பொதுப்பாடல்கள் - 6

bookmark

பாடல் 1152

தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன 
தனத்ததன தனத்ததன ...... தனதான 

குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு 
குழைக்கும்வடு விழிக்குமெழு ...... குமிழாலுங் 
கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு 
தினுக்குமிக வுறத்தழுவு ...... குறியாலும் 
அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல 
ரடிக்குமிள நகைக்குமுள ...... மயராதே 
அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரமர் 
அளப்பரிய பதக்கமல ...... மருள்வாயே 
கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு 
கணத்திலவர் நிணத்தகுடல் ...... கதிர்வேலாற் 
கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை 
யளித்திடரை யறுத்தருளு ...... மயில்வீரா 
செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி
சினத்தினொடு பறித்தமர்செய் ...... பெருகானிற் 
செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது 
சிமிழ்த்தனமு னுறத்தழுவு ...... பெருமாளே. 

பாடல் 1153

தனதனன தனதான தானான தானான 
தனதனன தனதான தானான தானான 
தனதனன தனதான தானான தானான ...... தனதான 

குனகியொரு மயில்போல வாராம னோலீலை 
விளையவினை நினையாம லேயேகி மீளாத 
கொடியமன தநியாய மாபாத காபோதி ...... யெனஆசைக் 
கொளுவ அதில் மயலாகி வீறொடு போய்நீள 
மலரமளி தனிலேறி யாமாறு போமாறு 
குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ...... முநல்முழ்கி 
மனமுருக மதராஜ கோலாடு மாபூசல் 
விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள 
மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி ...... யநுராக 
வகைவகையி லதிமோக வாராழி யூடான 
பொருளளவ தளவாக யாரோடு மாலான 
வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற ...... அருள்வாயே 
எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி 
லெனவிரகு குலையாத மாதாவு நேரோத 
இசையுமொழி தவறாம லேயேகி மாமாது ...... மிளையோனும் 
இனிமையொடு வருமாய மாரீச மானாவி
குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள 
இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி ...... யுயிர்சீறி 
அநுமனொடு கவிகூட வாராக நீராழி 
யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி 
அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப ...... நிருதேசன் 
அருணமணி திகழ்பார வீராக ராமோலி 
யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி 
அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ...... பெருமாளே. 

பாடல் 1154

தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத் 
தனதன தனனத் தனனத் ...... தனதான 

கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக் 
கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக் 
குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக் 
குயில்மொழி பதறப் பதறப் ...... ப்ரியமோகக் 
கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக் 
கரமொடு தழுவித் தழுவிச் ...... சிலநாளிற் 
கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக் 
கடியொரு செயலுற் றுலகிற் ...... றிரிவேனோ 
சலநிதி சுவறச் சவறத் திசைநிலை பெயரப் பெயரத் 
தடவரை பிதிரப் பிதிரத் ...... திடமேருத் 
தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச் 
சமனுடல் கிழியக் கிழியப் ...... பொருசூரன் 
பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப் 
பிறநரிதொடரத் தொடரத் ...... திரள்கூகை 
பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப் 
ப்ரபையயில் தொடுநற் குமரப் ...... பெருமாளே. 

பாடல் 1155

தானனா தனன தத்த, தானனா தனன தத்த 
தானனா தனன தத்த ...... தனதான 

கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர் 
கோதுசே ரிழிகு லத்தர் ...... குலமேன்மை 
கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர 
கோவுநா னென இசைப்பர் ...... மிடியூடே 
ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர் 
ஆசுசேர் கலியு கத்தி ...... னெறியீதே 
ஆயுநூ லறிவு கெட்ட நானும் வேறல அதற்கு 
ளாகையா லவைய டக்க ...... வுரையீதே 
ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர 
ஈசன்மேல் வெயிலெ றிக்க ...... மதிவேணி 
ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில் 
ஏறியே யினிதி ருக்க ...... வருவோனே 
வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து 
வேதனா ரையும் விடுத்து ...... முடிசூடி 
வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த 
வீறுசேர் சிலை யெடுத்த ...... பெருமாளே. 

