மடி ஏந்தி பொய்யானேன்

bookmark

கல்யாண மேடையிலே கணவரின் கையைப் பிடித்ததும், அப்பொழுது நடைபெற்ற விசேஷ சம்பவங்களும் இப்பொழுது நடைபெற்றது போல் தோன்றுகிறது. ஆனால் குறுகிய காலத்தில் அவள் கணவன் அற்பாயுளில் இறந்து போனான். தன்னுடைய கல்யாணத்தையே கனவு என்று எண்ணும்படி இறந்து போன தன் கணவனுடன் தான் மகிழ்ச்சியுடன் நெடுங்காலம் வாழாமல் தன் கனவுகளைப் பொய்யாக்கி விட்டு மறைந்த தன் கணவனை எண்ணிக் கதறுகிறாள்.

மண்ணைத் திரி திரிச்சி
மறு மண்ணை வில் வளச்சி
மாளிகை மேடையிலே-நான்
மடி ஏந்தி பொய்யானேன்
கல்லைத் திரி திரிச்சி
கருமணலை வில் வளச்சி
கல்யாண மேடையிலே-நான்
கை ஏந்தி பொய்யானேன்
கத்தரிக்காய் பூ பூக்கும்
கடலோரம் பிஞ்செறங்கும்
கணக்கு பிள்ளை தங்கச்சி-நான்
கை ஏந்தி பொய்யானேன்
மல்லாக் காய் பூ பூக்கும்
மலையோரம் பிஞ் செறங்கும்
மணியக்காரன் தங்கச்சி-நான்
மடி ஏந்திப் பொய்யானேன்

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------