புன்செய் உழவு

மூன்று ஏர்கள் உழுகின்றன. இரண்டாவது ஏருக்குக் கழுத்தேரு என்று பெயர். முதல் ஏருக்கு முன்னத்தி ஏர் என்றும் கடைசி ஏருக்கு பின்னத்தி ஏர் என்றும் பெயர். எட்டிலிருந்து புன்செய்க் காடு தூரத்தில் இருந்தால்,கலப்பையிலுள்ள மேழியையும், கலப்பைக் குத்தியையும் நுகத்தடி மீது ஏற்றி காளை பூட்டி ஓட்டிச் செல்லுவார்கள். புன்செயை அடைந்ததும் கலப்பையை இறக்கி, வடத்தை இழுத்துக்கட்டி நேராக்கி உழத்தொடங்குவர்.
மூன்று உழவர்களில் ஒருவனுக்குக் காதலி உண்டு. அவள் வேலைமுடியும் சமயம் வந்து ஓடைக்கரை கருவ மரத்தடியில் உட்கார்ந்து அவனைப் பார்த்துப் பேசிவிட்டு போவாள்.
இன்று ஏர் கட்டுமுன்பே அவள் வந்து விட்டாள். அடுத்த ஏர்க்காரன் காதலனிடம் சாடையாக அதனைக் கூறுகிறான்.அவன் அதனைத் தெரிந்திருந்தான். எனவே அவளை அனுப்பி விட்டு வருவதாகச் சொல்லி அவனிடம் ஏரைப்பூட்டச் சொல்லிவிட்டு ஓடுகிறான்.
துணைவர்கள் பொறாமையின்றி கௌரவமாக காதலர்களுக்கு உதவி செய்வதை நாட்டுப் பாடலிலும் கிராம வாழ்க்கையிலும் இன்றும் காண்கிறோம்.
(குறிப்புரை S.S.போத்தையா)
முன்னத்தேராம் பின்னத்தேராம்
மூணேரும் தனதேராம்
கழுத்தேரு கட்டுமுன்னே
கண்டேனடி கருங்குயிலே
முன்னத்தி ஏருக்காரா
முறுக்கிவிட்ட மீசைக்காரா
நீ தொட்ட கருத்தப்பிள்ளை
நிண்ணு மயங்குதாளே
முன்னத்தி ஏருக்காரா
முதலாளி பண்ணைக் காரா
நீ தொட்ட கட்டப்புள்ள
நிண்ணு மயங்குதாளே
ஓடையிலே ஓரனேறு
ஒருத்தி மகள் கருத்தாளு
கருத்தாளு பேரு சொன்னா
கனகமணி ஓசையிடும்
மூணேறு கட்டியல்ல
முகமெல்லாம் தேர் ஓடி
கழுத்தேரு கட்டையிலே
கண்டேன் கருங்குயிலே
ஏரப்புடி இளையதம்பி
இளமயில நான் தொடர
இருக்கப் பறந்திராம
என்னருமைப் பசுங்கிளியே
வட்டார வழக்கு: ஏரு-ஏர் ; கட்டையிலே-கட்டும் வேளையிலே ; பறந்திராம-பறந்துவிடாமல்.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: கோவில்பட்டி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
-----------