பாடல் 1156

தந்தனந் தனந்த தந்த,  தந்தனந் தனந்த தந்த 
தந்தனந் தனந்த தந்த ...... தனதான 

சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை 
சந்திரந் ததும்ப சைந்து ...... தெருவூடே 
சங்கினங் குலங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு 
சந்தனந் துவண்ட சைந்து ...... வருமாபோல் 
கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங்க இன்சு கங்கள் 
கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன் ...... மடவார்தோள் 
கொங்கைபைங் கரம் புணர்ந்த ழிந்துணங் கலுந்த விர்ந்து 
கொஞ்சுநின் சரண்க ளண்ட ...... அருள்தாராய் 
தந்தனந் தசெஞ்சி லம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச 
தண்டையம்ப தம்பு லம்ப ...... வருவோனே 
சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க 
சண்பகம் புனங்கு றம்பொன் ...... அணைமார்பா 
வந்தநஞ் சுகந் தமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி 
மந்தரம் பொதிந்த கொங்கை ...... யுமையீனும் 
மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந் தசிந்தை யன்பர் 
மங்கலின் றுளம்பு குந்த ...... பெருமாளே. 

பாடல் 1157

ராகம் – குந்தலவராளி, தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2 

தனன தனதனன தான தானன 
தனதனன தான தானன 
தனன தனதனன தான தானன தந்ததான 

சுருதி வெகுமுகபு ராண கோடிகள் 
சரியை கிரியைமக யோக மோகிகள் 
துரித பரசமய பேத வாதிகள் ...... என்றுமோடித் 
தொடர வுணரஅரிதாய தூரிய 
பொருளை யணுகியநு போக மானவை 
தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய ...... நின்ப்ரகாசங் 
கருதி யுருகியவி ரோதி யாயருள் 
பெருகு பரமசுக மாம கோததி 
கருணை யடியரொடு கூடியாடிம ...... கிழ்ந்துநீபக் 
கனக மணிவயிர நூபு ராரிய 
கிரண சரண அபி ராம கோமள 
கமல யுகளமற வாது பாடநி ...... னைந்திடாதோ 
மருது நெறுநெறென மோதி வேரோடு 
கருது மலகைமுலை கோதி வீதியில் 
மதுகை யொடுதறுக ணானை வீரிட ...... வென்றுதாளால் 
வலிய சகடிலறி மாய மாய்மடி 
படிய நடைபழகி யாயர் பாடியில் 
வளரு முகில்மருக வேல்வி நோதசி ...... கண்டிவீரா 
விருதர் நிருதர்குல சேனை சாடிய 
விஜய கடதடக போல வாரண 
விபுதை புளகதன பார பூஷண ...... அங்கிராத 
விமலை நகிலருண வாகு பூதர 
விபுத கடககிரிமேரு பூதர 
விகட சமரசத கோடி வானவர் ...... தம்பிரானே. 

பாடல் 1158

தத்தத் தனதன தத்தன தனதன 
தத்தத் தனதன தத்தன தனதன 
தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத் 

சுற்றத் தவர்களு மக்களு மிதமுள 
சொற்குற் றரிவையும் விட்டது சலமிது 
சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ...... மெனமாழ்கித் 
துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல் 
சுட்டக் குடமொடு சுட்டெரிகனலொடு 
தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிண்முடச் 
சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல் 
சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது 
தப்பிற் றவறுறு மத்திப நடையென ...... உரையாடிச் 
சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை 
தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி 
தத்தச் சடம்விடு மப்பொழு திருசர ...... ணருள்வாயே 
சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல் 
சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில் 
செற்கட் சிவகதி யுத்தமி களிதர ...... முதுபேய்கள் 
திக்குச் செககெண தித்தரிதிகுதிகு 
செச்செச் செணக்ருத டொட்டரிசெணக்ருத 
டெட்டெட் டுடுடுடு தத்தரிதரியென ...... நடமாடுங் 
கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள் 
குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய் 
கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ...... களமீதே 
குப்புற் றுடனெழு சச்சரிமுழவியல் 
கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர் 
கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே. 

பாடல் 1159

தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன 
தந்த தத்தன தானாதன ...... தனதான 

செங்கை னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள் 
தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச் 
சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரியத்தினி லோடாசில 
திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின் 
றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன 
மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத 
அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந 
லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ 
கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி 
கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது 
கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர 
குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச் 
சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர் 
தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன் 
தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர 
சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே. 

பாடல் 1160

தானதனத் தானதனத் தானதனத் தானதனத் 
தானதனத் தானதனத் ...... தனதான 

சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித் 
தூறுசிவப் பேறுவிழிக் ...... கணையாலே 
தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத் 
தேறலெனக் கூறுமொழிச் ...... செயலாலே 
ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத் 
தாலுமிதத் தாலும்வளைப் ...... பிடுவோர்மேல் 
ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற் 
றாளிணையைச் சேரஎனக் ...... கருள்வாயே 
காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக் 
காயஎரித் தேவிதியிற் ...... றலையூடே 
காசியினிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத் 
தேறிவகித் தூருதிரைக் ...... கடல்மீதில் 
ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற் 
றாடியிடத் தேயுமைபெற் ...... றருள்வாழ்வே 
ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட் 
டாதுலருக் காறுமுகப் ...... பெருமாளே. 

