மாரடிப் பாட்டு-2 (2)

bookmark

தென்னம்பாய் தானெடுத்து
தெருவெல்லாம் பந்தலிட்டார்
சேப்பில் பணம்எடுத்தார் ;
சென்னப்பட்டணம் கொட்டழைச்சார்
கையில் பணம் எடுத்தார் ;
பவனி வாத்தியம் வரவழைச்சார்
அடிபடுதே மேளவகை
ஆசார வாசலுலே
முழங்குதையா மேளவகை
மூவுலகம் தத்தளிக்க
வெள்ளித் தேர் செய்தோமானால்
வேலையோடிப் போச்சுதிண்ணார்
பொன்னுத் தேர் செய்தோமானால்
பொழுதோடிப் போச்சிதிண்ணார்
மதுரைக்கு ஆளனுப்பி
மச்ச ரதம் கொண்டு வந்தார்
செஞ்சிக்கு ஆளனுப்பிச்
சேர்த்த ரதம் கொண்டு வந்தார்
காசியிலே பட்டெடுத்தால்
கனமோ குறையுமிண்ணார்
மதுரையிலே பட்டெடுத்தால்
மடிப்போ குறையுமிண்ணார்
விருதுநகர் பட்டெடுத்தால்
விரிப்போ குறையுமிண்ணார்
சாத்தூருப் பட்டெடுத்தால்
சபையோ நிறையாதிண்ணார்
பெரு நாளிப் பட்டெடுக்கப்
புறப்பட்டார் பிறந்தவரும்
நாலுகடை பார்த்து
நயமான மல்லெடுத்து
கொண்டுமே வாராராம்
கூடப் பிறந்தவரும்
வரிசை மகள் சேலைகொண்டு
வாராராம் வீதியிலே
செல்வ மகள் சேலைகொண்டு
தெருவீதி வாராளாம்
கொட்டு முழக்கமுடன்
கொண்டு வந்தாள் பந்தலுக்கு

நாலு பேர் செம்பெடுத்தால்
நடுங்கும் கைலாசம்
மூணுபேர் செம்பெடுத்தால்
முழங்கும் கைலாசம்
ஆழமுள்ள கங்கையிலே
அலரத் தலைமுழுகி
நீள முள்ள கங்கையிலே
நின்னு தலைமுழுகி
ஏழாறு தான் கடந்து
எடுத்து வந்தார் நல்ல தண்ணீர்
அஞ்சாறு தான் கடந்து
அள்ளி வந்தார் நல்ல தண்ணீர்
மூணாறுதான் கடந்து
மோந்து வந்தார் நல்ல தண்ணீர்
செங்கை மடைதிறந்து
செம்பு கொண்டு நீர் மோர்ந்து
மாராடி நூல்போட்டு
மாவிலையும் கையிலெடுத்து
கெண்டி மேல் தேங்காய் வச்சி
செவ்வரளி மாலைபோட்டு
ஒரு மகனும் செம்பெடுத்தால்
ஓடி வரும் நீர்மாலை
குளுப்பாட்டி கோடிகட்டி
கொண்டு வந்தார் பந்தலுக்கு
மாலை கையிலெடுத்தார் ;
மரக்கால் தலையில் வைத்தார்
காசி காசியிண்ணு சொல்லி
கட்டி மகன் நீர் தெளிச்சார்
சுத்தி வந்து நீர் தெளிச்சு
சூரியரைக் கையெடுத்தார்
பக்கம் வந்து நீர் தெளிச்சு
பகவானைக் கையெடுத்தார்
சீதேவி தான் வாங்கி
ஸ்ரீராமர் வீடுசேர்ந்தார்
வெள்ளி படி கடந்து
வெளியேறச் சம்மதமோ
பொன்னும் படி கடந்து
போகவும் சம்மதமோ

ஏழு நிலைக் கோபுரமாம்
ஈஸ்வரனார் பட்டணமாம்
ஈஸ்வரனார் பட்டணத்தை
இருந்து ஆளப் போறீயளோ
அஞ்சி நிலைக் கோபுரமாம்
ஐவரோட பட்டணமாம்
ஐவரோட பட்டணத்தை
அரசாளப் போறீயளோ
மூணு நிலைக் கோபுரமாம்
மூதாக்கள் பட்டணமாம்
மூதாக்கள் பட்டணத்தை
முடிசூட்டப் போறீயளோ
ஒத்துமையாய் ஊராரும்
உல்லாசத் தேர் தூக்கி
பெத்த மகன் முன்னடக்க
பெரியோர்கள் பின்னடக்க
உற்ற மகன் முன்னடக்க
உற முறையாற் பின்னடக்க
சந்தியிலே போற ரதம்
தங்க ரதம் யாரு ரதம்
தருமரைப் பெற்றெடுத்த
தங்க ரதம் போகுதென்பார்
வீதியிலே போற ரதம்
வெள்ளி ரதம் யாரு ரதம்
வீமரைப் பெற்றெடுத்த
வெள்ளிரதம் போகுதென்பார்
முக்குக்கு முக்கல்லவோ
முடிமன்னர் தோள்மாத்த
சந்திக்கு சந்தியல்லோ
சதிர் மன்னர் தோள்மாற்ற
முக்குத் திருப்பி விட
மூத்த மகன் எங்கே யென்பர்
மந்தையிலே தேரிறக்கி
மல்லிகைப்பூ சூறையிண்ணார்
கரையிலே தேரிறக்கி
கயிலாசம் போறேனிண்ணார்.
வருகுதையா பூந்தேரு
வைகுந்தம் தெத்தளிக்க

போகுதையா பூந்தேரு
பூலோகம் தெத்தளிக்க
இண்டு மணக்குதையா
இடுகாடு பூமணக்கும்
வாயை மணக்குமையா
வைகுண்டம் பூமணக்கும்
இடு காடு தேரிறக்கி
எமலோகம் போறேனிண்ணார்
சுடுகாடு தேரிறக்கி
சொர்க்க லோகம் போறேனிண்ணார்
தேரை விட்டுக் கீழிறக்கி
செல்ல மக்கள் வந்து கூடி
பொன்னரசி கையிலெடுத்து
போட்டார்கள் வாய்க்கரிசி
சந்தனக் கட்டை வெட்டி
சதுருடனே தீ மூட்டி
கொள்ளி வச்சி குடமுடைச்சி
கோலவர்ணத் தேரவுத்து
செலவு தொகை தான் கொடுத்து
செல்ல மகன் தலைமுழுகி
சிவ சிவா என்று சொல்லி
திருநீறும் தானணிந்தார்.

குறிப்பு : இதில் சாவுச் சடங்குகள் வரிசையாகச் சொல்லப்படுகின்றன.

சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
-----------