பொதுப்பாடல்கள் - 4

bookmark

பாடல் 1086 
தனதனனந் தான தனதனனந் தான 
தனதனனந் தான ...... தனதான 

அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு 
மசலமிரண் டாலு ...... மிடைபோமென் 
றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர 
தபயமிடுங் கீத ...... மமையாதே 
நகமிசைசென் றாடி வனசரர்சந் தான 
நவையறநின் றேனல் ...... விளைவாள்தன் 
லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர 
நமசரணென் றோத ...... அருள்வாயே 
பகலிரவுண் டான இருவரும்வண் டாடு 
பரிமளபங் கேரு ...... கனுமாலும் 
படிகநெடும் பா கடதடகெம் பீர 
பணைமுகசெம் பால ...... மணிமாலை 
முகபடசிந் தூர கரியில்வருந் தேவு 
முடியஅரன் தேவி ...... யுடனாட 
முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி 
முடிவினுமஞ் சாத ...... பெருமாளே. 
பாடல் 1087 
தனதனனந் தானம் தனதனனந் தானம் 
தனதனனந் தானம் ...... தனதான 

கலகமதன் காதுங் கனமலரம் பாலுங் 
களிமதுவண் டூதும் ...... பயிலாலும் 
கடலலையங் காலுங் கனஇரையொன் றாலும் 
கலைமதியங் காயும் ...... வெயிலாலும் 
இலகியசங் காளும் இனியவளன் பீனும் 
எனதருமின் தானின் ...... றிளையாதே 
இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங் 
கிருதனமுந் தோள்கொண் ...... டணைவாயே 
உலகைவளைந் தோடுந் கதிரவன்விண் பால்நின் 
றுனதபயங் காவென் ...... றுனைநாட 
உரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும் 
உருவியுடன் போதும் ...... ஒளிவேலா 
அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும் 
அடைவுடனின் றாடும் ...... பெரியோர்முன் 
அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென் 
றழகுடனன் றோதும் ...... பெருமாளே. 
பாடல் 1088 
தனதனனந் தானந் தனதனனந் தானந் 
தனதனனந் தானந் ...... தனதான 

குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங் 
குலவியெழுங் கோலந் ...... தனில்மாயக் 
கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங் 
குணவுயிர்கொண் டேகும் ...... படிகாலன் 
கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங் 
கதறமறந் தேனென் ...... றகலாமுன் 
கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன் 
கருணைமகிழ்ந் தோதுங் ...... கலைதாராய் 
நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன் 
நினைவுமழிந் தோடும் ...... படிவேலால் 
நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின் 
நிலைதொழநின் றேமுன் ...... பொருவீரா 
பருதியுடன் சோமன் படியையிடந் தானும் 
பரவவிடந் தானுண் ...... டெழுபாரும் 
பயமறநின் றாடும் பரமருளங் கூரும் 
பழமறையன் றோதும் ...... பெருமாளே. 
பாடல் 1089 
தனதனன தாத்த தனதனன தாத்த 
தனதனன தாத்த ...... தனதான 

இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை 
யெடுமெடென வீட்டி ...... லனைவோரும் 
இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில் 
எரியஎரிமூட்டி ...... யிடுமாறு 
கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர் 
கயிறிறுக மாட்டி ...... யழையாமுன் 
கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு 
கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே 
பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு 
பழையகுற வாட்டி ...... மணவாளா 
பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு
பகருநுதல் நாட்ட ...... குமரேசா 
அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை 
அடைவடைவு கேட்ட ...... முருகோனே 
அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி 
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. 
பாடல் 1090 
தனதனன தாத்த தனதனன தாத்த 
தனதனன தாத்த ...... தனதான 

உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து 
உளமுருகு தீர்த்தி ...... வுடலூடே
உடலை முடிவாக்கு நெடியதொரு காட்டில் 
உயர்கனலை மூட்டி ...... விடஆவி 
மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி 
வலிவினொடு தாக்கி ...... வளையாமுன் 
மனமுமுனி வேட்கை மிகவு முன தாட்கள் 
மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய் 
பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு 
வரையில்மற வோர்க்கு ...... மகவாகப் 
பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த 
பிடியினடி போற்று ...... மணவாளா 
அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த 
அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய் 
அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து 
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. 
பாடல் 1091 
தனனதன தனனதன தனனதன தனனதன 
தனனதன தனனதன ...... தனதான 

அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென 
அமுதமொழி பதறியெழ ...... அணியாரம் 
அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக 
அமுதநிலை யதுபரவ ...... அதிமோகம் 
உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு 
முறுகபட மதனில்மதி ...... யழியாதே 
உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு 
னுபயநறு மலரடியை ...... அருள்வாயே 
வளையமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு 
மருதினொடு பொருதருளு ...... மபிராமன் 
வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன் 
மருகஅமர் முடுகிவரு ...... நிருதேசர் 
தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற 
தகனமெழ முடுகவிடு ...... வடிவேலா 
தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ 
சகலகலை முழுதும்வல ...... பெருமாளே. 
பாடல் 1092 
தனனதன தனனதன தனனதன தனனதன 
தனனதன தனனதன ...... தனதான 

அனகனென அதிகனென அமலனென அசலனென 
அபயனென அதுலனென ...... அநபாயன் 
அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி 
யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி 
வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை 
மகிபஎன தினையளவு ...... ளவுமீயா 
மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய 
மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே 
இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென 
இருசதுர திசையிலுர ...... கமும்வீழ 
இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில 
மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக் 
ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி 
கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக் 
கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக 
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
பாடல் 1093 
தனனதன தனனதன தனனதன தனனதன 
தனனதன தனனதன ...... தனதான 

குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு 
கொழுவுமுதி ரமும்வெளிற ...... ளறுமாகக் 
கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி 
குமுகுமென இடைவழியில் ...... வரநாறும் 
உடலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக 
வுலகமரு ளுறவரும ...... ரிவையாரன் 
பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன 
தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே 
வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய 
வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை 
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென 
மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக் 
கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில 
ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக 
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
பாடல் 1094 
தனதனன தனதனன தனதனன தனதனன 
தனதனன தனதனன ...... தனதான 

குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு 
குமுதமிடு பரசமய ...... மொருகோடி 
குருடர்தெரிவரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது 
கொடியஇரு வினையெனும ...... ளறுபோக 
உதறிவித றியகரண மரணமற விரணமற 
வுருகியுரை பருகியநு ...... தினஞான 
உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத 
யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே 
சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை 
சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ் 
செகதலமு நிகர்சிகரிபலவுநல கெசபுயக 
திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற் 
கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை 
யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக 
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
பாடல் 1095 
தனதனன தனதனன தனதனன தனதனன 
தனதனன தனதனன ...... தனதான 

வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென 
வயிரமர கதமகர ...... மளவாக 
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி 
வளையிளைஞ ருயிர்கவர ...... வருமாய 
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி 
எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா 
இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன 
திருநயன கருணைசிறி ...... தருள்வாயே 
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரிஅவல்துவரை 
பயறுபெரு வயிறுநிறை ...... யவிடாமுப் 
பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை 
பரியதனி யெயிறுகொடு ...... குருநாடார் 
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய 
கடலுலகு நொடியில்வரு ...... மதிவேகக் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக 
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
பாடல் 1096 
தனதனன தனதனன தனதனன தனதனன 
தனதனன தனதனன ...... தனதான 

விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற 
விதறிவளை கலகலென ...... அநுராகம் 
விளையம்ருக மதமகுள முலைபுளக மெழநுதலில் 
வியர்வுவர அணிசிதற ...... மதுமாலை 
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி 
யிதழ்பருகி யுருகியரி...... வையரோடே 
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி 
யவசமுறு கினுமடிகள் ...... மறவேனே 
உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர 
வுரகர்பில முடியவொரு ...... பதமோடி 
உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர 
வுயரவகி லபுவனம ...... திரவீசிக் 
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ் 
கருதரிய விதமொடழ ...... குடனாடுங் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக 
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
பாடல் 1097 
ராகம் – கரஹரப்ரியா, தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தனதனன தானதத்த தனதனன தானதத்த 
தனதனன தானதத்த ...... தனதான 

எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து 
இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை 
எனுமுலவை யேயணைத்து விரககுழை யேகுழைத்து 
இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும் 
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து 
இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல் 
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு 
இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே 
வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற 
மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி 
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர 
மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே 
அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு 
அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா 
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி 
அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. 
பாடல் 1098 
தனதனன தானதத்த தனதனன தானதத்த 
தனதனன தானதத்த ...... தனதான 

நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள் 
நயனமத னால்மருட்டி ...... வருவாரை 
நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று 
லளிதமுட னேபசப்பி ...... யுறவாடி 
வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி 
மதனனுடை யாகமத்தி ...... னடைவாக 
மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும் 
வனிதையர்க ளாசைபற்றி ...... யுழல்வேனோ 
இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க 
இருகையுற வேபிடித்து ...... உரலோடே 
இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண 
னியல்மருக னேகுறத்தி ...... மணவாளா 
அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு 
அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா 
அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட 
அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. 
பாடல் 1099 
தனதனன தானதத்த தனதனன தானதத்த 
தனதனன தானதத்த ...... தனதான 

மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து 
மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே 
மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை 
மனமகிழ் வேயளித்து ...... மறவாதே 
உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை 
ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான் 
உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை 
யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே 
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம 
சரணயுக மாயனுக்கு ...... மருகோனே 
சரவணமி லேயுதித்த குமரமுரு கேசக்ர 
சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா 
அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும் 
அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே 
அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட 
அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. 
பாடல் 1100 
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் 
தந்தனந் தந்தனந் ...... தனதான 

அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ் 
சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா 
அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந் 
தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ் 
சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ் 
சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார் 
தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின் 
தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ 
கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங் 
கங்களுங் திங்களுங் ...... கழுநீருங் 
கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங் 
கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர் 
பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும் 
பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா 
பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும் 
பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே. 
பாடல் 1101 
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் 
தந்தனந் தந்தனந் ...... தனதான 

தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன் 
தண்டவொன் றன்றொடுங் ...... கிடுமாவி 
தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந் 
தன்றுமென் றுந்தனந் ...... தனைநாடி 
நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ் 
சின்கணன் பொன்றில்மங் ...... கையர்நேசம் 
நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந் 
தின்பமொன் றின்றியிங் ...... குழல்வேனோ 
சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன் 
தொண்டனென் றன்றுகொண் ...... டிடுமாதி 
தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன் 
பங்கடிந் தென்பொடுந் ...... தொலையாநீர் 
அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந் 
தன்றுமின் றும்புனைந் ...... திடும்வேணி 
அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென் 
றண்டரண் டந்தொழும் ...... பெருமாளே. 
பாடல் 1102 
தந்தனா தனதனந் தந்தனா தனதனந் 
தந்தனா தனதனந் ...... தனதான 

உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண் 
டுண்டுமே கலைகழன் ...... றயலாக 
உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன் 
பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே 
செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ் 
சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத் 
திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ் 
சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன் 
கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங் 
கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக் 
கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங் 
கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா 
அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன் 
றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள 
அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந் 
தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே. 
பாடல் 1103 
தந்தனா தனதனந் தந்தனா தனதனந் 
தந்தனா தனதனந் ...... தனதான 

வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென் 
பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர 
வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந் 
தந்தமா மதனலம் ...... விதமாக 
விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண் 
டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம் 
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந் 
துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே 
பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம் 
பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு 
பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந் 
தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே 
அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந் 
தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன் 
அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண் 
டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே. 
பாடல் 1104 
தானனா தந்தனந் தானனா தந்தனந் 
தானனா தந்தனந் ...... தனதான 

காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங் 
காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண் 
காளகூ டங்கொடுங் கால்ரு பம்பொருங் 
காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும் 
ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந் 
தோநமோ கந்தஎன் ...... றுரையாதே 
ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின் 
றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ 
தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந் 
தாரம்வா சந்திசந் ...... தனநீடு 
சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந் 
தானமா தெங்கள்பைம் ...... புனமேவும் 
தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ் 
சேகரா தண்டையங் ...... கழல்பேணித் 
தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந் 
தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே. 
பாடல் 1105 
தானனா தத்தனத் தானனா தத்தனத் 
தானனா தத்தனத் ...... தனதான 

கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக் 
கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற் 
கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக் 
கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான் 
சீலகா லப்புயற் பாரிசா தத்தருத் 
த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ் 
சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக் 
கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ 
ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத் 
தாரவா ரக்கடற் ...... கிடைசாயும் 
ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட் 
டாத்ரு பத்தினிற் ...... சுடராய 
காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக் 
காகவே ளைப்புகக் ...... கழுநீராற் 
காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக் 
காமவேள் மைத்துனப் ...... பெருமாளே. 
பாடல் 1106 
தானனா தத்தனத் தானனா தத்தனத் 
தானனா தத்தனத் ...... தனதான 

ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத் 
தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம் 
நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட் 
டோ யுநா யொப்பவர்க் ...... கிளையாதே 
நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட் 
டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா 
நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற் 
றோதநீ திப்பொருட் ...... டரவேணும் 
கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத் 
தானும்வே தக்குலத் ...... தயனாருங் 
கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப் 
போதுறா நிற்பஅக் ...... கொடிதான 
காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக் 
கோதைகா மக்கடற் ...... கிடைமுழ்கக் 
காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக் 
காமவேள் மைத்துனப் ...... பெருமாளே. 
பாடல் 1107 
தனதனா தனதனந் தனதனா தனதனந் 
தனதனா தனதனந் ...... தனதான 

கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங் 
களினறா துயில்வதுஞ் ...... சரிபேசுங் 
கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங் 
கமலநா பியின்முயங் ...... கியவாழ்வும் 
அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின் 
பநல்மகோ ததிநலம் ...... பெறுமாறும் 
அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ் 
சரமனோ லயசுகந் ...... தருவாயே 
பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம் 
படர்பகீ ரதிவிதம் ...... பெறஆடல் 
பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம் 
பனிநிலா வுமிழுமம் ...... புலிதாளி 
குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங் 
குடிலவே ணியிலணிந் ...... தவராகங் 
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங் 
குமரனே யமரர்தம் ...... பெருமாளே. 
பாடல் 1108 
தனதனா தனதனந் தனதனா தனதனந் 
தனதனா தனதனந் ...... தனதான 

வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந் 
தமர்செய்வாள் விழியர்நெஞ் ...... சினில்மாயம் 
வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந் 
தணுகுமா நிதிகவர்ந் ...... திடுமாதர் 
துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந் 
தமளிதோய் பவர்வசஞ் ...... சுழலாதே 
தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந் 
துனதுதாள் தொழமனந் ...... தருவாயே 
படியெலா முடியநின் றருளுமா லுதவுபங் 
கயனுநான் மறையுமும் ...... பரும்வாழப் 
பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண் 
டலகையோ டெரிபயின் ...... றெருதேறிக் 
கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங் 
குவளைசேர் சடையர்தந் ...... திருமேனி 
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங் 
குமரனே யமரர்தம் ...... பெருமாளே. 
பாடல் 1109 
தத்ததன தானான தத்ததன தானான 
தத்ததன தானான ...... தனதான 

கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய 
கட்டுவிடு மோர்கால ...... மளவாவே 
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு 
கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன் 
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி 
யிட்டவிதி யோயாவி ...... யிழவாமுன் 
எத்தியுனை நாடோ று முத்தமிழி னாலோத 
இட்டமினி தோடார ...... நினைவாயே 
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர் 
தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத் 
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால 
சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே 
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ 
மத்தமயில் மீதேறி ...... வருநாளை 
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ 
வைத்தபடி மாறாத ...... பெருமாளே. 
பாடல் 1110 
தத்ததன தானான தத்ததன தானான 
தத்ததன தானான ...... தனதான 