பாடல் 1161

தத்தத்தத் தத்தத் தத்தன 
தத்தத்தத் தத்தத் தத்தன 
தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான 

சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு 
ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு 
சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் ...... முலைமீதே 
சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர் 
முற்றிக்குத் தத்தைக் கொப்பென 
சொற்பித்துக் கற்பிற் செப்பிய ...... துயராலே 
சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு 
வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ் 
தித்திப்பிற் கொத்துப் பித்துயர் ...... கொடுநாயேன் 
திக்குக்கெட் டொட்டுச் சிட்டென 
பட்டத்துற புத்திக் கட்டற 
செப்பத்துற் பற்றற் கற்புத ...... மருள்வாயே 
தக்குத்தக் குக்குக் குக்குட 
தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென 
தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ ...... விருதோதை 
தத்தித்தித் தித்தித் தித்தென 
தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை 
சத்திக்கொற் றத்திற் குத்திய ...... முருகோனே 
துக்கித்திட் டத்தித் துக்கக 
நெக்குப்பட டெக்கித் துட்டறு 
சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு ...... ளருள்வேலா 
துற்றப்பொற் பச்சைக் கட்கல 
பச்சித்ரப் பக்ஷிக் கொற்றவ 
சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய ...... பெருமாளே. 

பாடல் 1162

தானான தானன தானன தானன 
தானான தானன தானன தானன 
தானான தானன தானன தானன ...... தனதான 

ஞானாவி பூஷணி காரணி காரணி 
காமாவி மோகினி வாகினி யாமளை 
மாமாயி பார்வதி தேவிகு ணாதரி...... உமையாள்தன் 
நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக 
வேதாக மேயருள் தேவர்கள் தேவந 
லீசாச டாபர மேசர்சர் வேசுரி...... முருகோனே 
தேனார்மொ ழீவளி நாயகி நாயக 
வானாடு ளோர்தொழு மாமயில் வாகன 
சேணாளு மானின்ம னோகர மாகிய ...... மணவாளா 
சீர்பாத சேகர னாகவு நாயினன் 
மோகாவி காரவி டாய்கெட ஓடவெ 
சீராக வேகலை யாலுனை ஓதவும் ...... அருள்வாயே 
பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை 
சூராடி யேகழு மீதினி லேறிட 
கூனான மீனனி டேறிட கூடலில் ...... வருவோனே 
பேராண்மை யாளனி சாசரர் கோனிரு 
கூறாக வாளிதொ டூரகு நாயகன் 
பூவாய னாரணன் மாயனி ராகவன் ...... மருகோனே 
வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ 
சேணாடு ளோரவர் வீடதி டேறிட 
கோனாக வேவரு நாதகு ரூபர ...... குமரேசா 
வாசாம கோசர மாகிய வாசக 
தேசாதி யோரவர் பாதம தேதொழ 
பாசாவி நாசக னாகவு மேவிய ...... பெருமாளே. 

பாடல் 1163

ராகம் – அமிர்தவர்ஷணி, தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35) 
(எடுப்பு - /4/4/4 0) 
நடை - தகதகிட 

தனதனன தனதனன தந்தனந் தந்தனந் 
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் 
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான 

தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந் 
துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் 
தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் ...... பதுவாயுந் 
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும் 
பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் 
தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ...... வசமாகித் 
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின் 
கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் 
சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ...... அயர்வாகிச் 
செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன் 
சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ் 
செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ...... கழல்தாராய் 
செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங் 
கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந் 
திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ...... மகிழ்வாகிச் 
சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன் 
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் 
டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ...... தவமோதச் 
சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ் 
சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன் 
சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் ...... கதிர்வேலா 
சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந் 
தெரிவரிய முடியினர வங்ளுந் திங்களுஞ் 
சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் ...... பெருமாளே. 

பாடல் 1164

தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் 
தனந்தத்தத் தனந்தத்தத் ...... தனதான 

தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற் 
சதங்கைக்கற் சிலம்பொத்திக் ...... கையில்வீணை 
ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற் 
சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் ...... சரவேலால் 
தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத் 
தினந்தெட்டிக் கடன்பற்றிக் ...... கொளுமாதர் 
சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச் 
சிவம்பெற்றுத் தவம்பற்றக் ...... கழல்தாராய் 
தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் 
டடண்டட்டட் டிமிண்டுட்டுட் ...... டியல்தாளந் 
தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத் 
தகண்டத்தர்க் குடன்பட்டுற் ...... றசுராரைச் 
சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச் 
சிரந்தத்தப் பிளந்துட்கக் ...... கிரிதூளாச் 
செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச் 
செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் ...... பெருமாளே. 

