல்லா வெளிச்சமது - ஞானம்மா
ஈன வெளிச்சமடி 
 
சம்ஹாரமென்றும் சகராமனென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயன் ஆவதென்ன 
 
காத்தடைத்து வந்ததிது கசமால பாண்டமிது 
ஊத்த சடலமிது - ஞானம்மா
உப்பில்லா பொய்க்கூடு 
 
அஞ்சு பேர் கூடி அரசாளவே தேடி 
சஞ்சாரம் செய்திடவே - ஞானம்மா
தானமைத்த பொய் கூடே