பக்கமுற நேரான மக்களுட னேமாதர் 
பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான 
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை 
பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற் 
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு 
பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன் 
பொற்கழலை நாடோ று முட்பரிவி னாலோது 
புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே 
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர் 
எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே 
எட்டவரிதோர்வேலை வற்றமுது சூர்மாள 
எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா 
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ 
மத்தமயில் மீதேறி ...... வருவோனே 
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ 
வைத்தபடி மாறாத ...... பெருமாளே. 
பாடல் 1111 
தானதன தந்தான தானதன தந்தான 
தானதன தந்தான ...... தனதான 

நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி 
நீளமக லஞ்சோதி ...... வடிவான 
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல 
நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச் 
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத 
சோதிமரு வும்பூமி ...... யவையூடே 
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட 
சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே 
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன் 
வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல 
வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட 
மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே 
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு 
மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா 
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத 
லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே. 
பாடல் 1112 
ராகம் – ஹிந்தோளம், தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2) 
தகதிமிதக-3, தகிட-1 1/2 
(எடுப்பு - 3/4 இடம்) 

தத்ததனா தான தத்ததனா தான 
தத்ததனா தான ...... தனதான 

சுட்டதுபோ லாசை விட்டுலகா சார 
துக்கமிலா ஞான ...... சுகமேவிச் 
சொற்கரணா தீத நிற்குண்மு டாடு 
சுத்தநிரா தார ...... வெளிகாண 
மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
முட்டவுமீ தேறி ...... மதிமீதாய் 
முப்பதுமா றாறு முப்பதும்வே றான 
முத்திரையா மோன ...... மடைவேனோ 
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ 
னப்பிரமா வோட ...... வரைசாய 
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய 
எத்தனையோ கோடி ...... யசுரேசர் 
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு 
பத்திருதோள் வீர ...... தினைகாவல் 
பத்தினிதோள் தோயு முத்தமம றாது 
பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே. 
பாடல் 1113 
தத்ததனா தான தத்ததனா தான 
தத்ததனா தான ...... தனதான 

மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு 
மக்களுமா றாத ...... துயர்கூர 
மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ 
வைத்தவர்தா மேக ...... மதிமாய 
நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு 
நெட்டளவாம் வாதை ...... யணுகாமுன் 
நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி 
நித்தலும்வாழ் மாறு ...... தருவாயே 
நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத 
னற்றவர்தா நாட ...... விடையேறி 
நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு 
நற்றுணைவா ஞால ...... மிகவாழப் 
பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக 
பத்தியதா மாறு ...... முகநாளும் 
பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத 
பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே. 
பாடல் 1114 
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன 
தத்தனத் தத்ததன ...... தனதான 

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு 
சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ் 
சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி 
சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை 
சுத்தமத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு 
தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத் 
துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி 
சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும் 
வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய 
வெற்றிசத் திக்கரக ...... முருகோனே 
வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல 
விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா 
கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள் 
கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா 
கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர் 
கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே. 
பாடல் 1115 
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன 
தத்தனத் தத்ததன ...... தனதான 

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர் 
மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும் 
வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு 
மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும் 
புக்குதுக் தித்தெரிகள் தத்தவைக் கப்புகுது 
பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே 
புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு 
புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே 
செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு 
செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி 
சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு 
சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே 
கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை 
கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா 
கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது 
குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே. 
பாடல் 1116 
தத்தா தத்தா தத்தா தத்தா 
தத்தா தத்தத் ...... தனதான 

உற்பா தப்பூ தக்கா யத்தே 
யொத்தோ டித்தத் ...... தியல்காலை 
உட்பூ ரித்தே சற்றே சற்றே 
யுக்கா ரித்தற் ...... புதனேரும் 
அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ 
லப்பா வித்துத் ...... திரிவேனுக் 
கப்பா சத்தா லெட்டா அப்பா 
லைப்போ தத்தைப் ...... புரிவாயே 
பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா 
கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப் 
புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர் 
பொட்டா கக்குத் ...... தியவேலா 
முற்பா டப்பா டற்றா ருக்கோர் 
முட்கா டற்கப் ...... பொருளீவாய் 
முத்தா முத்தீ யத்தா சுத்தா 
முத்தா முத்திப் ...... பெருமாளே.