பாடல் 1165

தனனதன தான தான தனனதன தான தான 
தனனதன தான தான ...... தனதான 

நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு 
நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி 
நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி 
நவசிவய மாமை யாகி ...... எழுதான 
அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன் 
அறிவிலறி வான பூர ...... ணமுமாகும் 
அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி 
மருவுமவ தான போதம் ...... அருள்வாயே 
குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
குறையகல வேலை மீது ...... தனியூருங் 
குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு 
குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி 
அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி 
அரியமண மேசெய் தேக ...... வலைதேடி 
அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும் 
அசபைசெகர் சோதி நாத ...... பெருமாளே. 

பாடல் 1166

ராகம் – நாதநாமக்ரியா, தாளம் - அங்கதாளம் (7 1/2) 
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2 

தனதன தத்த தந்த தானத்த 
தனதன தத்த தந்த தானத்த 
தனதன தத்த தந்த தானத்த ...... தனதான 

நரையொடு பற்க ழன்று தோல்வற்றி 
நடையற மெத்த நொந்து காலெய்த்து 
நயனமி ருட்டி நின்று கோலுற்று ...... நடைதோயா 
நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து 
நமதென மெத்த வந்த வாழ்வுற்று 
நடலைப டுத்து மிந்த மாயத்தை ...... நகையாதே 
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற 
ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு 
மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் ...... வினையோடு 
மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு 
மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன் 
விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு ...... வினவாதோ 
உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு 
மொளிபெற நற்ப தங்கள் போதித்து 
மொருபுடை பச்சை நங்கை யோடுற்று ...... முலகூடே 
உறுபலி பிச்சை கொண்டு போயுற்று 
முவரிவி டத்தை யுண்டு சாதித்து 
முலவிய முப்பு ரங்கள் வேவித்து ...... முறநாகம் 
அரையொடு கட்டி யந்த மாய்வைத்து 
மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க 
அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து ...... மரவோடே 
அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த 
அரியய னித்தம் வந்து பூசிக்கும் 
அரநிம லர்க்கு நன்றி போதித்த ...... பெருமாளே. 

பாடல் 1167

ராகம் – காபி, தாளம் - சதுஸ்ர ரூபகம் (6) 

தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த 
தனந்த தனனந் தனந்த ...... தனதான 

நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி 
நிறைந்த வயிறுஞ் சரிந்து ...... தடியூணி 
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு 
நினைந்த மதியுங் கலங்கி ...... மனையாள்கண் 
டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து 
உறைந்த உயிருங் கழன்று ...... விடுநாள்முன் 
உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து 
ஒடுங்கி நினையும் பணிந்து ...... மகிழ்வேனோ 
திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி 
திரண்ட சதியும் புரிந்து ...... முதுசூரன் 
சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து 
சினங்க ழுகொடும் பெருங்கு ...... ருதிமூழ்க
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட 
அடர்ந்த அயில்முன் துரந்து ...... பொருவேளே 
அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி 
அணங்கை மணமுன் புணர்ந்த ...... பெருமாளே. 

பாடல் 1168

ராகம் – மத்யமாவதி, தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2 

தனன தாத்தன தானா தானன 
தனன தாத்தன தானா தானன 
தனன தாத்தன தானா தானன ...... தனதான 

நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய 
சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய 
நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான 
நெடிய வேற்படை யானே ஜேஜெய 
எனஇ ராப்பகல் தானே நான்மிக 
நினது தாட்டொழு மாறே தானினி ...... யுடனேதான் 
தரையி னாழ்த்திரை யேழே போலெழு 
பிறவி மாக்கட லூடே நானுறு 
சவலை தீர்த்துன தாளே சூடியு ...... னடியார்வாழ் 
சபையி னேற்றியின் ஞானா போதமு 
மருளி யாட்கொளு மாறே தானது 
தமிய னேற்குமு னேநீ மேவுவ ...... தொருநாளே 
தருவி னாட்டர சாள்வான் வேணுவி 
னுருவ மாய்ப்பல நாளே தானுறு 
தவசி னாற்சிவ னீபோய் வானவர் ...... சிறைதீரச் 
சகல லோக்கிய மேதா னாளுறு 
மசுர பார்த்திப னோடே சேயவர் 
தமரை வேற்கொடு நீறா யேபட ...... விழமோதென் 
றருள ஏற்றம ரோடே போயவ 
ருறையு மாக்கிரியோடே தானையு 
மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ...... ரடலாகி 
அமரில் வீட்டியும் வானோர் தானுறு 
சிறையை மீட்டர னார்பால் மேவிய 
அதிப ராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே. 

