மில்லாபீசு

bookmark

பழைய தொழில்களில் மனிதனது தசைநார்களே உழைக்கச் சக்தியாகப் பயன்பட்டது. உதாரணமாக நெசவு செய்ய வேண்டுமானால் நெசவாளி கையையும் காலையும் வருத்தி உழைக்க வேண்டும்.

கோவில்பட்டியிலிருந்து பிழைக்கச் சென்ற நிலமிழந்த உழவர்கள் மில்லில் வேலைக்குச் சேருகிறார்கள். அவர்களுக்கு மில்லில் உள்ள இயந்திரங்களும், அவர்களை வேலை வாங்கும் இஞ்சினியரும் புதுமையாகத் தோன்றுகின்றன.

ஏதோ ஒரு `சூச்சியத்தை` தட்டிவிட்டால் தன்னாலேயே ரோதை உருளுகிறது. அதை ஓடச்சொல்லிவிட்டு நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார் இஞ்சினியர்.
அவனது வியப்பு இப்பாடலாக உருவாகிறது.

கடலுக்கு நேர் மேக்கே
காராக்கட்டிடம் மெல்லாவுசு
இரும்புனால ரோதைகளாம்
இருகரையும் சூச்சியமாம்
தன்னாலே ஓடச் சொல்லி
தாங்குதானே இஞ்சின்துரை
பட்டிக்காட்டு பருத்திகளை
பட்டணத்து ரோதைகளை
ஓடாத ரோதைகளை
ஓட்டிவைப்பார் தாடிதுரை.

வட்டார வழக்கு: மெல்லாவுசு-மில் ஆபீசு ; ரோதை-சக்கரம் ; சூச்சியம்-ஸ்விட்ச் ; இஞ்சின் துரை-இஞ்சினியர்.

சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டம்.
-------- 
அவன் மில்லில் வேலை பார்க்கிறான். நூல் விலையாகிறது. முதலாளிக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால் அவன் வீட்டிலிருக்கும் குமரிக்குக் கலியாணம் செய்ய வழியில்லை. நூல் விலையாகிவிட்டதாம். குமரி விலையாகவில்லையாம்.

நூறு அடியாய் கோபுரமாம்
நூலு நூக்கும் மில்லாவுசு
நூலு விலை ஆகிட்டாலும்
குமரி விலை ஆகல்லையே !

தொழிலாளர் வாழ்க்கை நிலையை இப்பாடல் எவ்வளவு நன்றாகச் சித்திரிக்கிறது !
---------------