பெண்ணாய்ப் பிறந்த குறை

அவள் தன் கணவனை இழந்து விட்டாள். புகுந்த வீட்டிலோ புருஷன் போன பின்பு மதிப்பில்லை. விதவைக் கோலத்தோடு பிறந்தவீடு சென்று என்ன பயன்? தான் கணவனுடன் வாழும் காலத்தில் தனக்கு இருந்த மதிப்பு எந்த இடத்திலும் இப்பொழுது இருக்காது. நடைப்பிணமாக வாழ வேண்டியதுதான் என்பதை அவள் உணர்ந்தாள். தான் பெண்ணாய்ப் பிறக்காமல் ஆணாய்ப் பிறந்திருந்தால்,தந்தைக்குப் பின் தான் வீட்டிற்கு உரிமை உள்ளவளாக இருக்கலாம். எந்தவித சுதந்திரமும் உண்டு, அல்லது கோயில் சிலையாகப் பிறந்திருந்தாலாவது மாதம் ஒரு முறையாவது பூசைகள் நடக்கும். ஆனால் பெண்ணாய்ப் பிறந்த குறை ஒன்றினாலேயே தான் இவ்விதம் புலம்பி அழும் நிலைமை ஏற்பட்டதை எண்ணி மேலும் அழுகிறாள்.
ஆதண்டங்காய் காய்க்கும்
அலரி பூ பிஞ்சிறங்கும்
ஆணாய் பிறந்திருந்தால்
அப்பன் வீட்டு அரண்மனையில்
அம்பெடுப்பேன் வில்லெடுப்பேன்
மாரியம்மன் கோயிலண்டை
மண்ணாய்ப் பிறந்திருந்தால்-எனக்கு
மாசம் ஒரு பூசை வரும்
பெண்ணாய்ப் பிறந்த குறை
புலம்பிக் கிடக்கலாச்சு
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
--------------