பாடல் 1169

ராகம் – கேதாரம், தாளம் - ஆதி - திஸ்ர நடை (2 களை) (24) 

தான தான தான தந்த தான தான தான தந்த 
தான தான தான தந்த ...... தனதான 

ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து 
ஆழி வேலை போன்மு ழங்கி ...... யடர்வார்கள் 
ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து 
ஆலைமீதி லேக ரும்பு ...... எனவேதான் 
வீர மான சூரிகொண்டு நேரை நேரை யேபி ளந்து 
வீசு வார்கள் கூகு வென்று ...... அழுபோது 
வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து 
மேலை வீழ்வ ரீது கண்டு ...... வருவாயே 
நாரி வீரி சூரி யம்பை வேத வேத மேபு கழ்ந்த 
நாதர் பாலி லேயி ருந்த ...... மகமாயி 
நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்து 
நாளு நாளு மேபு கன்ற ...... வரைமாது 
நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்த 
நீப மாலை யேபு னைந்த ...... குமரேசா 
நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட 
நீத னான தோர்கு ழந்தை ...... பெருமாளே. 

பாடல் 1170

ராகம் - நவரஸ கண்டை, தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) 

தான தந்த தான தான தான தந்த தான தான 
தான தந்த தான தான ...... தனதான 

நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு 
நீளு மங்க மாகி மாய ...... வுயிரூறி
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி 
நீதி யொன்று பால னாகி ...... யழிவாய்வந் 
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத 
ரோடு சிந்தை வேடை கூர ...... உறவாகி 
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச 
ஊனு டம்பு மாயு மாய ...... மொழியாதோ 
சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது 
தோகை யின்கண் மேவி வேலை ...... விடும்வீரா 
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு 
தோகை பங்க ரோடு சூது ...... மொழிவோனே 
பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள் 
பாடல் கண்டு ஏகு மாலின் ...... மருகோனே 
பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை 
பாடு மன்பர் வாழ்வ தான ...... பெருமாளே. 

பாடல் 1171

தனதத்தத் தத்தத் தனதன 
தனதத்தத் தத்தத் தனதன 
தனதத்தத் தத்தத் தனதன ...... தனதான 

பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு 
நவரத்நப் பத்தித் தொடைநக 
நுதிபட்டிட் டற்றுச் சிதறிட ....... இதழூறல்

பருகித்தித் திக்கப் படுமொழி 
பதறக்கைப் பத்மத் தொளிவளை 
வதறிச்சத் திக்கப் புளகித ...... தனபாரம் 
அகலத்திற் றைக்கப் பரிமள 
அமளிக்குட் கிக்கிச் சிறுகென 
இறுகக்கைப் பற்றித் தழுவிய ...... அநுராக 
அவசத்திற் சித்தத் தறிவையு 
மிகவைத்துப் பொற்றித் தெரிவையர் 
வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு ...... துணர்வேனோ 
இகல்வெற்றிச் சத்திக் கிரணமு 
முரணிர்த்தப் பச்சைப் புரவியு 
மிரவிக்கைக் குக்டத் துவசமு ...... மறமாதும் 
இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு 
கவிமெத்தச் செப்பிப் பழுதற 
எழுதிக்கற் பித்துத் திரிபவர் ...... பெருவாழ்வே 
புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு 
கலகச்செற் றச்சட் சமயிகள் 
புகலற்குப் பற்றற் கரியதொ ...... ருபதேசப் 
பொருளைப்புட் பித்துக் குருபர 
னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி 
புனையப்பர்க் கொப்பித் தருளிய ...... பெருமாளே. 

பாடல் 1172

தத்தத்தன தத்தத் தனதன 
தத்தத்தன தத்தத் தனதன 
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான 

பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
பட்டப்புள கச்செப் பிளமுலை 
பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ...... ருயர்தாளப் 
பத்மத்திய ரற்புக் கடுகடு 
கட்சத்தியர் மெத்தத் திரவிய 
பட்சத்திய ரிக்குச் சிலையுரு ...... விலிசேருஞ் 
சித்தத்தரு ணர்க்குக் கனியத 
ரப்புத்தமு தத்தைத் தருமவர் 
சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை ...... நுதலார்தந் 
தெட்டிற்படு கட்டக் கனவிய 
பட்சத்தரு ளற்றுற் றுனதடி 
சிக்கிட்டிடை புக்கிட் டலைவது ...... தவிராதோ 
மத்தப்பிர மத்தக் கயமுக 
னைக்குத்திமி தித்துக் கழுதுகள் 
மட்டிட்டஇ ரத்தக் குருதியில் ...... விளையாட 
மற்றைப் பதினெட்டுக் கணவகை 
சத்திக்கந டிக்கப் பலபல 
வர்க்கத்தலை தத்தப் பொருபடை ...... யுடையோனே 
முத்திப்பர மத்தைக் கருதிய 
சித்தத்தினில் முற்றத் தவமுனி 
முற்பட்டுழை பெற்றுத் தருகுற ...... மகள்மேல்மால் 
முற்றித்திரிவெற்றிக் குருபர 
முற்பட்டமு ரட்டுப் புலவனை 
முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ...... பெறுமாளே. 

