மன்மதனைப் பிரமன் வேண்டல்

அப்படியே பிரமதேவன் மன்மதனை அழைத்து, "ஐயனே! கங்கையைச் சடையில் அணிந்த சிவபெருமான் மெளன நிலையை நீக்கி, மலைமகளாகிய பார்வதியைத் திருமணம் செய்யுமாறு நின் பூங்கணைகளைத் தூவு வாயாக, எங்கள் பொருட்டு இப்பொழுதே செல்க” என்று வேண்டினான்.
அது கேட்ட மன்மதன் சிவ நாமத்தைச் சொல்லி, செவிகளைப் பொத்திக்கொண்டு, "பிரமனே! திருமாலுடைய மார்பில் சிறப்பு வாய்ந்த திருமகளை நான் நிலையாக வைத்தேன்; நின்னுடைய அழகிய நாவில் கலைமகளை அமைத்தேன். இன்னும் மறைகளை யறிந்த வசிட்டன், மரீசி, குறுமுனியாகிய அகத்தியன், அத்திரி, கௌதமன், காசிபன் ஆகிய முனிவரது தவத்தின் வலிமையை நான் தொலைத்தேன். ஆயினும், கையிலே கனலும், நெற்றிக் கண்ணிலே நெருப்பும் உடைய ஈசன்மீது அம்பெய்யச் சென்றால், அடியேன் உய்யு மாறுண்டோ?” என்றான்.
இங்ஙனம் மறுத்துரைத்த மன்மதனை நோக்கி, "மாரனே! நீ சொல்லிய வெல்லாம் உண்மையே! ஆயினும், தம்மை அடைந்தவரது துன்பத்தைத் துடைக்கும் ஈசன் அருளால், இக் காரியம் உன்னால் முடியும். இது மற்றையோரால் ஆகாது. இதற்கு முதற் காரணம் நீயே! எல்லார் செயலும் ஈசன் செயலே. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. அவன் அருளின்றி எப்பொருளும் நில்லாது. உன் செயலும் அவன் செயலே. ஆதலால், இன்றே செல்க. அன்றியும், தாங்க முடியாத துன்பமுற்றோர், தமக்கு உதவி செய்யுமாறு இரந்து வேண்டினால், அதனைச் செய்யாது மறுத்து உயிர் வாழ்ந்திருத்தல் உயர்ந்தோர்க்குரிய தன்மை யாகுமோ? யாதேனும் ஓர் உதவியை யார்க்கேனும் தம்மால் இயன்றவரை அவர் கேளாமல் தாமே செய்தல் தலையாயவர் தன்மை; அவர் கேட்டபின் செய்தல் இடையாயவர் தன்மை; கேட்டும் முன்னே மறுத்துப் பின்னே செய்தல் கடையாயவர் தன்மையாகும். நாம் அனைவரும் வலிமை சான்ற சூரபதுமனது கொடுமையால் துன்புற்று வருந்துகின்றோம். அத் துன்பம் நீங்கும் வண்ணம் ஈசனிடம் ஒரு புதல்வனைப் பெற விரும்பி, உன் அரிய உதவியை வேண்டினோம்” என்று பிரமதேவன் உரைத்தான். அவ் வுரையை மறுக்க முடியாமல், மன்மதன் கரும்பு வில்லேந்தி மனையாளாகிய ரதியோடு கயிலை மலைக்குச் சென்றான்.
மன்மதன் மலர்க்கணை தொடுத்தல்
அங்கு எண்குணனாகிய ஈசனார் இருந்த வண்ணத்தைக் கண்டான், மன்மதன். ”ஐயோ! இவரைக் கண்டபோதே உள்ளம் கலங்குகின்றது. ஆவி அகத்ததோ புறத்ததோ அறியேன். என் மெல்லிய கணைகள் இப்பெருமானை வெல்லுமோ? அமரரும் பிரமனும் இவர் நிலையினை அறியார் பேர்லும் ஊழிக் காலத்தில் உலகமெல்லாம் சங்காரம் செய்யும் சிவபெருமான்மீது பூங்கணை தொடுத்து நான் போர் செய்வேனாம்! இது சிரிக்கத்தக்க செயல் அன்றோ?. ஆயினும், விதியின் செய்கை இது. யாவுரே விதியைக் கடக்கவல்லார்? படைக்கின்ற பிரமதேவனும் அதன் வலிமையைத் தடுக்கவல்லனோ?” என்று எண்ணினான்; செங்கையில் மழுவேந்திய சிவபெருமான்-மீது குறி வைப்பான்போல் நின்றான், கொடுந்தொழில் புரியும் மன்மதன், "அழியத் துணிந்தவர்க்கு அச்சம் உண்டோ? நினைத்தது முடிப்பேன்" என்று கூறி, ஐந்து மலரம்புகளை ஐயன்மீது எய்தான்.
