மந்தையில் காதல்

bookmark

எருமைமாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அவன் தன் காதலியை அடிக்கடிச் சந்திப்பான். காளை மாடு மேய்க்கத் தொடங்கிய பின்,அவனை அடிக்கடி காண முடிவதில்லை. ஒரு வேளை பதவியுயர்ந்த நிலைமையை அவன் காட்டிக்கொள்கிறானோ? அவள் மரியாதையின்றி அவனைத் திட்டுகிறாள். அவன் பொறுமையாகக் கேலி செய்து,நாகரத்தின வளையல் செய்து போட்டு உன்னை சிறையெடுப்பேன் என்கிறான். காதலியின் கோபம் தணிந்து அவன்மீது அன்பு காட்டுகிறாள்.

பெண்: ஏலே ஏலே சின்னப்பய
எருமை மாடு மேச்ச பய
கழுதைப் புரண்டு போனியடா
ஆண்: நண்டுக்குழி மண்ணெடுத்து
நாகரெட்ண வளவி தொட்டு
பெண்டுகள் சிறையெடுக்க
பொறந்தோமே சிங்கக்குட்டி
பெண்: மந்தையிலே நிண்ணுல்ல
மயிருலர்த்தும் மச்சாவி
கதறிவரும் கருத்தக்காளை-இங்கே
கண்ணு விட்டாலாகாதோ?

வட்டார வழக்கு: மச்சாவி-மச்சான் ; கருத்தக்காளை-காதலன் மேய்க்கும் காளையையும் குறிக்கும், காதலனையும் குறிக்கும் ; கண்ணு விட்டால்-நோட்டம் விட்டால்.

சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
----------