பாடல் 1173

தனதனன தந்ததன தானத் தாத்தன 
தனதனன தந்ததன தானத் தாத்தன 
தனதனன தந்ததன தானத் தாத்தன ...... தனதான 

பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள் 
அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள் 
பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள் ...... கொடிதாய 
பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி 
தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள் 
பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ...... ஒருகாம 
விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில் 
ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ 
விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய ...... தமிழ்நூலின் 
விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள் 
முலைகளில்வி ழுந்துபரி தாபத் தாற்றினில் 
விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது ...... மொருநாளே 
உரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய 
சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி 
யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் ...... உறிதாவும் 
ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல 
மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்ந்திடும் 
உரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனு ...... மதிகோபக் 
கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி
கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை 
கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி ...... பிறியாத 
கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர் 
கரவடக்ர வுஞ்சகிரிசாயத் தோற்றெழு 
கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய ...... பெருமாளே. 

பாடல் 1174

தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த 
தனதன தானத் தனந்த ...... தனதான 

பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து 
பலபல யோகத் திருந்து ...... மதராசன் 
பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து 
பரிதவி யாமெத்த நொந்து ...... மயல்கூர 
அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி 
யவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்நின் 
றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற 
னருள்வச மோஇப்ர மந்தெ ...... ரிகிலேனே 
எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை 
யெனவொரு ஞானக் குருந்த ...... ருளமேவும் 
இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து 
இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை 
பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த 
புளகப டீரக் குரும்பை ...... யுடன்மேவும் 
புயல்கரிவாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து 
புனமிசை யோடிப் புகுந்த ...... பெருமாளே. 

பாடல் 1175

ராகம் – ஹரிகாம்போதி, தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 

தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன 
தானத்தத் தனான தானன ...... தந்ததான 

பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள் 
பாஷிக்கத் தகாது பாதக ...... பஞ்சபூத 
பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை 
பாவிக்கப் பெறாது வாதனை ...... நெஞ்சமான 
ஏணிக்கெட் லொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி 
யேறிபபற் றொணாது நாடினர் ...... தங்களாலும் 
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி 
யேறச்செச் சைநாறு தாளைவ ...... ணங்குவேனோ 
ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன் 
ஆபத்தைக் கெடாநி சாசரர் ...... தம்ப்ரகாசம் 
ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர 
ஆழிச்சக் ரவாள மாள்தரும் ...... எம்பிரானே 
மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர 
வாசப்பத் மபாத சேகர ...... சம்புவேதா 
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல் 
வாசிப்பித் ததேசி காசுரர் ...... தம்பிரானே. 

பாடல் 1176

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த 
தானன தனத்தத் தாத்த ...... தனதான 

பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி 
பாயலி லிருத்திக் காட்டி ...... யநுராகம் 
பாகிதழ் கொடுத்துக்காட்டி நூல்களை விரித்துக்காட்டி 
பார்வைகள் புரட்டிக் காட்டி ...... யுறவாகி 
மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி 
மேல்விழு நலத்தைக் காட்டு ...... மடவார்பால் 
மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு 
மேன்மையை யெனக்குக் காட்டி ...... யருள்வாயே 
காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி 
காரணம் விளைத்துக்காட்டி ...... யொருங்காலங் 
கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி 
காமனை யெரித்துக் காட்டி ...... தருபாலா 
மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில் 
வாலிப மிளைத்துக்காட்டி ...... அயர்வாகி 
மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு 
வாழ்வுறு சமத்தைக்காட்டு ...... பெருமாளே. 

