
பெரும் ஏழை

ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, குருவே! நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள் என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம், நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு என்று சொன்னார்.
அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான். சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களை கொடு என்றார். அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை. வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு என்று கேட்டார். அதற்கும் அவன் முடியாது என்றான். உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன், உன் உயிரைக் கொடு என்றார்.
அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான். அதைக் கேட்ட அந்த குரு அவனிடம், உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு என்று கூறினார்.