பொருத்தமற்ற மாப்பிள்ளை

நல்ல உடல்நலமுள்ள உழைக்கும் வாலிபன் அவன். அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது. ஆனால் அவனுக்குச் சாய்ந்து உட்காரக் கூடச் சொந்த இடமில்லை. அவளுடைய பெற்றோர்கள் அவளை கொஞ்சம் பசையுள்ள குடும்பத்தில் ஒரு நோயாளிக்குக் கட்டிவைத்தார்கள். சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் வாலிபன், மணமான பெண்ணைக் கண்டான். அவள் நிலைக்கு வருந்தி அவன் பாடுகிறான்.
நெல்லுக்காகக் கொண்டையிலே
தேங்காத்தண்டி பூமுடிஞ்சு
படமெடுத்த நாகம் போல-என்னை
பாராமலே போற புள்ள !
அண்டினயே ஆலமரம்
அடுத்த பலா மரத்தே
புடிச்சயடி முருங்கைக் கொப்பை
பொல்லாத காலம் வந்து.
வட்டார வழக்கு : அண்டினயே-அருகில் வந்தாய் ; ஆலமரம் அடுத்த பலா மரத்தை-பலமுள்ள மரத்தைப் பிடிக்காமல் முருங்கக் கொம்பை பிடித்தாயே.
குறிப்பு : தன்னை, அவன் ஆலமரத்திற்கருகில் உள்ள பலா மரத்திற்கும், அவளுடைய கணவனை முருங்கைக் கொப்பிற்கும் ஒப்பிட்டுப் பேசுகிறான்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி
-----------------