பாடல் 1177

ராகம் - மலய மாருதம், தாளம் - அங்கதாளம் (7 1/2) 
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தானன தந்தன தந்தன 
தனன தானன தந்தன தந்தன 
தனன தானன தந்தன தந்தன ...... தனதான 

புகரில் சேவல தந்துர சங்க்ரம 
நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா 
புனித பூசுர ருஞ்சுர ரும்பணி 
புயச பூதர என்றிரு கண்புனல் 
பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி 
அகில பூதவு டம்புமு டம்பினில் 
மருவு மாருயி ருங்கர ணங்களு 
மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே 
அகில வாதிக ளுஞ்சம யங்களும் 
அடைய ஆமென அன்றென நின்றதை 
யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே 
மகர கேதன முந்திகழ் செந்தமிழ் 
மலய மாருத மும்பல வெம்பரி
மளசி லீமுக மும்பல மஞ்சரி...... வெறியாடும் 
மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர 
மதுர கார்முக மும்பொர வந்தெழு 
மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால 
முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு 
முதுப கீரதி யும்புனை யுஞ்சடை 
முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி 
முகர நூபுர பங்கய சங்கரி
கிரிகு மாரித்ரியம்பகி தந்தருள் 
முருக னேசுர குஞ்சரிரஞ்சித ...... பெருமாளே. 

பாடல் 1178

தனனத்த தனத்த தனத்தன 
தனனத்த தனத்த தனத்தன 
தனனத்த தனத்த தனத்தன ...... தனதான 

புருவத்தை நெறித்து விழிக்கயல் 
பயிலிட்டு வெருட்டி மதித்திரு 
புதுவட்டை மினுக்கி யளிக்குல ...... மிசைபாடும் 
புயல்சற்று விரித்து நிரைத்தொளி 
வளையிட்ட கரத்தை யசைத்தகில் 
புனைமெத்தை படுத்த பளிக்கறை ...... தனிலேறிச் 
சரசத்தை விளைத்து முலைக்கிரி
புளகிக்க அணைத்து நகக்குறி 
தனைவைத்து முகத்தை முகத்துட ...... னுறமேவித் 
தணிவித்தி ரதத்த தரத்துமி 
ழமுதத்தை யளித்து வுருக்கிகள் 
தருபித்தை யகற்றி யுனைத்தொழ ...... முயல்வேனோ 
பரதத்தை யடக்கி நடிப்பவர் 
த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர் 
பரவைக்குள் விடத்தை மிடற்றிடு ...... பவர்தேர்கப் 
பரையுற்ற கரத்தர் மிகப்பகி 
ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர் 
பரவத்தர் பொருப்பி லிருப்பவ ...... ருமையாளர் 
சுரர் சுத்தர் மனத்துறை வித்தகர் 
பணிபத்தர் பவத்தை யறுப்பவர் 
சுடலைப்பொடி யைப்பரிசிப்பவர் ...... விடையேறுந் 
துணையொத்த பதத்த ரெதிர்த்திடு 
மதனைக்கடி முத்தர் கருத்தமர் 
தொலைவற்ற க்ருபைக்கு ளுதித்தருள் ...... பெருமாளே. 

பாடல் 1179

ராகம் – ஷண்முகப்ரியா, தாளம் - சருஸ்ர ரூபகம் (6) 

தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன 
தனத்தந் தான தனதன ...... தனதான 

புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை 
புலக்கண் கூடு மதுதனை ...... அறியாதே 
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை 
புழுக்கண் பாவ மதுகொளல் ...... பிழையாதே 
கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி 
களைக்கும் பாவ சுழல்படு ...... மடிநாயேன் 
கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை 
கணக்குண் டாதல் திருவுள ...... மறியாதோ 
சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ 
சிறக்குஞ் சாமி சொருபமி ...... தொளிகாணச் 
செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை 
தெறிக்குஞ் சாமி முனிவர்க ...... ளிடமேவுந் 
தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை 
தரிக்குஞ் சாமி யசுரர்கள் ...... பொடியாகச் 
சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண 
தகப்பன் சாமி யெனவரு ...... பெருமாளே. 

