பொன் ரதம் முன்னாலே

தன்னைப் பெற்ற தந்தைக்கு ரதம் சோடித்து சவ ஊர்வலம் செல்லுவதைக் குறிப்பிட்டு மகள் அழுகிறாள்.
சனிக்கிழமை ஊத்தும் தண்ணி
சாக்கடை போய்ப் பாயும்
சாக்கடை ஓரத்திலே
தங்கமல்லி பூத்திருக்கும்
தங்கமல்லி பூப்பறிச்சு
தங்கரதம் சோடிச்சா
தங்கரதம் முன்னாலே-நீர் பெத்த
பொன்னாளும் பின்னாலே
புதன் கிழமை ஊத்தும் தண்ணி
புழக்கடைக்குப் போய்ப் பாயும்
புழக்கடை ஓரத்திலே
பொன்னுமல்லி படர்ந்திருக்கும்
பொன்னுமல்லி பூப்பறிச்சு
பொன்னு ரதம் சோடிச்சா
பொன்னு ரதம் முன்னாலே-நீ பெத்த
பொண்ணாளும் பின்னாலே.
தந்தை மகளுக்குப் புத்தி சொல்ல வந்தார். அவள் அலட்சியமாக இருந்து விட்டாள். பின்னர் அவர் இறந்ததும், தனது அறியாமைக்கு வருந்துகிறாள்.
புத்தேரி ஐயாவே, புத்தியுள்ள ராசாவே,
பொட்டி வண்டி மேலேறி
புத்தி சொல்ல வந்தாயே, உன்
புத்தி சொன்ன கால்களுக்குப்
பூத்த மலரிசைத்து
பூசை செய்யாப் பாவியானேன்,
பூக்காத பூவாளோ
காஞ்சிபுரத்தய்யாவே
கருத்துள்ள ராசாவே
காரு வண்டி மேலேறி
கருத்தொரைக்க வந்தாயே
கருத்தொரைக்க வந்த உன்
கால்களில் மலரைக் கொட்டி
காலைப் பூசை செய்யாத
காய்க்காத காயானேன் !
சேகரித்தவர் : S.M. கார்க்கி்
இடம்: சிவகிரி,நெல்லை.
---------