பொருந்தா மணம்

bookmark

சொத்துரிமை சமுதாயத்தில் உறவுகளை நிர்ணயிப்பது வாரிசு உரிமை தான். திருமணமும் கூட மணமக்கள் பெறவிருக்கும் சொத்தைக் கருதியே நிர்ணயிக்கப்படும். இதனால் ஏற்படும் சில வினோதங்களைக் கீழே காண்போம். நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய பண்ணையாருக்கு மூன்று பெண்கள் பிறந்தனர். சொத்துக்கு ஆண் வாரிசு வேண்டுமென்று மனைவியின் தங்கையை மறுமணம் செய்து கொண்டார். அவள் இரண்டு பெண் மக்களை ஈன்றாள். ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தால் பெண்களே பிறக்கக் கூடும் என்று எண்ணி உறவில்லாத வேறு ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டான். அவளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. நான்காவது திருமணத்தைப் பற்றி பண்ணையார் எண்ணிக் கொண்டிருக்கும்போது முதல் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மூத்தவளின் மதிப்பு உயர்ந்தது. இளைய மனைவியர் சண்டை செய்து கொண்டு பிறந்த வீட்டுக்குப் போனார்கள். அடிக்கடி வந்து அமைதியைக் குலைத்து விட்டுப் போனார்கள்.

கோவில்பட்டி தாலுக்காவில் படித்த வாலிபர் ஒருவருக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் மூன்று பெண் குழந்தைகள். எல்லோருக்கும் சொத்து உண்டு. தங்களது ஒரே சகோதரனுக்கு எல்லாப் பெண்களையும் கொடுக்க முன்வந்தனர். அவர் மறுக்கவே மூத்த பெண்கள் மூவரையும் மணம் செய்து கொடுக்க முன் வந்தனர். படித்தவரும் முற்போக்கு கொள்கை உடையவருமான அவ்விளைஞர் சகோதரிகள் பகைமை கொள்வார் என்றெண்ணி நாற்பது வயது வரையும் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். சகோதரிகளின் பெண்கள் அனைவரும் மணம் செய்து கொடுக்கப்பட்ட பின்னர். அவர் உறவல்லாத ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டார்.

கிழவருக்குக் குமரியையும், குழந்தைக்குக் குமரியையும், மணம் செய்து வைப்பது சமீபகாலம் வரை வழக்கில் இருந்து வந்தது. தங்கையின் மகளை மணம் செய்து கொள்வது பரவலான வழக்கம். மகளின் மகளை மணம் செய்து கொள்வது ஆண்களுக்கு விலக்கப்பட்டதாக இருந்ததில்லை.

கீழ்வரும் பாடலில் காதலித்தவனை மணம் செய்து கொள்ள முடியாமல் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு பெண் மனம் குமுறி அழுவதைக் காணலாம்.

சோளச் சோறு திங்க மாட்டேன்
சொன்னபடி கேட்க மாட்டேன்
நரைச்ச கிழவங் கிட்ட
நானிருந்து வாழ மாட்டேன்
நாணலுத் தட்டை போல
நரைச்ச கிழவனுக்கோ
கோவப் பழம்போல
குமரி வந்து வாச்சானல்லே !
செம்புல சிலை எழுதி
சிவத்த பிள்ளை பேரெழுதி
வம்புல தாலி கட்டி
வாழுறது எந்த விதம்?
யானை அணைஞ்ச கையி
அருச் சுனரைத் தொட்ட கையி
பூனையை அணையச் சொல்லி
புள்ளி போட்டானே எந்தலையில்.

வட்டார வழக்கு : புள்ளி போட்டானே-விதித்தான் கடவுள்.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : கோவில்பட்டி.
----------