பாடல் 1180

தானன தந்தன தந்த தந்தன 
தானன தந்தன தந்த தந்தன 
தானன தந்தன தந்த தந்தன ...... தனதான 

பூசல்த ருங்கய லும்பொ ருந்திய 
வாசந றுங்குழ லுந்து லங்கிய 
பூரண கும்பமெ னுந்த னங்களு ...... மடமாதர் 
போகம டங்கலை யும்பு ணர்ந்தநு 
ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை 
போயக லும்படி யொன்றை யன்புற ...... நினையாதே 
ஆசையெ னும்படி யுந்த னங்களு 
மோகைந டந்திட வுந்தி னங்களும் 
ஆருட னும்பகை கொண்டு நின்றுற ...... நடமாடி 
ஆடிய பம்பர முன்சு ழன்றெதி 
ரோடிவி ழும்படி கண்ட தொன்றுற 
ஆவிய கன்றுவி டும்ப யங்கெட ...... அருள்வாயே 
வாசவ னன்புவி ளங்க நின்றசு 
ரேசர்கு லங்கள டங்க லுங்கெட 
வானவர் நின்றுதி யங்கு கின்றதொர் ...... குறைதீர 
வாரிய திர்ந்துப யந்து நின்றிட 
மேருஅ டங்கஇ டிந்து சென்றிட 
வாகைபு னைந்தொரு வென்றி கொண்டரு ...... ளிளையோனே 
வீசிய தென்றலொ டந்தி யும்பகை 
யாகமு யங்கஅ நங்க னும்பொர 
வேடையெ னும்படி சிந்தை நொந்திட ...... அடைவாக 
வேடர்செ ழும்புன வஞ்சி யஞ்சன 
வேலினு ளங்கள்க லங்கி யின்புற 
வேளையெ னும்படி சென்றி றைஞ்சிய ...... பெருமாளே. 

பாடல் 1181

தான தந்தன தானா தானன 
தான தந்தன தானா தானன 
தான தந்தன தானா தானன ...... தனதான 

பூசல் வந்திரு தோடார் காதொடு 
மோதி டுங்கயல் மானார் மானமில் 
போக மங்கையர் கோடா கோடிய ...... மனதானார் 
பூர குங்கும தூளா மோதப 
டீர சண்பக மாலா லாளித 
பூத ரங்களின் மீதே மூழ்கிய ...... அநுராக 
ஆசை யென்கிற பாரா வாரமு 
மேறு கின்றில னானா பேதஅ 
நேக தந்த்ரக்ரி யாவே தாகம ...... கலையாய 
ஆழி யுங்கரை காணே னூபுர 
பாத பங்கய மோதே னேசில 
னாயி னுங்குரு நாதா நீயருள் ...... புரிவாயே 
வாச வன்பதி பாழா காமல்நி 
சாச ரன்குலம் வாழா தேயடி 
மாள வன்கிரி  கூறாய் நீறெழ ...... நெடுநேமி 
மாத வன்தரு வேதா வோடலை 
மோது தெண்கடல் கோகோ கோவென 
மாமு றிந்திட நீள்வே லேவிய ....... இளையோனே
வீசு தென்றலும் வேள்பூ வாளியு 
மீறு கின்றமை யாமோ காமவி 
டாய்கெ டும்படி காவா யாவியை ...... யெனஏனல் 
மீது சென்றுற வாடா வேடுவர் 
பேதை கொங்கையின் மீதே மால்கொடு 
வேடை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே. 

பாடல் 1182

தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன 
தந்தந் தனன தாத்தன ...... தனதான 

பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய 
பெங்கும் புதிய நேத்திர ...... வலைவீசிப் 
பொன்கண் டிளகு கூத்திகள் பூன்கண் கலவி வேட்டுயிர் 
பூண்கொண் டுருகி யாட்படு ...... மயல்தீரக் 
கொங்கின் புசக கோத்திரிபங்கங் களையு மாய்க்குடி 
கொங்கின் குவளை பூக்கிற ...... கிரிசோண 
குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய 
குன்றம் பிறவும் வாழ்த்துவ ...... தொருநாளே 
எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய 
வெஞ்சண் டதனு வேட்டுவர் ...... சரணார 
விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை 
மென்குங் குமகு யாத்திரி...... பிரியாதே 
எங்குங் கலுமி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட 
எங்குங் குருவி யோச்சிய ...... திருமானை 
என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ 
டென்றும் பொழுது போக்கிய ...... பெருமாளே. 

பாடல் 1183

தனன தனதன தனத்தத் தாத்தன 
தனன தனதன தனத்தத் தாத்தன 
தனன தனதன தனத்தத் தாத்தன ...... தனதான 

பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர் 
புளக தனவட மசைத்துக் காட்டுவர் 
புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர் 
புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர் 
பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர் 
புதிய பரிபுர நடித்துக் காட்டுவ ...... ரிளைஞோரை 
உருக அணைதனி லணைத்துக் காட்டுவர் 
உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ 
உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் ...... பொடிமாயம் 
உதர மெரிதர மருத்திட் டாட்டிகள் 
உயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவர் 
உறவு கலவியை விடுத்திட் டாட்கொள ...... நினையாதோ 
மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி
மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர் 
மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற ...... அழுதூறும் 
வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென 
அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன் 
மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் ...... மருகோனே 
விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை 
விகட தடமுடி பறித்துத் தோட்களை 
விழவு முறியவு மடித்துத் தாக்கிய ...... அயில்வீரா 
வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட 
வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய 
விபுத மலரடி விரித்துப் போற்றினர் ...... பெருமாளே.