மன்மதன் விட்ட மலர்க்கணை ஈசன் மேனியிற் பட்டது. அப்போது சிறிது கண் விழித்துப் பார்த்தார், ஈசன். அவர் நெற்றிக் கண்ணினின்று எழுந்த நெருப்பு காம வேளைச் சுட்டது. கயிலை மலை எங்கும் நெடும் புகை சூழ்ந்து நிறைந்தது. கண் அழலால் எரிந்த காமன், அங்கமெல்லாம் நீறாகி மண்ணில் விழுந்தான்; இறந்தொழிந்தான். ஈசனார், முன்போல் அமைதியுற்றார்.
ரதி புலம்பல்
காமன் எரிந்து விழக் கண்ட ரதிதேவி கலங்கிப் புலம்பலுற்றாள்; "திருமகள் மகனே! ஏழையேன் இன்னுயிரே! திருமால் மைந்தா! சம்பரனைப் பகைத்து வென்ற சதுரா! கரும்பு வில்லேந்திய பெருந்தோள் வீரா செம்பவளக் குன்றனைய சிவன் விழியால் வெந்து உடலம் அழிவுற்றாயே! இன்று விண்ணவர் கண் அடைத்ததா? பிரமதேவன் மனம் மகிழ்ந்ததா? சிரித்து முப்புரங்களையும் எரித்த சிவன்மீது போர் செய்யப் போதல் முறையோ என்று முன்னமே சொன்னேனே! அதைச் செவியில் ஏற்றாய் அல்லையே! வானவர் பணியை மேற்கொண்டாயே! நின் உடலம் பொடியாகிப் போயிற்றே! இக் கொடுமையைப் பார்த்தும் பிழைப்பார் உண்டோ? என்னுயிராகிய நீ இறந்த பின்னர், யான் தனியே இருத்தல் தகுமோ? நான் என்ன பாவம் செய்தேனோ? என் போன்ற பெண்களுக்கு என்ன துன்பம் செய்தேனோ? ஊழ்வினைப் பயனை யான் அறிவேனோ? அந்தோ! விதியே! இவ்வாறு வந்து முடிந்ததே கரும்பு வில்லுடைய காவலனே? யாரும் துணையற்ற என்னைக் காத்திட வாராயோ? நெற்றிக் கண்ணுடைய பெருமானை நோவதற்கு நீதியுண்டோ? ஐயோ! பொன் மாலை அணிந்த முடி எங்கே?அழகு ஒழுகும் திருமுகத்தின் பொலிவு எங்கே? அணி திகழும் தோள் எங்கே? அகன்ற மார்பெங்கே?ஐங்கணை எங்கே? நின் வில்லெங்கே? விளையாட்டெங்கே? என் செய்வேன்? என் கணவா! என்னை விட்டு எங்கே சென்றாய்? அந் நாளில் வானவரும், அயனும் மாலும் காண, அங்கித் தேவன் சாட்சியாக என்னை மணந்தாய்! இனி எந்நாளும் உன்னைப் பிரியேன்” என்று வாக்களித்தாய். வசந்த மன்னனே! என் மனத்திற்கு இசைந்த மன்னனே! எனைத் தனியே விட்டுச் செல்லுதல் முறையோ! முறையோ! "சிவனிடம் போ என்று அனுப்பிய தேவர் எல்லாம் பொடியாகிய உன்னை வா" என்று விரைந்து எழுப்பு மாட்டாரோ? நின் தந்தையாகிய திருமால், பெரும் பேர் படைத்தவராயிற்றே! "ஐயோ" என்று நான் இங்குப் புலம்பி அழவும் அவர் வரக் காணேனே! உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாரோ? அந்தோ! "நெருப்பினால் நீறாவாய்" என்று நின் தலையில் விதித்திருந்தால், அவரையெல்லாம் வெறுக்கலாமோ?பனிநீரைச் சிவிறியால் வீசி விளையாடி, பூங்கானம் போந்து, மலர் கொய்து, மன மகிழ்ந்து, இனிய மஞ்சத்தில் இளந்தென்றல் வீசக் கண்ணுறங்கும் நம் வாழ்வெல்லாம் பொய்யாகிக் கனவு கண்ட கதை யாயிற்றே பெருமையுணராது மருமகன்தானே என்று அவமதித்த தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்த வள்ளலாகிய ஈசுன்மீது வானவர் உன்னைப் போர் செய்ய ஏவினரே! அவராலே பொடி புட்டாயே! என் உயிர்க்குயிரே! ஆறாத பெருந்துயரால் அடியேனும் எரிகின்றேன்; உன்னை நோக்கி வருகின்றேன்;வருகின்றேன்" என்று புலம்பி வருந்தினாள்.
