புண்ணாக்கு சித்தர் பாடல்கள்

தேவி மனோன்மணியாள் திருப் பாதம் காண எண்ணி
தவித்திருந்தேனே - ஞானம்மா
சரணம் சரணம் என்றே
அஞ்சானமும் கடந்து அறிவை மிக செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
விலையில்லா ரத்தினமடி
முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா
தானுயிர் நிற்பதடி
விட்ட குறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேறாமல்
தொட்ட குறை ஆனதனால் - ஞானம்மா
தோன்றுமெய்ஞ் ஞானமடி
தம்முளம் அறியாமல் சரக்கை தெரியாமல்
சம்ஹாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகாரத்திலே உழல்வார்
இஷ்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துஷ்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம்
முக்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு - ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே
நினைவை கனவாகவே நீஎண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
தெண்டனிட்டு போவானே
யோகவிளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் - ஞானம்மா
மூழ் கியே போவார்கள்
சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆஸ்தி தேட நினைத்து - ஞானம்மா
அலைவர் வெகு கோடி
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கிடம்தானே - ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி
கலத்தை அலங்கரித்து பெண்கள் தலைவிரித்து
கணக்கை தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி
மேளங்கள் போடுவதும் வெகு பேர்கள் கூடுவதும்
நாளை எண்ணமல்லலோ - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி
கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல்
தேவ மாதா இரவல் - ஞானம்மா
தெரியாது அலைவாரே
செத்தவரை மயானம் சேர்க்கும் வரையில் ஞானம்
உத்தமர் போல பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி
காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும்
காட்டும் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிய ஆகாதே
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லா வெளிச்சமது - ஞானம்மா
ஈன வெளிச்சமடி
சம்ஹாரமென்றும் சகராமனென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயன் ஆவதென்ன
காத்தடைத்து வந்ததிது கசமால பாண்டமிது
ஊத்த சடலமிது - ஞானம்மா
உப்பில்லா பொய்க்கூடு
அஞ்சு பேர் கூடி அரசாளவே தேடி
சஞ்சாரம் செய்திடவே - ஞானம்மா
தானமைத்த பொய் கூடே