மலைக் குரங்கு

bookmark

இந்துக் குடும்பத்தில் மாமியார் மருமகள் சன்டை இல்லாத குடும்பமே அபூர்வம். கணவன் ஆதரவாக இருந்தால் கூட மகனிடத்தில் தன்னுடைய செல்வாக்குக் குறைந்து விடுமென்று மாமியார் மருமகளோடு சண்டை போடுகிறாள். இப்பாடலில் வரும் மருமகளுக்குச் செல்வத்துக்குக் குறைவில்லை. அவளுடைய கணவனுக்கு நல்ல செழிப்பான பூமி இருக்கிறது. அவளுடைய கணவனும் நல்ல புத்திசாலி. ஆனால் மாமியார் தொந்தரவுதான் தாங்க முடியவில்லை. மாமியார் மீது அவளுடைய கோபம் வெளியாகிறது.

பூமியுந்தான் நல்ல பூமி
எனக்கு வாய்த்த
புண்ணியரும் புத்திசாலி
புண்ணியரைப் பெத்தெடுத்த
பெருங்குரங்கே தொந்தரவு
மண்ணுந்தான் நல்ல மண்ணு
எனக்கு வந்த
மன்னவரும் புத்திசாலி
மன்னவரைப் பெத்தெடுத்த
மலைக்குரங்கே தொந்தரவு

வட்டார வழக்கு: பெருங்குரங்கு-மலைக்குரங்கு ; புண்ணியரும்-கணவரும்.
உதவியவர் : தங்கம்மாள் சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்
-----------