அயன் முதலாய வானவர் துயரம்
இதைக் கண்ட பிரமன் முதலாய தேவர்கள், "நீலகண்டனாய ஈசனிடம் காமதேவனை அனுப்பினோம். அவனையும் அவர் சுட்டெரித்தார்; மெய்யாகிய மெளன நிலையைத் தவிர்ந்தாரில்லை; முன்போலவே அமர்ந்துள்ளார். அந்தோ! இனி என் செய்வோம்?" என்று அயர்ந்தார்கள். பின்பு, திருக்கயிலாய நகரின் கோபுர வாயிலில் எல்லோரும் கூடித் துதிக்கலுற்றார். "எம்பெருமானே! அடியவர்களாகிய எங்களுக்கு அபயம் அளித்து ஆலகாலம் என்னும் நஞ்சை அள்ளி உண்டீர்! விண்ணுக் கடங்காமல் வந்த கங்கையைச் சடைமுடியிலே தாங்கினீர்! எரித்து நீறாக்கவல்ல நெருப்பினை நெற்றிக் கண்ணிலே வைத்தீர்! கொடிய பகைவரைக் கொன்று ஒழித்தீர்! இவ்வாறு காத்தருளிய நீர் இன்று கைவிட்டால் யாரைத் தஞ்சம் அடைவோம்? மைந்தர்க்குத் தந்தையரைத் தவிர வேறு தஞ்சம் உண்டோ? மாசற்ற மெய்யடியார்கள் குற்றம் செய்யினும் குணமெனக் கொண்டு ஆளும் பெருமானே! தும் சேவடியே சரணம் என்றடைந்தோம். நாள்தோறும் சூரன் கொடுமையால் நலிவுற்று நாங்கள் இறப்பதோ? எமது துயரத்தைச் சிறிதேனும் திருவுளத்திற் கொள்ளீரோ? கங்காதரனே! நீர் உமாதேவியை மணந்து எங்களைக் காத்தருளும்வண்ணம் மதியீனர்களாகிய நாங்கள் மதிக்குடையுடைய மன்மதனை அனுப்பினோம். அவன் மேனியை எரித்து நீறாக்கினீர். முன்போல் ஞானமோனத்தில் அமர்ந்தீர்! நும் அடியாராகிய நாங்கள் இங்ஙனம் தளர்தல் தகுமோ? இனியேனும் சிறிது இரங்கியருளிரோ?" என்று அவர்கள் ஓலமிட்டார்கள்.
சிவன் அபயம் அளித்தல்
அப்பொழுது சிவபெருமான் கருணைகூர்ந்து, "வானவர்களே! வருந்தாதீர்கள்; உமக்காக இமய மலையில் உள்ள மங்கையை மணந்து உமது துன்பத்தை ஒழிக்கின்றோம். இனி நீங்கள் செல்லலாம்”என்று சொல்லி அனுப்பினார்.
ரதி முறையீடு
அவர்கள் விடைபெற்றுப் போனபின்னர், ரதி தேவி, தருணம் பார்த்துப் பெருமான் முன்னே போந்து, வணங்கித் துதித்து, "ஆண்டவனே! இறைவனே! இது முறையோ! முறையோ! பிரழன் முதலிய தேவர்கள் செய்த சூழ்ச்சியால் என் கணவன் இங்கே வந்து அழிவுற்றான். அவன் செய்த குற்றத்தைப் பொறுத்து அருள் புரிதல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தாள்.
இங்ஙனம் வேண்டிய ரதியை நோக்கி, ஈசன் அருள் கூர்ந்து, "மாதே! வருந்தாதே! பார்வதி தேவியை நாம் சென்று திருமணம் செய்யும்பொழுது உன் கணவனைத் தருவோம்; செல்க!" என்று விடை கொடுத்தனுப்பினார்; அப்பால், எதிரே இருந்த சனகாதி முனிவரை நோக்கி, "நற்றவர் மைந்தர்களே! ஞான போதம், சொற்களில் அடங்குவதன்று; துயரம் நீங்கி, இவ்வண்ணம் மெளன நிலையில் இருந்து நம்மைச் சிந்தித்திலே ஆகும்" என்று உள்ளங்கொள்ள உணர்த்தினார். "அப்போது அருந்தவ முனிவர் நால்வரும் சிவபெருமான் சேவடிகளைச் சிந்தையாரத் தொழுது, "மயக்கம் தெளிந்திரோம்;கடைத்தேறினோம்” என்று போற்றிச் சென்றார்கள்.